இன்றைய நவீன உலகில் பெரும்பாலான இளம் தலைமுறையினர் எதிர்காலம் பற்றிய சிந்தனை இல்லாமல் சேமிப்பு மற்றும் முதலீடு பற்றிச் சிந்திக்காமல் இருக்கும் வரை வாழ்க்கையை நன்கு அனுபவித்து விட வேண்டும் என்னும் கருத்தை கொண்டிருக்கிறார்கள்.
என்னதான் இந்தக் கருத்து பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் வயது முதிர்ந்த காலத்தை மகிழ்ச்சியாக அனுபவிக்க இப்போதே திட்டமிட வேண்டியது மிக அவசியம்.
திரைப்படம்
மேலும் திரைப்படங்கள் பார்த்து அதில் வரும் கதாநாயகர்கள் போல உடை உடுத்துவது, அவர் பயன்படுத்தியதை போன்ற வாகனம் வாங்குவது, அழகு படுத்துவது, மது அருந்துவது, அவர் சொல்லும் உணவை உண்ணுவது என எதிர்காலம் பற்றிய சிந்தனை இல்லாமல் தற்போதைய வரவை அப்படியே செலவு செய்கின்றனர். இது பற்றிய விழிப்புணர்வு தேவைப்படுகின்ற இந்த நேரத்தில் நவீன உலகமும், சமூக ஊடகங்களும் இதை இன்னும் மோசமாக்குகின்றனவே தவிர நிவர்த்திச் செய்ய முயற்சி செய்யவில்லை.
எதிர்கால வாழ்க்கை
இந்தக் கட்டுரையின் மூலம் உங்களின் செலவை குறைத்து எதிர்கால வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ எவ்வாறு திட்டமிடுவது எனப் பார்க்கலாம். எங்களைப் பொறுத்த வரை உங்களின் செலவு மற்றும் முதலீடு எப்போதும் சம நிலையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் இளைஞர்கள் தங்களின் 30களில் செய்யும் தவறுகள் உங்களின் வயதான காலத்தைப் பாதிக்கும், அவற்றில் கவனிக்க வேண்டிய 5 முக்கியத் தவறுகள் என்ன என்னவென்று பார்க்கலாம்.
பணத்தின் மதிப்பைப் புரிந்து கொள்ளுதல்:
காலம் செல்ல செல்ல பணத்தின் மதிப்பு குறையும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். இப்போது உங்களின் கையில் இருக்கும் 1 லட்சம் ரூபாய் இன்னும் பத்து வருடங்களில் 30-40 ஆயிரம் ரூபாய் மதிப்பு மட்டுமே கொண்டிருக்கும். தெளிவாகக் கூற வேண்டுமானால் இன்று நீங்கள் குடிக்கும் தேனீர் 10 ரூபாய், இதே தேனீர் 2005ல் 5 ரூபாய்க்கும் குறைவு அதே நேரத்தில் 2023ல் 15 ரூபாய்க்கு விற்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.
இது போன்ற கால ஓட்டத்தில் உங்களின் சேமிப்பு மட்டும் உங்களின் எதிர்காலத் தேவைக்குப் போதுமானதாக இருக்காது எனவே முதலீடு திட்டங்களும் தேவை என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். பண மதிப்பிழப்பு மற்றும் உங்களின் எதிர்காலத் தேவை இரண்டையும் கருத்தில் கொண்டு சேமிப்பு மற்றும் முதலீடு திட்டங்களைத் தேர்வு செய்யுங்கள்.
மருத்துவக் காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு திட்டங்களைக் குறைத்து மதிப்பிடுதல்:
மருத்துவக் காப்பீடு திட்டங்களைக் குறைத்து மதிப்பிடுதல் மற்றும் ஆயுள் காப்பீடு திட்டங்களை இளமைப் பருவத்திலேயே தொடங்காதிருப்பது போன்ற தவறுகள் உங்களின் எதிர்கால வாழ்க்கையின் நிம்மதியை கேடுத்து விடும். உங்களின் எதிர்பாராத மரணம் உங்களின் குடும்ப உறுப்பினர்களின் மகிழ்ச்சி மற்றும் உங்கள் குழந்தையின் கனவுகளைக் களைத்து விடும். எனவேதான் மருத்துவக் காப்பீடு மிக அவசியம் அது உங்களின் குடும்பத்தை எதிர்பாராத இழப்புகளில் இருந்து காப்பாற்றும். மேலும் காலம் தாழ்த்தித் தொடங்கப்படும் ஆயுள் காப்பீடு திட்டங்கள் அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கும் அதே நேரத்தில் முதிர்ச்சி காலத்தில் குறைந்த அளவே திரும்பக் கிடைக்கும். எனவே இளமைப் பருவத்திலேயே ஆயுள் காப்பீடு திட்டங்களில் முதலீடு செய்யுங்கள்.
அதிக வீட்டு கடன் மற்றும் அதிகமாகக் கடன் (க்ரிடிட் கார்டு) அட்டைகளைப் பயன்படுத்துதல்:
அதிக வீட்டு கடன் பெற்று உங்களின் வருமானத்திற்கு இணையாக மாத தவணை செலுத்துவதைத் தவிர்த்திடுங்கள். ஒரு கடன் திட்டம் முடிந்தவுடன் தேவைப்பட்டால் மட்டும் அடுத்தக் கடனை பெறுங்கள். உங்களின் வருமானத்தின் பெரும் பகுதியைக் கடன் தவணை செலுத்தினால், உங்களுக்குச் சேமிப்பதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடும், உங்களின் இளமைக் காலத்தில் சேமிக்காவிடில், உங்களின் ஓய்வு வயதில் மிகவும் கஷ்ட பட வேண்டிருக்கும். எனவே உங்கள் வருமானத்தில் ஒவ்வொரு மாதமும் குறைந்த பட்சம் 20 முதல் 30 சதவீதம் வரை சேமிப்பிற்கு ஒதுக்குங்கள்.
மற்றுமொரு மறைமுகக் காரணம், உங்களின் சேமிப்பை எப்பொழுதும் சாப்பிடும் காரணி கடன் (க்ரிடிட் கார்டு) அட்டைகள், தேவை இல்லாத செலவுகளை இழுத்து விட்டு உங்களைத் தவிக்க விடும் எனவே முடிந்த அளவு கடன் அட்டைகளைப் பயன்படுத்துவதைத் தவிருங்கள். கடனைப் பெறுவதற்கு முன் எவ்வாறு சேமிப்பை பாதிக்காமல் திரும்பச் செலுத்துவது என்று திட்டமிடுவது நல்லது. வாரன் பஃபட் அவர்கள் மிகச் சரியாகச் சொல்லிருக்கிறார் அதாவது நீங்கள் இன்றைக்குத் தேவை இல்லாததை வாங்கினால், நாளை உங்களுக்குத் தேவையானதை விற்க வேண்டி இருக்கும்.எனவே தேவைக்காக வாங்குங்கள் ஆசைக்காக வாங்காதீர்கள்.
சேமிப்பு மற்றும் முதலீடுகளைப் புரிந்து கொள்ளுதல்:
நம்மில் பலர் சேமிப்பு மற்றும் முதலீடு செய்வது இரண்டும் ஒன்றே என்னும் கருத்தை கொண்டுள்ளனர். உண்மையைச் சொல்ல போனால் இரண்டிற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. சேமிப்பு என்பது உங்கள் வருமானத்தின் குறிப்பிட்ட தொகையைத் தொடர்ந்து வங்கியில் வைப்பது. நீங்கள் செலவுகளைக் குறைத்துக் கொண்டால் உங்களின் சேமிப்பு உயரும், உங்களின் எதிர்காலத்திற்கு உதவும். முதலீட்டுத் திட்டங்களைச் சேமிப்பின் அடுத்த நிலை எனக் கூறலாம்.
காலம் செல்ல செல்ல உங்களின் முதலீட்டின் மதிப்பு உயரும் உங்களின் வருமானம் இரட்டிப்பாகும். மறுபக்கம் வங்கியில் உள்ள சேமிப்பின் மீது வரும் வட்டி பண மதிப்பிறக்கத்தினால் ஏற்படும் இழப்பைக் கூட ஈடு செய்யாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே ஒரு குறிப்பிட்ட அளவு செமித்த பின் முதலீடு திட்டங்களான மியூச்சுவல் ஃபண்ட்ஸ் , பங்கு வர்த்தகம் ஆகியவற்றில் முதலீடு செய்வது நல்லது.
எல்லாம் தெரியும் என்ற எண்ணம்:
உங்களின் பொருளாதாரத் தேவைகளை உங்களின் தேவையின் அளவு மற்றும் அதன் அவசியத்தைக் கொண்டு திட்டமிடுதல் வேண்டும். சற்று விளக்கமாகக் கூற வேண்டுமானால் உங்களின் எதிர்காலத் தேவைகள் என்ன, அதற்கு எவ்வளவு முதலீடு தேவை அவற்றை எங்கே, எப்பொழுது, எப்படிச் செய்வது எனச் சிக்கலான செயல்முறைகளைக் கொண்டது. எனவே எனக்கு எல்லாம் தெரியும் என்று எண்ணாமல் நிதி ஆலோசகர்களிடம் கலந்தாலோசித்துப் பின்பு முடிவு எடுப்பது சாலச்சிறந்தது.
ஏனென்றால் உங்களின் சிறு தவறு கூட உங்களை அதல பாதாளத்தில் தள்ளி விடும்.
ஆச்சர்ய குறி!! கேள்விக் குறி??
கடனும் சரி சேமிப்பும் சரி அதிகரித்துக் கொண்டே இருக்கும், சிறியதாய் தெரியும் தொகை ஒரு நாளில் பெரியதாய் வளர்ந்து நிற்கும்..... வளர்ந்து நிற்பது சேமிப்பாக இருந்தால் உங்களின் வாழ்க்கை ஆச்சர்ய குறி ஆகிவிடும்!!!. அதுவே கடனாக இருந்தால் வாழ்க்கை கேள்வி குறி ஆகிவிடும்???.