சொந்தமாக வீடு வாங்குதல் என்பது ஒருவரின் வாழ்வில் நிகழும் மிக முக்கியமான நிகழ்வு. இன்றைய நிலையில் சொந்தமாக வீடு வாங்குவதற்குப் பெரும் தொகை தேவையாக உள்ளது. சிலர் தங்களுடைய சேமிப்புத் தொகையின் மூலம் வீடு வாங்குகின்றனர். பெரும்பாலானோர் வங்கிக் கடன்கள் மூலமாகத் தங்களது சொந்தவீட்டுக் கனவை நிறைவேற்ற முயற்சிக்கின்றனர்.
புகழ்பெற்ற கட்டுமான நிறுவனங்கள் கட்டிக் கொடுக்கும் வீடுகளை வாங்குவதற்கு நாம் விரும்புகிறோம். ஆனால், நல்ல வீடு அமைவது கட்டுமான நிறுவனங்களைப் பொறுத்தது அல்ல. வீடு தொடர்பான சட்டப்பூர்வமான ஆவணங்களைப் பொறுத்துத்தான் நாம் கொடுத்து வாங்குகின்ற பணத்துக்கு உரிய மதிப்பு கிடைக்கும். வீட்டினை வாங்க ஒப்பந்தம் செய்வதற்கு முன்னால் வீட்டின் நிலம், கட்டடத்துக்கான அனுமதி போன்றவை தொடர்பான உரிய ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும்.
விசாரித்தல்
வீடு கட்டிக்கொடுப்பவர் அல்லது வீடு கட்டிக் கொடுக்கும் நிறுவனத்தின் நம்பகத்தன்மையைப் பலபேரிடம் விசாரித்து அறிந்து கொள்ளவேண்டும். ஏற்கனவே அவர்கள் கட்டி விற்பனை செய்துள்ள வீடுகளை நேரில் பார்த்தும், அந்த வீடுகளை வாங்கியோரிடம் தகவல்களைச் சேகரித்தும் நாம் வாங்கப்போகும் வீட்டினைப் பற்றி அறிந்து கொள்ளலாம். கட்டுமான நிறுவனம் பற்றிய தகவல்களை இணையம் வழியாகவும் அறிந்து கொள்ளலாம். புது வீடு வாங்குவதற்கு முன்னால் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான ஐந்து விசயங்கள் குறித்துப் பார்ப்போம்.
சொத்து உரிமைப் பத்திரத்தை ஆய்வு செய்தல்
வீடு அமைந்துள்ள நிலத்தின் உரிமை யாருக்குச் சொந்தம் என்பது குறித்த பத்திரத்தைக் கவனமாகப் படிக்க வேண்டும். இந்த ஆவணத்தின் மூலமாக வீட்டின் சொத்து உரிமை அல்லது வீட்டினை விற்பதற்கான உரிமை யாருக்கு உள்ளது என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளலாம். நாம் வாங்கப்போகும் வீடு அமைந்துள்ள இடம் தொடர்பாக ஏதேனும் வழக்கு உள்ளதா என்பதையும் இப்பத்திரம் காட்டிக்கொடுத்துவிடும். சொத்துரிமை தொடர்பான ஆவணத்தை ஒரு வழக்கறிஞரின் மூலமாக ஆராய்ந்து பார்ப்பது நல்லது.
அங்கீகாரச் சான்றிதழ்களைச் சரிபார்த்தல்
தற்போதைய நிலையில் வீடு கட்டுவதற்கு அரசு மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்கள் பல்வேறு வகையான கட்டுப்பாடுகளையும் நிபந்தனைகளையும் விதிக்கின்றன. இந்த நிபந்தனைகளையும் விதிமுறைகளையும் பூா்த்தி செய்திருந்தால் கட்டிய வீட்டுக்கு உரிய சட்டப்பூர்வமான அங்கீகாரம் கிடைக்கும். மழைநீர் சேகரிப்பு, சாக்கடை வசதி, தூய்மை மற்றும் சுகாதாரத்துறை, வனத்துறை, சுற்றுச் சூழல் துறை, போன்ற பல துறைகளிடமிருந்து உரிய சான்றிதழ்களைப் பெற்றிருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக வீடுகட்டத் தொடங்குவதற்கான அனுமதிச் சான்றிதழை உரிய நிர்வாகத்துறையிடமிருந்து பெற்றிருக்க வேண்டும். கட்டடம் தொடங்குவதற்கான அனுமதிச் சான்றிதழ் இல்லாமல் கட்டப்படும் வீடுகள் சட்டப்பூர்வமானதாகக் கருதமுடியாது.
வில்லங்கச் சான்றிதழ்
வீட்டின் உரிமை தொடா்பாக எவ்விதமான வழக்குகள் மற்றும் சிக்கல்கள் இல்லை என்பதற்கான வில்லங்கச் சான்றிதழ் மிகவும் முக்கியமானதாகும். வீட்டின் உரிமையாளர் மற்றும் இடைத்தரகர்கள் வீட்டின் வில்லங்கம் குறித்த தகவல்களை மறைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. இந்த விசயத்தில் வீடு வாங்குபவர்கள் மிகவும் கவனமாக இருந்து, நாம் வாங்கப்போகும் வீட்டின்மீது உரிமை சார்ந்து அல்லது பணப்பொறுப்புகள் சார்ந்து எவ்விதமான சிக்கல்களும் இல்லை என்பதற்கான வில்லங்கச் சான்றிதழைப் பார்த்தபிறகே வீடு வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் ஈடுபடவேண்டும். இல்லையென்றால் வீட்டை வாங்கிய பிறகு பலவிதமான சிக்கல்களுக்கு உள்ளாக நேரிடும்.
வீட்டின் திட்ட வரைபட அங்கீகாரம்
உரிய அங்கீகாரம் பெற்றிராத நிலத்தில் வீடு கட்டுதல், வீடு கட்டுவதற்குரிய திட்ட வரைபடத்திற்கு உரிய அனுமதி பெறாமை, அனுமதி பெற்ற வரைபடத் திட்டத்திற்கு மாறாக வேறு வகையில் கட்டடம் கட்டுதல் போன்ற விதிமீறல்கள் ரியல் எஸ்டேட் துறையில் அடிக்கடி நடக்கின்றன. எனவே, நாம் வாங்கப்போகும் வீட்டின்மீது அல்லது நமக்காகக் கட்டப்படவிருக்கும் வீட்டின்மீது இத்தகைய முறைகேட்டுப் புகார்கள் இல்லாத வகையில் பார்த்துக் கொள்ளவேண்டும். வீடு கட்டுவதற்குரிய இடம் உரிய அங்கீகாரத்திற்கு உட்பட்டது என்பதையும், வீடு கட்டுவதற்கு முறையான அனுமதி பெறப்பட்டிருப்பதையும், அனுமதி கொடுக்கப்பட்ட வரைபடத்திற்கு ஏற்ற வகையில்தான் வீடு கட்டப்பட்டுள்ளது என்பதையும் உறுதி செய்தபிறகு வீட்டினை வாங்கினால் அதில் நீங்கள் சந்தோசமாக வசிக்கலாம் இல்லையென்றால் சட்டச்சிக்கல்கள் உங்களைப் பின்தொடரும்.
வீடு வாங்குவதற்கான ஒப்பந்தம்
மேற்கண்ட வகையில் அனைத்து வகையான தகவல்களையும் சான்றிதழ்களையும் சோதித்துத் திருப்தி ஏற்பட்ட பிறகுதான் வீட்டினை வாங்குவதற்கான ஒப்பந்தத்திற்கு வர வேண்டும். வீட்டின் உரிமையாளரால் உங்களுக்கு உறுதி அளித்தபடி அனைத்து வகையான தகவல்களும் ஒப்பந்தப் பத்திரத்தில் எழுதப்பட்டிருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். கட்டுமானம் குறித்த விவரங்கள், பணம் செலுத்துவதற்கான விவரம், குடியிருப்பு குறித்த வரையறைகள் உரிய காலத்திற்குள் ஒப்பந்தத்தை நிவேற்றத் தவறினால் தவறுவோருக்கான (வீடு கட்டித்தருபவர் அல்லது வாங்குவோர்) அபராத தொகை போன்ற தகவல்கள் ஒப்பந்தப் பத்திரத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். வாங்கிய வீடு தொடர்பாக ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டால், இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் தீா்த்துக் கொள்ள முடியும் என்பதால் ஒப்பந்தத்தில் இடம் பெறும் தகவல்கள் அனைத்தையும் மிகத் தெளிவாக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
புதியதாகக் கட்டப்பட்ட வீடு வாங்குவதாக இருந்தாலும் அல்லது புது வீடு கட்டித்தருவதற்கான ஒப்பந்தமாக இருந்தாலும் மேற்கண்ட வகையில் அனைத்து வகையான விசயங்களிலும் கவனமாக இருந்தால் புது வீட்டிற்கான நம்முடைய முதலீடு அர்த்தம் உள்ளதாகவும் பாதுகாப்பு மிக்கதாகவும் அமையும்.