ஏஞ்சல் வரினா என்னங்க? எதாவது நல்லது செய்வதற்கும் வரி போடுறாங்களோ !!! எனப் பதற வேண்டாம். ஏஞ்சல் வரி என்பது, ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்யும் இந்தியாவில் வசிக்கும் முதலீட்டாளர்களின் வரிவிதிப்பில் அரசு செய்துள்ள மாற்றங்களைக் குறிக்கிறது.
ஏஞ்சல் வரி என்றால் என்ன?
தனியார் நிறுவனங்கள் பெரும்பாலும் முதலீடுகளைப் பங்கு முதலீடாக வெளிநபர்களிடம் பெறும். இவ்வகை முதலீடுகள் நிறுவனத்தின் நியாயவிலையின் (Fair Price) மீது தவணைத்தொகையாகப் பெறப்படுகிறது. அதன்மூலம் திரட்டப்படும் தொகை நியாயவிலையை விட அதிகமாக இருக்கும் பட்சத்தில், அதிகப்படியான தொகைக்கு வரிவிதிக்கப்படும். வருமானவரி சட்டத்தின் 56(ii) பிரிவின் கீழ் 'பிற ஆதாரங்களில் இருந்து பெறும் வருமானம்' என்ற பெயரில் 30.9% வரிவிதிக்கப்படுகிறது. இந்தியாவில் வசிக்கும் முதலீட்டாளர்களின் முதலீட்டுக்கு, நன்கு வளர்ச்சியடைந்த தனியார் நிறுவனங்களுக்கு மட்டுமில்லாமல் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும் இது பொருந்தும்.
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மிகக் குறைந்த அளவே முதலீட்டு ஆதாரங்களைக் கொண்டிருப்பதால், முதலீட்டாளர்களும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் அதிக வரியை நீக்க வலியுறுத்தி வந்தனர். ஏற்கனவே இந்தியாவில் வசிக்காதவர் முதலீட்டுக்கும், நிறுவனத்தின் மூலதன தொகைக்கும் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஏஞ்சல் வரியின் கீழ் புதுமையான ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்யும் இந்தியாவில் வசிக்கும் முதலீட்டாளர்களுக்கும் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வரிவிலக்கை பெற கீழ்கண்ட தகுதிகளை நிறுவனம் பெற்றிருக்க வேண்டும்.
1) வயது (5வருடத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்)
2) விற்றுமுதல்- Turnover(25கோடிக்கு மிகாமல்)
3)நோக்கம் ( புதிய சேவை அல்லது தயாரிப்பை உருவாக்குதல்)
4) முறை ( தொழில்நுட்பம் அல்லது அறிவார்ந்த சொத்து - Intellectual property)
மேலும், நிறுவனம் புதுமையான ஸ்டார்ட் அப் என அமைச்சகங்களுக்கு இடையேயான சான்றிதழ் அமைப்பு அங்கீகாரம் அளிக்க வேண்டும்.
ஏஞ்சல் வரி ஏன் அவ்வளவு முக்கியம்?
ஏஞ்சல் வரி என்பது சில காரணங்களால் மிகவும் பிரச்சனையான ஒன்றாக இருந்தது. முதலாவது பிரச்சனையாக, ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் மதிப்பை அதன் சொத்துக்களை வைத்து மட்டுமே கணக்கிடுவது சரியானதல்ல. மேலும், அதன் நிலையில்லா பணபரிமாற்றத்தை வைத்து 'நியாயவிலையை'க் கண்டறிவதும் சுலபமல்ல. எனவே நிறுவனங்களின் மதிப்பு சில சமயத்தில் மிக அதிகமாகவும், மற்ற சமயத்தில் சரியாகவும் மதிப்பிடப்பட்டன.
அதிகத் தொகை
இரண்டாவதாக, அதிக அளவிலான தொகை முதலீடாகக் கிடைக்கும் போது, குறைந்த அளவே பங்குகள் இருக்கும் என்பதால் அது நிறுவனர்களுக்குச் சாதகமாக அமையும். இந்த வர்த்தகங்கள் நடப்பதை பார்த்தால், சரியான நிதி திட்டங்களோடு நடைபெறுகிறதா என்பது சந்தேகமே!
இந்த வரி, 2012 பட்ஜெட்டில் எதிர்ப்புத் துஷ்பரயோகம் பிரிவின் கீழ் கணக்கில் வராத வருமானத்தை வெளிக்கொணர அறிமுகபடுத்தப்பட்டது. இப்போது இந்த வரிசலுகையால், பல புதுமையான நிறுவனங்கள் ஆரம்பிக்க வாய்ப்புள்ளது.
வரிச் சலுகைகள்
மூன்றாவதாக, ஏஞ்சல் முதலீட்டாளர்களின் மீதான வரியை எதிர்த்த வேளையில் , அமெரிக்கா போன்ற நாடுகளில் சிறு நிறுவனங்களில் முதலீடு செய்பவர்களுக்குப் பல்வேறு வரிசலுகைகள் வழங்கப்பட்டன. மேலும் வரியை சேமிக்க ஒரு சிறுநிறுவனத்தில் கிடைக்கும் லாபத்தை வேறு சிறு நிறுவனத்தில் முதலீடு செய்யலாம். ஆனால், இந்தியாவில் சிறு நிறுவனங்களில் செய்யும் முதலீடுகளைச் சந்தேகக் கண்ணுடன் பார்த்தனர். எனினும், இப்போது அளிக்கப்பட்ட இந்த வரிசலுகை வரவேற்கப்படகூடியது.
இதில் எதற்குக் கவனம் செலுத்த வேண்டும்?
ஸ்டார்ட் அப் நிறுவனர்களுக்கு, முதலீட்டு நிறுவனங்களும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுமே முக்கிய நிதி ஆதாரங்கள். ஏஞ்சல்கள் (இந்தியாவில் வசிக்கும் முதலீட்டாளர்கள்) எப்போதும் மூலதனத்தில் சிறிய பங்கை முதலீடாகத் தருவர். எனவே, இந்த வரிவிலக்கு புதிய உள்நாட்டு முதலீட்டாளர்களையும் உருவாக்கலாம். பல புதிய தொழில்முனைவோரை கோடீஸ்வரர்களாக்கலாம். யார் அறிவார்?
உள்நாட்டு முதலீட்டாளர்கள்
நீங்கள் உள்நாட்டு முதலீட்டாளர்களாக இருந்து , ஏஞ்சலாக இருக்க விரும்பினாலும் சான்றிதழ் பெற்ற ஸ்டார்ட் அப் களுக்கு மட்டுமே வரிவிலக்கு என்பதை நினைவிற்கொள்க. இதுவரை எந்தவொரு நிறுவனத்திற்கும் அந்தச் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்றும், விண்ணப்பிக்கும் ஒரு சில நிறுவனங்களில் 1-2% நிறுவனங்களே சான்றிதழ் பெறும் தகுதியை பெற்றிருக்கும் எனவும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இது நல்லதொரு மாற்றம் எனில், பல நிறுவனங்கள் வானில் சிறகடித்து மேலும் மேலும் உயரப்பறக்க வாழ்த்துவோமாக..