வீட்டுக்கடன் போன்ற நீண்டகாலக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவது என்பது நமது பொருளாதார லட்சியங்களை அடைய நிச்சயம் ஒரு தடைக்கல்லாகத்தான் இருக்கும். எனவே, நம் கடன் சுமையைக் குறைக்கவும், சேமிப்பை வளப்படுத்தவும் வீட்டுக்கடனைச் சீக்கிரம் அடைக்க ஆர்வம் காட்டுவோம். நமக்கு ஏதேனும் ஒரு வகையில் அதிகப்படியான பணம் வந்தவுடன் இந்தக் கடனை கட்டிவிடவேண்டும் என எண்ணுவோம். ஆனால் அது அவ்வளவு சுலபமில்லை. இதுபோலக் கடன் பெரும்போது கவனிக்கவேண்டிய முக்கிய அம்சங்கள் இங்கே.
கடன்திட்டத்தை முழுமையாக அறியுங்கள்
நமது பல்வேறு பொருளாதாரத் தேவைகளுக்கு ஏற்ப வங்கிகள் பலவிதமான கடன்திட்டங்களை வைத்துள்ளன. உங்களின் தேவையறிந்து, பொருளாதார நிலைக்கு ஏற்றவாறு கடன்திட்டத்தைத் தேர்வு செய்ய வேண்டும். எடுத்துகாட்டாக, எதிர்காலத்தில் எந்தத் தொந்தரவும் தராத அளவுக்குக் கடன் தொகை இருக்கவேண்டும்.
வரிச்சலுகைகளை மனதில் கொள்ளுங்கள்
என்னதான் நீங்கள் வீட்டுக்கடனை விரைவாகச் செலுத்த வேண்டும் என முனைந்தாலும், அதன்மூலம் கிடைக்கும் வரிச்சலுகைகளை மறந்துவிட வேண்டாம். ஆண்டு முழுதும் செலுத்தும் தவணைக்கு, அதிகபட்சமாக 1,50,000 வரை 80C பிரிவின் கீழ் வரிவிலக்குக் கோரலாம். வீட்டுக்கடன் வட்டிக்கு, 24B பிரிவின் கீழ் 2 லட்சம் வரை வரிவிலக்குக் கோரலாம். சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு , வீட்டுக்கடனுக்கு மேலும் சில வரிச்சலுகைகளும் உள்ளன.
எனவே, வீட்டுக்கடனை முன்கூட்டியே முழுமையாக அடைத்தால் இந்த வரி சலுகைகளை இழக்க நேரிடலாம். உங்கள் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு , கடனை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ அடைக்க முடிவு செய்யலாம்
கடனை திருப்பிச் செலுத்த திட்டம் வகுத்துக்கொள்ளுங்கள்
கடனை முன்கூட்டியே திருப்பிச் செலுத்துவதன் முக்கிய நோக்கமே, வட்டியை குறைப்பது தான். கடனின் தவணைகளை அட்டவணைபடி கடைசி வரை செலுத்தினால், அதிகப்படியான தொகையை வட்டியாகச் செலுத்த நேரிடும். அந்த அதிகவட்டியை சேமிக்கும் பொருட்டு நம் கடனை முன்கூட்டியே அடைக்கத் திட்டமிட வேண்டும்.
இருவகை
கடன்தொகையைத் திரும்பச் செலுத்தும் போது, கடன் வழங்கும் நிறுவனம் இருவகைத் தவணைத்திட்டங்களை வழங்குகிறது.
1) கடனின் தவணைத்தொகையைக் குறைத்து, திருப்பிசெலுத்தும் காலத்தை அப்படியே தொடரலாம்.
2) திருப்பிசெலுத்தும் கால அளவை குறைத்து , தவணைத்தொகையை அப்படியே தொடரலாம்.
இதில் ஏதேனும் ஒன்றை உங்களின் பொருளாதார நிலையை மனதில் கொண்டு கவனமாகத் தேர்வு செய்வது அவசியம்.
தவணைதொகையைச் செலுத்தும் சுமை
தவணைதொகையை நீங்கள் சில காலம் செலுத்திய பின்பு, அது மாதாந்திர நிதிநிலையில் எவ்வளவு விழுங்குகிறது எனத் தெரிந்துவிடும். அதை, உங்கள் பட்ஜெட்டில் அடக்கி விட்டால் பெரும் சுமையாக இருக்காது. அப்படி இல்லையெனில், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவாகக் கடனை அடைப்பது நல்லது.
முன்கூட்டியே திருப்பிசெலுத்தும் தொகை
முன்கூட்டியே கடனை அடைப்பது என்பது நல்ல முடிவாக இருந்தாலும், கல்வி, மருத்துவம், காப்பீடு போன்றவற்றிற்கு வைத்துள்ள பணத்தை இதற்குப் பயன்படுத்துவது நல்லதல்ல. எனவே, தேவைக்கு அதிகமாக இருக்கும் பணத்தை இங்குப் பயன்படுத்துவது எதிர்காலத்திற்கு நன்மைபயக்கும்.