கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் வாடகை சட்டங்களில் திருத்தம் கொண்டு வர மாதிரி வாடகை சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இது மக்கள் மத்தியில் அதிகளவிலான கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில் குழப்பங்களைத் தீர்க்கும் வகையில், இப்புதிய சட்டத்தில் இருக்கும் முக்கிய அம்சங்களை இப்போது பார்ப்போம்.
2 மாத வாடகை மட்டுமே அட்வான்ஸ்
இப்புதிய சட்டத்தின் மூலம் வாடகைதாரர்களிடம் 2 மாத வாடகைக்கு மேல் அட்வான்ஸ் தொகை வாங்க முடியாது. இதைக் கட்டாயம் ஒவ்வொரு வீட்டு உரிமையாளரும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாக மாறியுள்ளது.
இணையதளத்தில் பதிவேற்றம்
வாடகைதாரர் மற்றும் வீடு உரிமையாளர்கள் நம்பிக்கை மற்றும் நிதி பரிமாற்றத்தைக் கண்காணிக்கும் வகையில் வாடகை ஒப்பந்த நகலை, மத்திய வீட்டு வசதி, நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம்.
நீதிமன்றம் செல்ல முடியும்
முன்பெல்லாம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் வாடகை ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தைப் பதிவு செய்யாவிட்டாலும் இரு தரப்பும் நீதிமன்றம் செல்ல முடியும். இது வாடகைதாரர் மற்றும் வீடு உரிமையாளர்கள் ஆகிய இரு தரப்புக்கும் நன்மை அளிக்கும்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
பதிவு அலுவலகத்தில் வாடகை ஒப்பந்தம் பதிவு செய்யப்படாவிட்டாலும், புதிய சட்டத்தின்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பகுதிவாரியாக அமைக்கப்பட்டுள்ள வாடகை ஆணையத்திடம் பதிவு செய்ய வேண்டும். ஆன்லைன் அல்லது நேரடியாக வாடகை ஒப்பந்தத்தைப் பதிவு செய்ய வேண்டும். இந்த ஒப்பந்தத்தைப் பதிவு செய்யாவிட்டால், நிவாரணம் கோரி இரு தரப்பும் நீதிமன்றம் செல்ல முடியாது.
வீட்டு உரிமையாளருக்கு அதிகாரம்
மேலும் வாடகைதாரர் மற்றும் வீடு உரிமையாளர்கள் மத்தியில் ஒப்பந்தம் போடாத நிலையில், வீட்டு உரிமையாளர் மட்டும் நீதிமன்றத்தை நாட புதிய சட்டத்தில் வழிவகைச் செய்யப்பட்டுள்ளது. வீட்டை காலி செய்யாவிட்டால் சட்டப்படி வாடகையை அதிகரிக்க உரிமை உண்டு.
தனி வாடகை ஆணையம்
வாடகை தொடர்பான புகார்களை விசாரிக்கத் தனி வாடகை ஆணையம் அல்லது வாடகை தீர்ப்பாயம் அமைக்கப் புதிய சட்டத்தில் வழிவகைச் செய்யப்பட்டுள்ளது.