இந்திய ரிசர்வ வங்கியானது இன்று எதிர்பார்த்ததை போலவே, 35 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தினை அதிகரித்து, 6.25% ஆக அதிகரித்துள்ளது.
மத்திய வங்கியின் இந்த வட்டி அதிகரிப்பினை பொறுத்து, வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம். இதன் மூலம் கடன் வாங்கியோர் கூடுதல் சுமையை எதிர்கொள்ள வாய்ப்பிருக்கிறது.
ஆக வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் மேற்கொண்,டு கூடுதலாக வட்டி செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம்.
எது சிறந்தது?
இந்த சமயத்தில் கடன் வாங்கியவர்கள் கூடுதலாக வரும் வட்டி விகிதத்தினை அப்படியே எப்போதும் போல செலுத்தி விடலாமா? அல்லது கால அவகாசத்தினை நீட்டித்துக் கொள்ளலாமா? எது சிறந்தது? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. உண்மையில் எது சிறந்தது. எதனை தொடரலாம்? நிபுணர்களின் பரிந்துரை என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
தவணை அதிகரிக்கும்
வீட்டுக் கடன் வீதத்தின் அதிகரிப்புக்கு மத்தியில், உங்கள் மாத தவணையும் அதிகரிக்கலாம்.
வட்டி விகிதங்கள் தொடர்ந்து உயரும் சூழ்நிலையில் என்ன செய்வது? நிதி கிடைக்கும்போது உங்கள் வீட்டுக் கடனை முன் கூட்டியே செலுத்துவது, உங்கள் கடன் சுமை குறையலாம்.
வட்டியே செலுத்தலாம்
வட்டி உட்பட முழு கடனையும் கடன் வாங்கியவர் திருப்பிச் செலுத்த வேண்டிய காலம், நீண்டதாக இருந்தால், நீங்கள் வங்கி அல்லது கடன் வழங்குபவருக்கு அதிக வட்டி செலுத்த வேண்டியிருக்கும். ஆக நீங்கள் தவணை காலத்தினை அதிகரிப்பதற்கு பதில், கூடுதல் வட்டியை தவணை தொகையோடு சேர்த்து செலுத்துவது உத்தமம்.
வட்டி தானாகவே மாறலாம்
மாறக்கூடிய மிதவை வட்டி விகிதங்களைப் பொறுத்தவரை, சந்தை போக்குகளைப் பொறுத்து வட்டி விகிதம் மாற்றத்திற்கு உட்படுத்தப்படும். இது கடன் வழங்கும் நிறுவனம் வழங்கும் அடிப்படை வீதத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. இதனால் அடிப்படை விகிதம் மாறுபடும் என்றால் வட்டி விகிதங்கள் தானாகவே மாறலாம்.
எப்படி காலத்தினை தேர்வு செய்யலாம்?
நிபுணர்கள் கடன் காலம் 3 முதல் 10 ஆண்டுகள் வரை இருந்தால் அதில் மாறக்கூடிய மிதவைக் கடன் என்பது பொருத்தமானதாக இருக்காது. இருப்பினும், 20 அல்லது 30 ஆண்டுகள் நீண்ட கால கடனாக இருந்தால், மாறக்கூடிய வட்டி விகிதத்தைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
நிலையான Vs மிதவை வட்டி
நிலையான வட்டி விகித கடன்களில், ஈ.எம்.ஐ தொகை அப்படியே இருக்கும். ஆனால் மிதக்கும் வட்டி விகிதத்தினை தேர்வுசெய்தால், அது சந்தை சூழ்நிலைக்கு ஏற்ப, வட்டி விகிதம் மாறும்போது நீங்கள் செலுத்த வேண்டிய EMI-யில் தாக்கத்தினை ஏற்படுத்தும்.
கடனை முன்கூட்டியே செலுத்துதல்
பல வங்கிகள் கடன் தொகையின் ஒரு பகுதியை முன்கூட்டியே செலுத்துவதற்கான வசதியை அனுமதிக்கின்றன. கடன் தொகையை முன்கூட்டியே செலுத்துவதன் மூலம் அசல் தொகை குறையும், இதனால் செலுத்த வேண்டிய மாத தவணைத் தொகை குறையும். இதன் மூலம் செலுத்தும் வட்டியும் குறையும்.
வட்டி செலுத்துவதும் குறையும்
மொத்தத்தில் கடனுக்கான வட்டி விகிதம் என்பது அதிகரித்துள்ள இந்த சூழலில் கால அவகாசத்தினை அதிகரிப்பினை அதிகரிப்பதை விட, தவணையை அதிகரித்து செலுத்திக் கொள்ளலாம். அப்படி இல்லாவிட்டால் முன் கூட்டியே திரும்ப செலுத்திக் கொள்ளலாம். அப்படி செலுத்தும்பட்சத்தில் மாத தவணையும் குறையும். வட்டி செலுத்துவதும் குறையும்.