ஒரு சமூகத்தில் அனைவரையும் பலவகையில் இணைக்கும் வேலையைச் செய்வது பணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. மனிதன் வாழ்வதற்கான முக்கியத் தேவைகளை நிறைவேற்ற பணம் முக்கியப் பங்காற்றுகிறது. தனிப்பட்ட அல்லது ஒரு சமூகத்தின் எந்தத் தினசரி நடவடிக்கைகளும் பணமில்லாமல் நகர்வது மிகக்கடினம்.
இந்நிலையில் தனி நபர் அல்லது ஒரு நிறுவனம் தமது பணத்தைப் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கவும், அதனைத் தேவையானபோது எடுக்க உருவாக்கப்பட்டதே வங்கிகள். ஒரு நாட்டில் நிதி ஸ்திரத்தன்மையை உருவாக்குவதில் வங்கிகள் முக்கியப் பங்காற்றுகின்றன. வங்கியில் பல வகையான கணக்குகள் உள்ளன. சம்பளக் கணக்கு அவற்றில் ஒன்று.
சம்பளக் கணக்கு என்றால் என்ன?
சம்பளம் என்பது பணியாளரின் உழைப்புக்கு முதலாளிகளால் வழங்கப்படும் ஊதியத்தின் வடிவமாகும், இது பொதுவாக வேலை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். பணியாளருக்குச் சம்பளத்தை வழங்குவதற்காகப் பணியமர்த்துபவரால் பராமரிக்கப்படும் கணக்கே சம்பளக் கணக்கு எனப்படுகிறது. இந்தியாவில் பெரும்பாலான வங்கிகள் இந்தச் சம்பளக் கணக்கு வசதியைக் கொண்டுள்ளன. இது பொதுவாக ஜீரோ பாலன்ஸ் கணக்கு என்றும் அழைக்கப்படுகிறது.
சம்பளக் கணக்கின் முக்கிய அம்சங்கள் என்ன?
• முதலாளிகள் தன் பணியாளர்களின் சார்பில் இந்தக் கணக்கை தானே தொடங்குகிறார்கள்.
• இதன் பிரதான நோக்கம் ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்குவதாகும்.
• மற்ற கணக்குகளைப் போல எந்தக் குறைந்த பட்ச நிதியையும் பராமரிக்கத் தேவையில்லை.
• சம்பளக் கணக்கில் வட்டி வழங்கப்படாது.
• இந்தக் கணக்கில் தொடர்ந்து மூன்று மாதங்கள் சம்பளம் வராவிட்டால் வங்கிகளால் இவை சேமிப்பு கணக்காக முறைப்படுத்தப்படும்.
சேமிப்பு வங்கிக் கணக்கு என்றால் என்ன?
இது டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு நிர்ணயிக்கப்பட்ட வட்டியை வழங்கக்கூடிய ஒரு வங்கிக் கணக்காகும், ஆனால் பரிமாற்ற நேரத்தில் நேரடிப் பணமாகப் இதைப் பயன்படுத்த முடியாது. இத்தகைய கணக்குகளின் பணத்தைத் திரும்பப் பெறும் போது அவற்றை ரொக்க சொத்துகளின் ஒரு பகுதியாக ஒதுக்கி வைக்க வேண்டும்.
சேமிப்பு வங்கி கணக்குகளின் அம்சங்கள்
• இந்தக் கணக்கின் ஒரே நோக்கம் மக்களிடையே சேமிப்பை ஊக்குவிப்பது.
• சேமிப்பு வங்கி கணக்கை எவராலும் திறக்க முடியும்.
• வைப்புக் கணக்கில் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச தொகை கட்டாயமாகப் பராமரிக்கப்பட வேண்டும்.
• இக்கணக்கில் ,சேமிப்புத் தொகைக்கேற்ற நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதம் வழங்கப்படும் .
• சேமிப்பு வங்கிக் கணக்கில் ஓவர் ட்ராப் வசதி கிடையாது.
• ஊதியம் பெறும் நபர்களுக்கு இது சிறந்தது.
சம்பளக் கணக்கு டூ சேமிப்பு கணக்கு
பணியாளரின் வங்கிக் கணக்கிற்கு மாதாந்திர அடிப்படையில் சம்பளம் முதலாளிகளால் வழங்கப்படும். மூன்று மாதங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து பணியாளர்களின் வங்கிக் கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்படாவிட்டால், சம்பளக் கணக்கானது சேமிப்பு வங்கிக் கணக்காகக் கருதப்படும்.
அதன் பிறகு சம்பளக் கணக்கை, வங்கிகள் சேமிப்புக்கணக்கின் அனைத்து அம்சங்களையும் விதிமுறைகளையும் கடைப்பிடிக்கும் வகையில் மாற்றியமைக்கும்.
மாற்றுவது எப்படி ?
உங்களது சம்பள கணக்கில் வங்கிக்கு சென்று அதற்கான விண்ணப்பத்தைப் பெற்று கோரிக்கையை நிரப்பிக் கொடுத்தாலே போதும், சம்பள கணக்கை சேமிப்பு கணக்காக நீங்களே மாற்றிக்கொள்ளலாம். இதன் மூலம் உங்களுக்குத் தெரியாமலேயே வங்கிகள் விதிக்கும் அபராதத்தில் இருந்து நீங்கள் தப்பிக்க முடியும்.
கணக்கு மாற்றத்துக்குப் பிறகு கவனிக்கவேண்டியவை:
சம்பளக் கணக்கின் ஒப்பந்தம் வங்கிக்கும் கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் இடையில் இருந்தாலும், இம்மாற்றத்திற்குப் பிறகு சம்பளக் கணக்கின் நன்மைகளை வங்கிகள் வழங்குவதில்லை.
கணக்கு மாற்றத்துக்கு முன் நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:
சம்பளக் கணக்கிலிருந்து சேமிப்புக் கணக்கிற்கு மாறுவதற்கு முன்பாகக் கணக்கு வைத்திருப்பவர் நினைவில் வைக்கவேண்டிய சில விஷயங்கள் பின்வருமாறு,
குறைந்தபட்ச இருப்புத் தொகை தேவைகள்:
சேமிப்புக் கணக்குகளை வைத்திருப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட இருப்புத் தொகையைக் கணக்கில் வழக்கமாக வைத்திருத்தல் அவசியம். ஒரு சம்பளக் கணக்கை சேமிப்புக் கணக்காக நீங்கள் மாற்றும் முன்னர், தேவையான குறைந்த பட்ச தொகை இருப்பைச் சரிபார்ப்பது சிறந்தது.
நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச தொகை ஒரு சேமிப்பு வங்கி கணக்கில் பராமரிக்கப்படாவிட்டால், வங்கிகள் கடுமையான அபராதம் விதிக்கும் விதிமுறைகளைக் கொண்டிருக்கின்றன. இந்தக் குறைந்தபட்ச இருப்புத் தொகையானது இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளிலும் அதன் திட்டங்களுக்கேற்ப வேறுபடுகிறது.
எடுத்துக்காட்டு
ஆக்சிஸ் வங்கியைப் போன்ற தனியார் வங்கிகளில் குறைந்த பட்சம் ரூ 10,000 இருப்புத்தொகை வைத்துக்கொள்ள வேண்டும்.ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் போன்ற சர்வதேச வங்கிகளில் குறைந்தபட்ச இருப்பாக 25,000 ரூபாயை இருப்புத்தொகை வைத்துக்கொள்ள வேண்டும்.
கிளைகள் மற்றும் ஏடிஎம்களின் எண்ணிக்கை:
வாடிக்கையாளர்கள் வங்கிகளைத் தேர்வு செய்ய முக்கியக் காரணியாக விளங்குவது வங்கிகளின் அணுகல்தான். சம்பள கணக்கை வங்கிக் கணக்கில் மாற்றுவதற்கு முன், எந்தவொரு வங்கியின் கிளைகள் மற்றும் ஏடிஎம் நெட்வொர்க்குகளையும் எளிதாக அணுகும் வசதியை ஒருவர் கண்டுபிடிக்க வேண்டும். குறிப்பாக அவசர தேவையின் போது பாதுகாப்பான வங்கி வசதிக்காக இது தேவைப்படுகிறது.