பங்குச் சந்தை என்பது முதலீட்டாளர்களின் களம். களத்தில் வெற்றி மற்றும் தோல்வி சகஜம். எனினும் வெற்றி என்பது மிகப் பெரியதாகவும், தோல்வி எப்பொழுதும் கெளரவமானதாகவும் இருக்க வேண்டும். அதே போன்று சந்தையில் உள்ள முதலீட்டாளர்களுக்கும் நஷ்டம் என்பது மிகக் குறைவாகவும், லாபம் அதிகமாகவும் இருக்க வேண்டும்.
ஒரு முதலீட்டாளர் எப்போது, எவ்வளவு தொகையை எந்தெந்த பங்குகள் மீது முதலீடு செய்ய வேண்டும் என்பது அவர்களின் தனிப்பட்ட முடிவாகும். எனினும் அந்த முதலீடு எப்பொழுதும் அவருடைய பொருளாதார இலக்குகளை அடிப்படையாகக் கொண்டு இயங்க வேண்டும். இதுவே மிகவும் அவசியம். ஒரு பொருளாதார முதலீட்டாளரின் இலக்கு எப்பொழுதும் பணத்தை நோக்கியே கண்டிப்பாக இருக்கும். எனவே சந்தையில் பணத்தைச் சம்பாதிக்கப் பங்குச் சந்தையைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது களத்தில் இறங்கும் முன்னர்க் களத்தைப் பற்றிய அறிவு ஒவ்வொரு போராளிக்கும் அவசியம் தேவைப்படுவதைப் போன்று பங்குச் சந்தையைப் பற்றிய அறிவு ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் மிகவும். அவசியம்.
பங்குச் சந்தை என்பது பல்வேறு காரணிகள் வினைபுரியும் ஒரு இடம். இங்கே ஒரு பங்கின் விலை அதிகரிக்கும் பொழுதோ அல்லது குறையும் பொழுதோ சந்தை ஆட்டம் கண்டு விடும். பொருளாதார வல்லுநர்களினால் அதற்குப் பல்வேறு காரணங்கள் கற்பிக்கப்படுகின்றன. எனவே அந்தக் காரணங்களை நீங்கள் அறிந்திருப்பது உங்களுக்குப் பல்வேறு வகைகளில் உதவியாக இருக்கும். பங்கு விலைகளை நகர்த்தும் பொதுவான காரணிகளை நீங்கள் அறிந்திருப்பது உங்கள் வர்த்தகத்தில் உங்களுக்கு உதவியாக இருக்கும். இதன் மூலம் பங்குகளின் விலை நகர்வை உங்களால் மிக எளிதாகக் கணிக்க இயலும்.
பங்குச் சந்தையைப் பல்வேறு காரணிகள் பாதித்தாலும்., சில காரணிகள் மிகவும் குறிப்பிடத்தக்கன. எனவே நாங்கள் இங்கே சில பொதுவான மற்றும் அடிப்படையான காரணிகளைப் பட்டியலிட்டுள்ளோம். இதை நினைவில் கொள்வது உங்களுடைய வர்த்தகத்திற்கு உதவியாக இருக்கும்.
சர்வதேச பங்கு சந்தை
இந்தியாவிற்குக் கிழக்கில் பங்குச் சந்தைகளான டோக்கியோ பங்குச் சந்தை மற்றும் ஹாங்காங் பங்குச் சந்தை போன்றவை, நேரம் மாறுபாடு காரணமாக இந்தியச் சந்தைகள் திறப்பதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு திறக்கப்பட்டு விடும். இதேபோல் நேர வேறுபாடு காரணமாக நியூயார்க் பங்குச் சந்தைகள் இந்திய சந்தைகள் மூடிய பிறகும், ஐரோப்பிய சந்தைகள் இந்தியச் சந்தைகள் திறந்து சில மணி நேரங்களுக்குப் பின்னர்த் திறக்கப்படும்.
உலக அளவில் உள்ள சில துறைகள் மற்றும் நிறுவனங்கள் இந்தியாவிலும் உள்ளன. உலகப் பங்குச் சந்தைகளில் அத்தகைய துறைகள் மற்றும் நிறுவனங்களில் ஏற்படும் தாக்கம் கண்டிப்பாக இந்தியச் சந்தைகளிலும் எதிரொளிக்கும். உதாரணமாக, இந்தியாவிற்குக் கிழக்கு உள்ள பங்குச் சந்தைகளில் தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தின் பங்குகள் ஏற்றம் கண்டால், இந்தியாவிலும் அத்தகைய துறைகளின் பங்குகளும் கண்டிப்பாக ஏற்றம் கண்டு விடும். இதேபோல் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் பங்குகள் உலகளவில் பல சந்தைகளில் வர்த்தகம் செய்யப்படுவதால், ஒரு பங்குச் சந்தையில் ஏற்படும் தாக்கம் கண்டிப்பாக மற்றொரு சந்தையில் எதிரொளிக்கும்.
இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட தொழிற்துறையின் பங்குகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பங்குச் சந்தை ஆய்வாளர்கள் ஆசிய சந்தையின் நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு கனிப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.
கொள்கை மாற்றங்கள் பற்றிய செய்திகள்
வழக்கமாக, வர்த்தகக் கொள்கை மாற்றம் பற்றிய புதிய அறிவிப்புகள் பங்குச் சந்தைகளைப் பாதிக்கிறது. இந்த நியதி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளுக்கும் பொருந்தும். இந்தியாவில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்குப் பாதகமாக ஏதேனும் புதிய வரி அல்லது கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டால், அது அவர்களுக்குக் கண்டிப்பாக இழப்புகளைக் கொண்டு வரும். அவ்வாறு ஏற்படக்கூடிய இழப்புகளைத் தவிர்ப்பதற்காக வெளிநாட்டு முதலீட்டாளர்கள், இந்தியச் சந்தைகளில் உள்ள தங்களுடைய முதலீடுகளை விலக்கிக் கொண்டு, பிற நாட்டு பங்குச் சந்தையை நோக்கி நகர்வார்கள். இது கண்டிப்பாக இந்தியச் சந்தையைப் பாதிக்கும்.
இதைப் போன்றே வட்டி விகித மாற்றம், நாணய மதிப்பீடு அளவில் ஏற்படும் மாற்றம் போன்ற சில மிக முக்கியக் காரணிகளும் இந்தியச் சந்தையைப் பாதிக்கின்றன. எனவே முதலீட்டாளராகிய நீங்கள் உலகெங்கிலும் உள்ள பொருளாதாரச் செய்திகளை அறிந்து கொள்ள வேண்டும்.
எனவே மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு கொள்கை அல்லது செய்தி வெளியிடப்பட இருந்தால், அந்த நிகழ்விற்காகக் கண்டிப்பாகக் காத்திருங்கள். ஏனெனில் இத்தகைய நிகழ்வுகள் கண்டிப்பாகச் சந்தையைப் பாதிக்கும்.
சந்தையின் முதல் மணித்துளிகள்
சந்தைத் தொடங்கிய முதல் மணித்துளிகளி பங்குகளை வாங்கவும் விற்கவும் பொருளாதார நிபுணர்கள் விரும்புவார்கள் இதை ஒரு வழக்கமான நடைமுறையாக அவர்கள் பின்பற்றுகின்றனர். பொதுவாகக் காலை நேர வர்த்தகம் என்பது மிகவும் பரபரப்பானது மற்றும் இந்த நேரங்களில் வர்த்தகம் அதிகமாக இருக்கும். சந்தையும் இந்த நேரத்தில் அதிகமான ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும்.
சந்தை முதல் நாள் மூடிய பிறகும் மறுநாள் சந்தை திறக்கும் பொழுது உள்ள இடைவெளியில் ஏராளமான செய்திகள் வெளி வந்திருக்கும். அத்தகைய செய்திகள் சந்தைத் தொடங்கிய பின்னர்த் தாக்கத்தை உருவாக்கும். இத்தகைய நிகழ்வுகள் மிகப் பெரியதாகவும் இருக்கலாம்.
மதிய நேர சோம்பேறித்தனம்
ஒரு பொதுவான சூழ்நிலையில், சந்தையில் பிற்பகல் வர்த்தகத்தின் அளவு குறைவாக இருக்கும். ஏனெனில் ஏதேனும் முக்கியச் செய்தி இருந்தால் அது காலையிலும் வெளியிடப்பட்டு அதனுடைய தாக்கம் மதிய நேரத்தில் குறையத் தொடங்கும். ஒருவேளை சந்தையில் இது நிகழ்ந்தது எனில், பங்குகள் காலையில் விற்ற விலையை விட மதியம் சுமார் 1 மணிக்குச் சிறிது மலிவான விலையில் விற்கப்படும்.
அதே நேரம் பிற்பகலில் ஐரோப்பிய பங்கு சந்தைகள் திறக்கப்பட்டு விடும். ஐரோப்பா சந்தை நடத்தையால் பாதிக்கப்படும் சில பங்குகளின் விலைகள் மாறத் தொடங்கும். இந்த நிகழ்வு பிற்பகலில் தொடங்கி மாலை வரை நடக்கும். எனவே பிற்பகள் சுமார் 1 மணிக்கு சந்தை சோம்பேறித்தனத்துடன் இருக்கும்.
வெள்ளிக்கிழமை
பெரும்பாலான வர்த்தகர்கள் வெள்ளிக்கிழமை பிற்பகலில் அதாவது சந்தை வார விடுமுறைக்குத் தயாராகும் முன்னர்த் தங்கள் பங்குகளை விற்க விரும்புகிறார்கள். வார இறுதியில் ஏதேனும் செய்திகள் வெளியாகி அதன் காரணமாகச் சந்தையில் ரத்தக் களரி ஏற்பட்டு நஷ்டம் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காகப் பெரும்பாலான வர்த்தகர்கள் தங்களுடைய பங்குகளை வெள்ளிக் கிழமை மதியம் விற்றுவிட விரும்புகின்றார்கள்.
பொதுவாக வெள்ளிக்கிழமை, பங்குகளின் விலை அதிகரித்து, திங்கட்கிழமை காலை சிறிது குறைந்து சந்தை நிலை பெறும். மிகவும் குறிப்பாக ஒரு பண்டிகை காரணமாக ஒரு வெள்ளிக்கிழமைக்குப் பிறகு மூன்று நாள் நீண்ட வார இறுதி விடுமுறை (திங்கள்கிழமை ஒரு விடுமுறையாக) சந்தைக்குக் கிடைக்கும் பட்சத்தில், வெள்ளிக்கிழமை பிற்பகலில் பங்குகளின் விலை கண்டிப்பாக உயரும்.
பொருளாதார வல்லுநர்களின் கருத்துக்கள்
சந்தையில் பல்வேறு வகையான ஆய்வாளர்கள் மற்றும் நிபுணர்கள் உள்ளனர். உதாரணமாக, பரஸ்பர நிதி மேலாண்மை போன்ற ஒரு குறிப்பிட்ட முதலீட்டு நிறுவனத்திற்காக வேலை செய்யும் ஆய்வாளர்கள் சந்தையில் உள்ளனர். இவர்கள் முதலீட்டாளர்களின் கவனத்தைக் கவர்ந்த பங்குகளைப் பற்றிய ஆய்வில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள்.
ஒரு சில வல்லுனர்கள் முதலீட்டாளர்கள் ஏற்கனவே வாங்கிய முதலீடுகளை விற்க தகுந்த நேரத்தை ஆய்வு செய்து கருத்துக்களை வழங்கத் தயாராக உள்ளனர். மேலும் சில வல்லுனர்கள் ப்ரீலேன்சர்களாக வேலை பார்த்து ஒரு குறிப்பிட்ட முதலீட்டாளர்கள் அல்லது நிறுவனங்களுக்கு ஆலோசனைகளை வழங்குகின்றனர். அவர்களின் கருத்துக்கள் பொதுவாக நடுநிலையானவை.
பொருத்தமற்ற, சார்பற்ற அல்லது சார்புள்ள மற்றும் நன்கு அறியப்பட்ட பகுப்பாய்வாளரின் கருத்துக்கள் சந்தையில் பங்குகளின் விற்பனை / கொள்முதல் போக்குகளைப் பாதிக்கலாம். உங்களுடைய முதலீடுகள் எவ்வாறு பாதிக்கப்படலாம் என்பதைப் புரிந்து கொள்வதற்கு, தொலைக்காட்சி மற்றும் நிதி வலைத்தளங்களில் வழங்கப்படும் நடப்பு வணிக அறிக்கைகளைக் கவனித்து உங்களை நீங்களே புதுப்பித்துக் கொள்வது மிகவும் நல்லது.
வணிக நேரங்களில், ஒரு நன்கு அறியப்பட்ட ஆய்வாளர் ஒரு நிறுவனத்தின் பங்குகள் மீதான நேர்மறையான அல்லது எதிர்மறையான கருத்தை வெளிப்படுத்தினால், அது அந்த நிறுவனத்தின் பங்குகளை மட்டுமல்ல, அதே போன்ற துறைகளில் உள்ள பிற நிறுவனப் பங்குகளின் போக்கையும் பாதிக்கக்கூடும். உதாரணமாக, ஆட்டோ-மொபைல் உபகரணங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களின் எதிர்காலத்தைப் பற்றி ஒரு நன்கு தெரிந்த ஆய்வாளர் எதிர்மறையான கருத்துக்களை வெளியிட்டால், அந்த நிறுவனத்தின் பங்குகள் அடி வாங்குவதுடன், அதே போன்று வாகனத் தொழில் உள்ள சிறு மற்றும் குறு தயாரிப்பாளர்களும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். இந்த நிறுவனங்களிலிருந்து தங்களுக்குத் தேவையான பாகங்களை வாங்கும் கார் மற்றும் வாகன உற்பத்தியாளர்களையும் இது பாதிக்கும்.
இணையத்தளக் கட்டுரைகள்
இணையம் மக்கள் செய்திகளைப் பெறும் வழியை மாற்றி அமைத்துள்ளது. காட்டுத் தீயை விட ஒரு செய்தி மிகவும் வேகமாக இணையம் வழியே பரவுகின்றது. இன்றைய நவீன யுகத்தில் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தி உடனடியாக ஒரு செய்தியை இணையத்தில் வெளியிடலாம்.
ஒரு நிதி நிறுவன அறிக்கை, ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்கு அல்லது ஒரு குறிப்பிட்ட துறையின் மீது வலுவான கருத்து ஒன்றைத் தெரிவித்திருந்தால், அது எந்தச் சந்தர்ப்பத்திலும் சந்தையைப் பாதிக்கும்.