பங்கு சந்தை பற்றிய தொடரில் முன்னதாக டீமேட் என்றால் என்ன? அதனை எப்படி தொடங்குவது என்பதை பற்றி பார்த்தோம். இதில் புரோக்கர்கள் எதற்காக? ஆன்லைனில் செய்ய முடியாதா? பாதுகாப்பு உண்டா? கமிஷன் உண்டா? வாருங்கள் பார்க்கலாம்.
பங்கு சந்தையில் பங்கு வாங்குவதற்கும், அதனை விற்பனை செய்வதற்கும் உதவி செய்பவர் புரோக்கர். இதற்கு கட்டணம் உண்டு. இது புரோக்கருக்கு புரோக்கர் மாறுபடும். இது புரோக்கிங் நிறுவனங்கள் தீர்மானிப்பது தான். எனினும் வாடிக்கையாளர்களை கவர குறைந்தபட்ச புரோக்கரேஜ் கொடுப்பார்கள்.
ஒரு புரோக்கர் என்பவர் பங்கினை வாங்கவும், விற்பனை செய்யவும் உதவிகரமாக இருப்பவர். ஆனால் அவர்களை நம்பி எக்காரணத்தினைக் கொண்டும் முதலீடு செய்யக்கூடாது, இதனால் உங்கள் பணம் நஷ்டமாகவும் வாய்ப்புள்ளது. ஆக மிக நம்பிக்கையான ஒரு புரோக்கரை அணுகி முதலீடு செய்யுங்கள்.
ஆஃப்லைன் வணிகம் என்றால் என்ன?
ஆஃப்லைன் வணிகம் என்பது நீங்கள் கணக்கு தொடங்கும் பங்கு சந்தை தரகரிடமே வணிகம் செய்து கொள்ளலாம். புரோக்கர்கள் அலுவலகம் சென்றும் வணிகம் செய்து கொள்ளலாம். அப்படி இல்லாவிட்டாலும் போன் மூலமாகவும் வணிகம் செய்து கொள்ளலாம். இதற்காக கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை.
ஆன்லைனில் வணிகம் செய்யலாம்?
ஆன்லைனிலும் டிரேடிங் செய்து கொள்ளலாம். இதற்காக ஆன்லைன் சாப்ட்வேர் அல்லது மொபைல் ஆப் மூலமாகவும் வணிகம் செய்து கொள்ளலாம். இதற்கு சில புரோக்கர்கள் கட்டணம் வசூலிக்கின்றனர். சில புரோக்கர்கள் இலவசமாகவே தருகின்றனர். இதில் நீங்கள் வணிகம் செய்யும் பிளார்ட்பார்ம் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு வணிகம் செய்ய வேண்டும். ஏனெனில் நீங்கள் செய்யும் சிறு தவறு கூட உங்கள் பணம் இழக்க வழிவகுக்கலாம். ஆக கவனமுடன் செயல்படுவது நல்லது.
எப்படி ஒரு பங்கினை தேர்வு செய்வது?
சரி டீமேட் தொடங்கியாச்சு? ஆன்லைன் அல்லது ஆஃப் லைன் என்பதை தீர்மானம் செய்தாச்சு. அடுத்து ஒரு பங்கினை தேர்வு செய்வது? பங்கு சந்தையில் இதுவரையில் நாம் பார்த்ததெல்லாம் மிக மிக அடிப்படை விஷயங்கள் தான். ஆனால் ஒரு பங்கினை எப்படி தேர்வு செய்வது? இது தான் சரியான பங்கா? எந்த மாதிரியான விஷயங்களை கவனிக்க வேண்டும் என்பது தான் கடினமான விஷயம்.
கவனிக்க வேண்டியவை என்ன?
பொதுவாக ஒரு நிறுவனம் எந்த துறையை சேர்ந்தது? அதன் உற்பத்தி அல்லது சேவை என்ன? அதன் எதிர்காலம் எப்படி உள்ளது? இதன் சொத்து மதிப்பு எவ்வளவு? கடன் எவ்வளவு? அந்த நிறுவனத்திற்கு தரக்குறியீடு எவ்வளவு உள்ளிட்ட சில விஷயங்களும் கவனிக்க வேண்டியவையாக உள்ளன. பொதுவாக பங்கினை ஐபிஓ-விலும் வாங்கலாம். ஏற்கனவே ஐபிஓ மூலம் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களை செகண்டரி சந்தை மூலம் வாங்கலாம்.
ஐபிஓவுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
நீங்கள் செகண்டரி சந்தையில் சந்தை நாளில் ஒரு பங்கினை எப்போது வேண்டுமானாலும் வாங்கலாம், விற்கலாம். ஆனால் ஐபிஓவில் அப்படி நினைத்த நேரத்தில் வாங்க முடியாது? கிடைக்கும் விலையில் வாங்க முடியாது., நிறுவனம் என்ன விலை நிர்ணயம் செய்கிறதோ அதனைத் தான் வாங்க முடியும், அதேபோல நிறுவனம் நிர்ணயம் செய்யும் லாட்டின் மதிப்பில் தான் வாங்க முடியும். ஆனால் செகண்டரி சந்தையில் அப்படி இல்லை. சந்தையில் என்ன விலைக்கு வர்த்தகமாகிக் கொண்டுள்ளதோ அந்த விலைக்கே வாங்கலாம், விற்பனை செய்யலாம். ஒரு பங்கினை கூட வாங்கி விற்பனை செய்யலாம். ஆனால் ஐபிஓவில் புரோக்கர்கள் மூலம் , வங்கிகள் மூலமும் வாங்கிக் கொள்ளலாம். இப்போதெல்லாம் ஆன்லைனினும் கூட விண்ணபிக்கலாம். ஐபிஓ விண்ணப்பித்தாலும் உங்களுக்கு கட்டாயம் பங்கு கிடைக்கும் என கூறி விட முடியாது. இது குலுக்கல் முறையில் தான் ஓதுக்கீடு செய்வார்கள். உங்களுக்கு பங்கு கிடைக்கவில்லை எனில், உங்களது கணக்கிற்கு பணம் திரும்ப செலுத்தப்பட்டு விடும். ஐபிஓவில் நல்ல நிறுவனங்களின் பங்குகள் கூட சற்று குறைவாக இருக்கும். இதனால் தான் சிறு முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.