உலகில் வாழும் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாகவும் வசதியாகவும் வாழ விரும்புகிறோம். தனிநபர் சார்ந்தும், உளவியல் சார்ந்தும், சமூகம் மற்றும் பண்பாடு சார்ந்தும் ஒவ்வொருவருக்கும் பல்வேறு வகையான தேவைகள் உள்ளன. உணவு, உடை, வீடு, கல்வி வசதி, போக்குவரத்து வசதி, மருத்துவச் செலவுகள் போன்றவை ஒரு மனிதனின் வசதியான வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைகின்றன.
அடிப்படைத் தேவைகளும்… ஆடம்பர விருப்பங்களும்….
"தேவையில்லாத பொருள்களை நீங்கள் வாங்கினால், விரைவில் உங்களுக்குத் தேவையான பொருட்களை விற்க நேரிடும்" உலகின் மிகப்பெரும் செல்வந்தர்களுள் ஒருவரான வாரன் பஃபட் கூறிய மேற்கண்ட வார்த்தைகளை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். நம்முடைய தேவைகளுக்கும் விருப்பங்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டினைப் புரிந்து கொள்ள வேண்டும். எது இல்லாவிட்டால் ஒருவருடைய இயல்பான வாழ்க்கை பாதிக்கப்படுமோ அதைத்தான் ஒருவருடைய அடிப்படைத் தேவை என்கிறோம். அதே சமயத்தில் ஒருவருடைய ஆசைகளும், விருப்பங்களும் அவருடைய வசதியான வாழ்க்கைக்கு வழிகாட்டுமே தவிர, அவை இருந்தால்தான் கட்டாயம் வாழ முடியும் என்று சொல்ல இயலாது. நம்முடைய விருப்பங்கள் பூர்த்தியடையா விட்டாலும் நாம் வாழ இயலும். ஆனால், அடிப்படையான தேவைகளை நிறைவு செய்யாவிட்டால் நாம் வாழ இயலாது. ஒன்றினுடைய முக்கியத்துவத்தைப் பொறுத்து அது தேவையா? தேவை இல்லையா? என்பதை முடிவு செய்ய வேண்டும். சுருக்கமாகச் சொன்னால், தேவைகளைக் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். விருப்பங்களை, அதற்கான வசதியும் வாய்ப்பும் வரும்போது நிறைவேற்றிக் கொள்ளலாம்.
செலவும்…. சேமிப்பும்….
"தேவைகள்", "விருப்பங்கள்" ஆகிய இரண்டையும் சரியாகப் புரிந்து கொண்டால் நம்முடைய வீட்டுப் பொருளாதாரத்தை மிகத் திறம்பட நிர்வகிக்கலாம். செலவு, சேமிப்பு என்கின்ற ஒன்றுக்கொன்று முரண்பாடான இரண்டு விசயங்கள்தான் ஒரு மனிதனுடைய செல்வ வளத்தைத் தீர்மானிக்கிறது. நம்முடைய செலவுகள், தேவையை நோக்கியவையாக இருக்கிறதா அல்லது விருப்பங்களைப் பூர்த்திச் செய்வதற்காக இருக்கின்றதா என்பதை வேறுபடுத்திப் பார்க்கப் பழகிக் கொண்டால் செல்வ வளத்தை நோக்கி நாம் பயணிக்கத் தொடங்கி விட்டோம் என்று அர்த்தம்.
ஒருவருடைய வருமானம் அல்லது சம்பளம் என்பது குறிப்பிட்ட வரையறைக்கு உட்பட்டது. தேவை மற்றும் விருப்பம் ஆகிய இரண்டையும் சரியாக நிர்ணயம் செய்து அதற்கேற்ப செலவு செய்யப் பழகினால் நம்முடைய நிதி ஆதாரத்தைப் பாதுகாக்க முடியும்.
தேவை விருப்பமாக மாறுவது இப்படித்தான்…
சில விருப்பங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டிய அவசியம் இருக்காது. அதனைச் சிறிது காலம் கழித்துக் கூட நிறைவேற்றிக் கொள்ளலாம். தற்காலத்தில், அனைத்து வசதிகளும் கொண்ட ஒரு ஸ்மார்ட் போன் ஒருவருக்குத் தேவைதான். பலருக்கு அது வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவைகளுள் ஒன்றாகவே மாறிவிட்டது. நம்முடைய பட்ஜெட்டுக்கு உட்பட்டு அதனை வாங்கிக் கொள்ளலாம். ஆனால் இப்படித் தேவை கருதி வாங்கிய போனை, புதிய மாடலுக்கு ஏற்பவும் ஆழகிய தோற்றத்திற்கு எற்பவும் அடிக்கடி மாற்ற நினைத்தால் அந்தத் தேவை, "விருப்பமாக" அல்லது "ஆசையாக" மாறிவிடும். ஏற்கனவே வைத்திருக்கும் போன் முற்றிலும் பழையதாகிப் போனால் மட்டுமே புதிய போன் வாங்குவது பற்றி யோசிக்க வேண்டும்.
கார் என்பது “தேவையா?” அல்லது “விருப்பமா?”
கார் வாங்க வேண்டும் என்பது பலருடைய எண்ணமாக இருக்கலாம். தினசரி நம்முடைய போக்குவரத்துக்குக் கார் பயன்படுகிறது என்றால், கார் வாங்க வேண்டும் என்பது நம்முடைய "தேவையாக" (Need) இருக்கும். அதே சமயத்தில் தினசரிப் பயன்பாட்டுக்குத் தேவைப்படாத சூழலி்ல் ஒருவர் கார் வாங்க நினைத்தால், அது நம்முடைய "விருப்பமாக" (Want) மாறிவிடும். அதே போன்று, கார் வாங்கிய பிறகு அதில் அதிகப்படியான வசதிகளைச் சேர்க்க வேண்டும் என்றால் அது அவசியம் தேவையா? என்பதை யோசிக்க வேண்டும். இல்லாவிட்டால் தேவை விருப்பமாக மாறிவிடும்.
தேவையையும் விருப்பத்தையும் சமநிலைப் படுத்துதல்
எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டால், தேவையையும் விருப்பத்தையும் சமநிலையில் வைத்திருக்க முடியும். நமக்கு முதலில் எது தேவை எது தேவையற்றது என்பதை முடிவு செய்து கொண்டு அதற்கு ஏற்பச் செலவுகளை அமைத்துக் கொண்டால், நம்முடைய வாழ்கை முறையில் மாற்றத்தைக் காணலாம். ஒருவருடைய செல்வ வளத்தைப் பெருக்குவதற்கும், தேவையில்லாமல் கடனில் மூழ்குவதைத் தவிர்ப்பதற்கும் அந்த அணுகுமுறை முக்கியமானதாகும்.
விருப்பங்களிலிருந்து தேவையைப் பிரித்தெடுக்கவும்
உங்களுடைய விருப்பங்கள் மற்றும் தேவைகள் எவை என்பது குறித்து ஒரு பட்டியலைத் தயார் செய்யவும். அப்பட்டியலில் இருந்து எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்து, அதற்கு ஏற்ப உங்களிடம் இருக்கும் பணத்தை ஒதுக்கீடு செய்து, மிக முக்கியமான தேவைகளையும், விருப்பங்களையும் பூர்த்திச் செய்து கொள்ளலாம்.
திட்டமிடாமல் எதனையும் வாங்கக் கூடாது :
முன் கூட்டியே திட்டமிடாமல் எந்தப் பொருளையும் வாங்கக் கூடாது. ஒரு பொருளைப் பார்த்தவுடன் அதனை வாங்க வேண்டும் எனத் திடீரென்று எழுகின்ற எண்ணத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.
செலவுகளை மதிப்பீடு செய்தல் :
நம்முடைய செலவுகள் ஒவ்வொன்றும் தேவையின் அடிப்படையில் அமைய வேண்டும். நாம் தற்போது செய்யும் செலவுகளில் பெரும்பாலானவை தேவைக்கு மீறியதாக இருக்கலாம். அத்தகைய தேவையற்ற செலவுகள் என்னவென்பதைக் கண்டறிந்து அவற்றை நீக்க வேண்டும்.
தேவைக்கு ஏற்பச் செலவு செய்தால்… சேமிப்புச் செல்வமாகும் !
தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்தி, நாம் சேமிக்கின்ற பணத்தை அறிவுப்பூர்வமாக யோசித்து முதலீடு செய்தால் நம்முடைய சேமிப்புகள் செல்வமாக மாறிவிடும். அடிப்படையான தேவைகளை உடனடியாகக் கவனித்தும், தகுந்த வாய்ப்புகள் அமையும் பொழுது விருப்பங்களை நிறைவேற்றியும் வந்தால் மனநிறைவான, மகிழ்ச்சியான வாழ்க்கையை உறுதி செய்யலாம். மகிழ்ச்சி என்பது வாங்கிக் குவிக்கின்ற பொருட்களைப் பொறுத்தது அல்ல, வாழ்க்கையைப் புரிந்து கொண்ட மனதைப் பொறுத்தது. தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செலவுகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டால், நம்முடைய ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் காலம் விரைவில் வந்து விடும்.