ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று காலை பத்திரிகையாளர்களைச் சந்தித்து சில அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து, இன்று பங்குச் சந்தையில் அரசு அற்றும் தனியார் வங்கிகளின் பங்கு விலை சரமாரியாக சரிந்து கொண்டு இருக்கின்றன.
அதற்கான காரணங்கள் என்ன? எந்த அளவுக்கு பங்கு விலை சரிந்து கொண்டு இருக்கிறது என்பதைத் தான் இங்கு விரிவாகப் பார்க்க இருக்கிறோம்.
காரணங்கள்
1. கொரோனா வைரஸால் வங்கிகள் அதிகம் கடன் கொடுக்க முடியவில்லை. ஆகையால் கடன் வளர்ச்சி இல்லை.
2. கொடுத்த கடனையாவது முறையாக திருப்பி வாங்கி, இழப்பை சரிகட்டலாம் எனப் பார்த்தால், மார்ச் 01 முதல் மே 31 வரை அறிவித்து இருந்த 3 மாத கடன் ஒத்தி வைப்பை, மேலும் 3 மாதங்களுக்கு (ஆகஸ்ட் 31 வரை) நீட்டித்து இருக்கிறது ஆர்பிஐ.
விளைவுகள்
இதனால் வங்கிகளுக்கு வரும் வருமானம் கணிசமாக அடி வாங்கும். எனவே அடுத்த சில காலாண்டு முடிவுகள் அத்தனை சிறப்பாக வரும் எனச் சொல்ல முடியாது. இந்த செய்தி தான் தற்போது இந்தியாவின் வங்கிப் பங்குகளின் விலையை சரமாரியாக வீழ்த்தி இருக்கிறது.
அரசு வங்கிகள்
இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ கூட, தன் 52 வார குறைந்த விலையாக 151 ரூபாயைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பஞ்சாப் நேஷனல் பேங்க், யூனியன் பேங்க், பேங்க் ஆஃப் பரோடா என பல அரசு வங்கிகளின் பங்கு விலையும் கிட்டத்தட்ட தங்களின் 52 வார குறைந்த விலைக்கு நெருக்கமாகவோ அல்லது புதிய 52 வார குறைந்த விலையைத் தொட்டோ தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
தனியார் வங்கிகள்
அரசு வங்கிப் பங்குகளாவது கொஞ்சமாகத் தான் விலை சரிவை சந்தித்து இருக்கின்றன. ஆனால் தனியார் வங்கிகள் சரமாரியாக சரிந்து இருக்கிறது. உதாரணம் ஃபெடரல் பேங்கின் பங்கு விலை சுமாராக 5.97 % சரிந்து இருக்கிறது. ஹெச் டி எஃப் சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், சிட்டி யூனியன் பேங்க், டிசிபி பேங்க் என பல பெரிய தனியார் வங்கி பங்குகளும் பயங்கரமாக விலை சரிவை சந்தித்துக் கொண்டு இருக்கின்றன.
முதலீட்டாளர்கள் கவலை
ஏற்கனவே, சென்செக்ஸ் தன் கொரோனாவுக்குப் பின் தொட்ட 33,887 உச்சப் புள்ளியைத் தொட முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறது. இப்போது ஆர்பிஐ அறிவிப்புகள் வேறு, சென்செக்ஸில் அதிகம் வெயிட்டேஜ் இருக்கும் வங்கிகள் மற்றும் நிதி சேவைத் துறைகளை கடுமையாக பாதித்து இருப்பதால் முதலீட்டாளர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள்.