கணினிமயமான உலகில் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் வாய்ப்புகளைத் தக்கவைத்துக் கொள்ளப் பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி வருகின்றன. அதிரடிச் சலுகைகள், விழாக்காலத் தள்ளுபடிகள் என வாடிக்கையாளர்களை வளைக்கும் முயற்சிகள் நடந்து கொண்டே இருக்கின்றன. பாரம்பரிய வர்த்தகத்தின் வாய்ப்புகளைப் பறிக்கும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களால் வாடிக்கையாளர்கள் என்ன பலாபலன்களை அனுபவித்தார்கள். சேமிப்பா, செலவா, ஏமாற்றமா என்பதுதான் கேள்வியாகக் கனக்கிறது.
ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களால் இந்திய வாடிக்கையாளர்களின் வாங்கும் சக்தி தூண்டப்பட்டுள்ளது. விழாக்காலத் தள்ளுபடிகளால் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள், இந்தியர்களின் கால்சட்டை, மேல்சட்டைகளில் உள்ள பணத்தைச் சூறையாடுகிறது. வரும் 10 ஆம் தேதி பிக் பில்லியன் டே விற்பனை என்ற பெயரில் வர்த்தக வலையை விரித்து வைத்திருக்கிறது பிளிப்கார்ட். அதேநாளில் கிரேட் இந்தியன் சேல் என்ற பெயரில் அமேசானும் களத்தில் குதித்திருக்கிறது.
அமேசான் அதிரடிகள்
பிரத்தியேகமான பிராண்டுகளுக்குக் கணிசமான சேமிப்பை உருவாக்கித் தர திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ள அமேசான் செய்தி தொடர்பாளர், அமேசான் டாட் இன்னில் தவணை முறை சலுகைகள், டெபிட், கிரீடிட் கார்டுகள் கட்டமில்லா சலுகை மற்றும் எக்சேஞ்ச் போன்றவற்றை வழங்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளார். வழக்கமான சொல்லப்படும் இந்தப் பசுப்பு வார்த்தைகள் வாடிக்கையாளர்களை எங்கே செலுத்துகிறது.
இப்படியும் ஒரு மோசடி
பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் வல்லுநர் சுமித் திவாரியின் ஆன்லைன் வர்த்தக அனுபவம் முதலில் வியப்பாகவும், பின்னர் அதிர்ச்சியாகவும் இருந்தது. 5,000 ரூபாய் மதிப்புள்ள 3 கடிகாரங்களை 600 ரூபாய்க்கு எக்ஸ்ட்ரா கிப்டுடன் வாங்கியதாகக் கூறினார். தரம்குறைந்த பொருள் என்று தெரிந்தபோது வருத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.
அறிய முடியாத தள்ளுபடி
அசல் விலை மற்றும் சேமிப்பின் சதவீதத்தை ஆன்லைன் விற்பனையாளர்கள் காட்டினாலும், உண்மையாகவே தள்ளுபடி விலையில் பொருட்கள் வழங்கப்படுகிறதா என்பதை நம்மால் அறிய முடியாது என்று கூறுகிறார் பொருளாதார ஆசிரியர் பிரிஷ்டி குகா.
வியாபார உத்தி
போனால் கிடைக்காது, பொழுதுபோனால் தங்காது என்று கூவும் லாட்டரிச் சீட்டுக்காரர்களின் வியாபார உத்திதான் இது. குறிப்பிட்ட நாளில் சலுகைகளை வாரி இறைத்துக் கடைவிரிக்கும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், தங்கள் தளத்தில் நுழைந்தவுடனே கவுண்டவுன் தொடங்கிவிடும். வாடிக்கையாளர்களிடையே அவசரத்தை உருவாக்கி விற்பனை செய்கின்றன.
ஆர்வத் தூண்டல்
அனுபவமிக்க வாடிக்கையாளர்கள் கூட ஸ்லாஸ் சேல் உருவாக்கும் பரபரப்பான சூழலால் பொருட்களை வாங்கி விடுகிறார்கள். மலிவு விலையில் கிடைக்கும் தயாரிப்புகளின் இருப்புகள் முடிவதற்கும் கிளிக் செய்து விட வேண்டும் என்ற ஆர்வம் பொதுவாக ஏற்படுவதுதான் என்று நிதி மேலாளர் சனூப் சித்திக் கூறுகிறார்.
விலைகளில் மாற்றம்
ஆன்லைனில் அவசரத்தில் பொருட்களைத் தேர்வு செய்யும்போது, விலைகள் கூட ஒப்பந்தத்துக்கு நேரெதிராக மாறிவிடுகிறது. பொருட்களின் பற்றாக்குறையை விற்பனையாளர்கள் வலியுறுத்தும்போது, வாங்க வேண்டும் என்ற உத்வேகம் தூண்டப்படுவதாகக் குஹா தெரிவித்தார்.
கேஸ்பேக் சலுகைகள்
வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்க பெரும்பாலான ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் கேஸ்பேக் சலுகைகளை வழங்குகிறது. ஒவ்வொரு கொள்முதல் மீதும் கேஸ்பேக் சலுகை உள்ளது. வாடிக்கையாளர்களுக்குத் திருப்பிச் செலுத்துவதாகக் கூறப்பட்டாலும், வாங்கப்படும் பொருட்களின் விலை மீது தள்ளுபடி செய்யப்படுவதில்லை. இன்னொரு கொள்முதலில் இதன் பலன் கிடைக்கப் பெறுகிறது.
ஏமாற்றும் தந்திரம்
கேஸ்பேக் அறிவிப்புகளிலும் மறைமுகமான மோசடிகள் உள்ளன. 3000 ரூபாய்க்குக் குறையாமல் பொருட்களை வாங்கினால் 5 விழுக்காடு கேஸ்பேக் தருவதாகப் பிரபலமான ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் அறிவித்திருக்கும். நீங்கள் 25,000 ரூபாய்க்கு கொள்முதல் செய்திருந்தாலும் அதே 5 விழுக்காடுதான் வழங்கப்படுகிறது. இதில் அதிகமாக எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் விஞ்சும்
ஆசையைக் காட்டி மோசம்
தள்ளுபடிகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே பொருட்களை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் தயார்படுத்தப்படுகிறார்கள். பணப்பரிமாற்றம் ஒன்றை காட்டி அவர்களை ஏமாற்றுகிறது. கேஸ்பேக், அதிரடி தள்ளுபடி, பரிசுப் பொருட்கள். இலவச விநியோகம்தான் அது.
கட்டணமில்லா தவணை முறைகள்
வாங்கும் சக்தியை அதிகரிக்கக் கட்டணமில்லா தவணை முறைகளை வழங்கி வாடிக்கையாளர்களை ஈர்க்கிறது. விழாக்கால விற்பனையில் அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் இந்த உத்தியை பயன்படுத்துகிறது. அதேநேரம் மாதாந்திர தவணை முறையில் வட்டி என்ற பெயரில் வாடிக்கையார்களின் பணம் வங்கிகளால் உறிஞ்சப்படுகிறது.
ஈ.எம்.ஐ ஜாக்கிரதை
தவணை முறைகள் செயலாக்கக் கட்டணம் மற்றும் வட்டி உள்ளிட்டவற்றைக் கொண்டதாக இருக்கலாம். ஈ.எம்.ஐ சலுகைகளைப் பெறும்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் ஏனென்றால் கூடுதலான செலவுக்கு வழி வகுக்கும். ஈ.எம்.ஐ டிஜிட்டல் பேமண்டை ஊக்கப்படுத்துவதற்காக ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் வழங்கப்பட்ட வாய்ப்பு என்று கூறிய ஹர்ஷா ரஷ்டான் என்ற வல்லுநர், வங்கி வட்டிகளிலோ, தயாரிப்பு செலவுகளிலோ சேரும் என்று தெரிவித்தார்.
மோசடி- முடிவு உங்கள் கையில்
ஈ.எம்.ஐ நல்ல யோசனையா இல்லையா என்பதைத் தனிநபர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ள எழுத்தாளர் காயத்ரி ஜெயராமன் அதிலிருந்து வெளியேறுவது குறித்தும் அவர்தான் தீர்மானிக்க வேண்டும் என்கிறார். விழாக்காலத் தள்ளுபடிகளுடன் விற்பனை உத்தியை ஆன்லைன் நிறுவனங்கள் தொடங்கி விட்டன. இதில் இழப்பிலிருந்தும், ஏமாற்றத்தில் இருந்தும் எப்படித் தப்புவது என்பதை வாடிக்கையாளர்கள் தீர்மானிக்க வேண்டும்.