அது பி.எம்.ஐ கிடையாது. நிக்கி பி.எம்.ஐ (PMI). Purchasing Manager Index-ன் சுருக்கம் தான் பி.எம்.ஐ. இதை யார் கணக்கிடுகிறார்கள், எப்படிக் கணக்கிடுகிறார்கள், எதற்காக கணக்கிடுகிறார்கள் என்று பார்ப்போம்.
எதற்கு கணக்கிடுகிறார்கள்
பொதுவாக ஒரு நாட்டின் உற்பத்தி எப்படி இருக்கிறது, என்பதைப் பொறுத்து தான் அந்த நாட்டின் வளர்ச்சி இருக்கும். அந்த உற்பத்தித் துறை நன்றாக இருக்கிறதா, வலுவாக செயல்படுகிறதா எனபதை சில கணக்கீடுகள் வைத்துக் கணக்கிடுவார்கள். கணக்கீட்டின் நிறைவாக வரும் எண் அதிகரித்தால், அதாவது பி.எம்.ஐ அதிகரித்தால் உற்பத்தி நன்றாக இருக்கிறது என்று அர்த்தம்.
யார் கணக்கிடுகிறார்கள்.
இந்தியாவுக்கு நிக்கி என்கிற ஜப்பானிய அமைப்பு தான் பி.எம்.ஐ-க்குத் தேவையான தரவுகளைத் திரட்டுகிறது. ஆனால் தரவுகளை கணக்கிட்டுச் சொல்வது இந்த மார்க்கிட் எக்கனாமிக்ஸ் என்கிற அமைப்பு தான்.
Institute for Supply Management (ISM) என்கிற அமைப்பு அமெரிக்காவுக்கும், Singapore Institute of Purchasing and Materials Management (SIPMM) என்கிற அமைப்பு சிங்கப்பூருக்கும், மார்க்கிட் குரூப் என்கிற அமைப்பு ISM-ன் தரவுகளை டேட்டாவை அடிப்படையாகக் கொண்டு 30-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பி.எம்.ஐ கணக்கிடுகிறது. இதனால் தான் இந்தியாவின் பி.எம்.ஐ-களை நிக்கி பி.எம்.ஐ என்று அழைக்கிறோம்.
எப்படிக் கணக்கிடுகிறார்கள்
இந்தியாவில் பல தரப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் 400 உற்பத்தியாளர்கள் தான் தரவுகளைக் கொடுப்பார்கள். இவர்களிடம் இருந்து 1. கிடைத்திருக்கும் புதிய ஆர்டர்கள், 2. மொத்த உற்பத்தி, 3. வேலை வாய்ப்புகள் அதிகரிப்பு அல்லது குறைவு, 4. தங்கள் நிறுவனங்களுக்கு செய்யப்படும் சப்ளை டெலிவரிக்கள் எப்படி இருக்கின்றன, 5. சரக்குகளின் நிலை தேங்கி இருக்கிறதா அதிகம் தீர்கிறதா, 6. நுகர்வோருக்கு தயாரித்து வைத்திருக்கும் சரக்குகள், 7. தயாரித்த பொருட்களின் விலை மாற்றம், 8. கொடுத்த ஆர்டர்களை செய்து முடிக்காமல் கிடப்பில் வைத்திருப்பது அதிகரித்திருக்கிறதா அல்லது குறைந்திருக்கிறதா, 8. புதிய ஏற்றுமதி ஆர்டர்கள் கிடைத்திருக்கிறதா அல்லது குறைந்திருக்கிறதா, 9. இறக்குமதிகள் அதிகரித்திருக்கிறதா குறைந்திருக்கிறதா என்று முழுமையான விவரங்களை சமர்பிப்பார்கள்.
கணக்கீடு
மேற்கூறிய விஷயங்களில் புதிய ஆர்டர்கள், உற்பத்தி, வேலை வாய்ப்பு, சப்லையர் டெலிவரி மற்றும் சரக்குகள் கையிருப்பு (NEPSI என்று சொல்வார்கள்) போன்றவைகளை கூட்டி ஐந்தால் வகுத்தால் கிடைப்பது பி.எம்.ஐ... சிம்பில். அதாவது மேற்கூறிய விவரங்களுக்கு 20 சதவிகிதம் வெயிட்டேஜ் மட்டுமே கொடுக்கப்படும். இந்த பி.எம்.ஐயால் உற்பத்தித் துறை முழுமையாக பிரதிபலிக்க முடியும், இந்தியா போன்ற 50 சதவிகிதத்துக்கு மேல் சேவை துறை பொருளாதாரம் சார்ந்த நாட்டில் இந்த பி.எம்.ஐ-க்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டாம் என்றும் ஒரு சாரார் சொல்கிறார்கள்.
பங்குச் சந்தையும் பி.எம்.ஐயும்
இந்த பி.எம்.ஐ தரவுகள் மாதாமாதம் முதல் வாரத்திலேயே வெளியாகும். இந்த தரவுகளும் மார்க்கெட் சென்டிமென்டைத் தீர்மானிப்பதில் தனி இடம் வகிக்கிறது. உதாரணமாக பி.எம்.ஐ சரிந்தால், உற்பத்தி துறை சார்ந்த பங்குகளின் விலை இறக்கம் காணத் தொடங்கும்.
தற்போதைய நிலை
இந்தியாவின் பி.எம்.ஐ கடந்த ஆகஸ்ட் மாதத்தை விட 0.5 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. செப்டம்பர் மாத பி.எம்.ஐ 52.2 ஆக உயர்ந்திருக்கிறது. பொதுவாக இந்த பி.எம்.ஐ இண்டெக்ஸ் 50 புள்ளிகளுக்கு மேல் இருந்தாலே, உற்பத்தித் துறை வலுவாக இருக்கிறது என்று பொருள்.