ஒருங்கிணைந்த பணப்பரிமாற்ற இடைமுகம் என்ற யூபிஐ-ன் புதிய மற்றும் இரண்டாவது மேம்படுத்தப்பட்ட பதிப்பை, ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் மும்பையில் அறிமுகப்படுத்தினார். அதிகம் பயன்படுத்தக்கூடிய பணப்பரிமாற்ற செயலிகளான டெஸ், பீம், வாட்ஸ்ஆப் ஃபே போன்றவை செயல்பட யூ.பி.ஐ பயன்படுகிறது. யூ.பி.ஐ-யை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் செயலிகள் 2016ல் அறிமுகப்படுத்திய பிறகு, பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும் காரணத்தால் பிரபலமடைந்து அவற்றின் பயன்பாடு பன்மடங்கு அதிகரித்துள்ளது. வணிக ரீதியான பணப்பரிமாற்றங்கள் தற்போது மிகவும் குறைவாக இருக்கும் நிலையில்,அவற்றைச் செய்ய வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் ஒரு முயற்சியாக இந்தப் புதிய மேம்படுத்தல்கள் செயலியில் செய்யப்பட்டுள்ளன.
நீங்கள் கண்டிப்பாகத் தெரிந்துகொள்ள வேண்டிய, யூ.பி.ஐ செயலியில் செய்யப்பட்டுள்ள 5 புதிய மேம்படுத்தல்கள் இதோ.
பணப்பரிமாற்ற வரம்பு இரட்டிப்பு
யூ.பி.ஐ 2.0-ல் பணப்பரிமாற்ற வரம்பு இரட்டிப்பு இரட்டிப்பாக்கப்பட்டு ரூ2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்திய தேசிய பணப்பரிமாற்ற நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி, மேம்படுத்தப்பட்ட யூ.பி.ஐ-ல் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, எச்.டி.எப்.சி, ஆக்சிஸ், ஐசிஐசிஐ, ஐடிபிஐ, ஆர்.பி.எல், யெஸ் பேங்க், கோடாக் மகேந்திரா, இன்டஸ்லேண்ட் பேங்க், பெடரல் பேங்க் மற்றும் எச்.எஸ்.பி.சி போன்ற வங்கிகள் உறுப்பினர்களாக உள்ளன.
ஓவர்டிராப்ட்
உங்கள் சேமிப்பு கணக்கு மட்டுமில்லாமல், ஓவர்டிராப்ட் எனப்படும் மிகைப்பற்று கணக்கையும் உங்களின் பணப்பரிமாற்ற செயலியுடன் இணைத்து, கடன் பெற்று உடனடியாகப் பணப்பரிமாற்றம் செய்யமுடியும். இந்த யூ.பி.ஐ 2.0 அடிப்படையில் உங்கள் மிகைப்பற்றுக் கணக்கை அணுகக் கூடுதல் வாய்ப்பாக அமைகிறது.
ஒரு முறை மேன்டேட் (One Time Mandate)
இந்த யூ.பி.ஐ மேன்டேட் வசதியை பயன்படுத்தி வாடிக்கையாளர்களும், வணிகர்களும் தங்களின் எதிர்காலப் பணப்பரிமாற்றங்களுக்குப் பொறுப்பேற்கலாம்.
இதன்மூலம் எதிர்காலப் பணப்பரிமாற்றத்திற்கு முன்கூட்டியே பணத்தை ஒரு முறை முடக்கும் வசதி கிடைக்கும். எடுத்துக்காட்டாக, வாடகைகார் நிறுவனங்கள், முன்கூட்டியே கணிக்கப்பட்ட பயணக்கட்டணத்தைத் தங்கள் பயணிகளின் வாலெட்டில் முடக்கி வைத்து, பயணம் முடிந்த பின்னர்ப் பணப்பரிமாற்றத்தை மேற்கொள்ளலாம்.
இந்த வசதியை ஐ.பி.ஓ எனப்படும் துவக்க பொது நிதி மூலம் பங்குகள் வாங்கவும் பயன்படுத்த முடியும்.
கையொப்பம் மற்றும் QR குறியீடு
கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் விதமாக, இந்த வசதியின் மூலம் பயனர்கள் க்யூ.ஆர் கோடை ஸ்கேன் செய்ய அனுமதிக்கப்பட்டு, வணிகர்கள் யூ.பி.ஐ ஆல் சரிபார்க்கப்பட்ட வணிகர்களா என்பதை உறுதிப்படுத்தலாம். அந்த வணிகர் சரிபார்க்கப்பட்ட பயனராக இல்லாத பட்சத்தில், பயனருக்கு அறிவிக்கை அனுப்பப்படும். இதன் மூலம் பயனர்கள் வணிகர்களின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்க உதவும்.
ரசீது
இந்த வசதியின் மூலம், எந்தவொரு பணப்பரிமாற்றை மேற்கொள்ளும் முன்பும் வணிகர்களிடம் இருந்து பயனர்களுக்கு இரசீது அனுப்பிவைக்கப்படும். இதன் மூலம் சரியான வணிகர்களுக்கு ,சரியான அளவு பணத்தைத் தான் பரிமாற்றம் செய்கிறோம் என்பதை முன்கூட்டியே பயனர்கள் உறுதிசெய்துகொள்ள முடியும்.