பங்குச் சந்தையில், ஏகப்பட்ட பங்குகள், பல நாட்கள் வரை இருக்கும் இடம் தெரியாமல் வர்த்தகமாகும். அதில் சில பங்குகள் திடீரென பங்குச் சந்தையின் ஒட்டு மொத்த கவனத்தை பெறுவதும் வழக்கம் தான்.
அப்படி, இப்போது அனில் அம்பானியின் பங்குகள் பலராலும் பார்க்கப்பட்டு வருகின்றன.
ஒரு பங்கு திடீரென பங்குச் சந்தையில் ஹீரோவாகி இருக்கிறது என்றால் முரட்டு லாபம் கொடுத்து இருக்க வேண்டுமே? அனில் அம்பானி பங்குகள் அப்படி என்ன லாபம் கொடுத்து இருக்கிறது? வாருங்கள் பார்ப்போம்.
எவ்வளவு விலை ஏற்றம்
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் பவர் கம்பெனி பங்குகள் கடந்த மார்ச் 25, 2020 அன்று 1.04 ரூபாய்க்கு வர்த்தகமானது. ஆனால், ஜூலை 01, 2020 அன்று 357 சதவிகிதம் விலை அதிகரித்து 4.76 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. அதே போல ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பங்கு விலையும் 349 % அதிகரித்து இருக்கிறது. ரிலையன்ஸ் கேப்பிட்டல் விலை 243 % அதிகரித்து இருக்கிறது.
நஷ்டம் டூ லாபம்
இந்த 300 சதவிகிதத்துக்கு மேலான விலை ஏற்றம் எல்லாம் பாராட்டப்பட வேண்டியது தான். ஆனால் கடந்த பல ஆண்டு காலத்தில், இந்த பங்குகள் விலை உச்சத்தில் இருந்து, சுமாராக 98 சதவிகிதத்துக்கு மேல் வீழ்ச்சி கண்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஆக இப்போது காணும் விலை ஏற்றத்தை மட்டுமே வைத்து இந்த பங்குகளை பாராட்டிவிட முடியாது.
எச்சரிக்கை செய்கிறார்கள்
இந்த மாதிரியான பங்குகளில் டிரேட் செய்யும் போது மிக மிக ஜாக்கிரதையாக செய்ய வேண்டும் எனவும் எச்சரிக்கிறார்கள் அனலிஸ்ட்கள். ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? தற்போது பணத்துடன் சந்தைக்கு வந்திருக்கும் முதலீட்டாளர்கள், கம்பெனியின் பின்புலத்தை ஆராயாமல், குறைந்த விலை கொண்ட பங்குகளை வாங்குகிறார்கள். இதில் ரிஸ்க் அதிகம் என்கிறார்கள் அன்லிஸ்ட்கள்.
வாங்கிக் குவிக்கிறார்கள்
கடந்த 01 ஜூலை 2020 அன்று ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பங்குகளில் 60 % டெலிவரி வால்யூம் இருக்கிறது. ரிலையன்ஸ் பவரில் 55 % டெலிவரி வால்யூம் இருக்கிறது. ஒரு பங்கில் இப்படி அதிகம் டெலிவரி நடக்கிறது என்றால் வாங்கிக் குவிக்கிறார்கள் (Accumulation) என்று பொருள். அது அனில் அம்பானியின் பங்குகளில் நடந்து கொண்டு இருக்கிறது.
ஏன் விலை எகிறுகிறது
சமீபத்தில் நடந்த ஆண்டுப் பொதுக் கூட்டத்தில், ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் கம்பெனியை முழுமையாக கடன் இல்லா கம்பெனியாக இந்த நிதி ஆண்டுக்குள் மாற்றுவோம் எனச் சொன்னார்கள். அதற்காக பல்வேறு சொத்துக்களை விற்று பணத்தை தயார் செய்து கொண்டும் இருக்கிறார்கள். இந்த நல்ல செய்தியுடன் மற்றொரு செய்தியும் இருக்கிறது.
காலாண்டு முடிவுகள்
அதோடு ரிலையன்ஸ் இன்ஃப்ரா கம்பெனியின் நிகர லாபம் மார்ச் 2020 காலாண்டுக்கு 30 கோடியாக அதிகரித்து இருக்கிறது. மார்ச் 2019-ல் ரிலையன்ஸ் இன்ஃப்ராவில் நிகர நஷ்டம் 1,664 கோடி ரூபாய். ரிலையன்ஸ் பவரின் நஷ்டம் முந்தைய ஆண்டை விட குறைந்து இருக்கிறது. இந்த நல்ல செய்தியும் பங்கு விலை ஏற்றத்துக்கு வலு சேர்த்துக் கொண்டு இருக்கிறது.
ப்ரொமோட்டார் ஹோல்டிங்ஸ்
அதோடு, ரிலயன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மற்றும் ரிலையன்ஸ் ப்வர் கம்பெனிகளில், ப்ரொமோட்டர்கள், பங்குகளை பொறுமையாக அதிகரித்துக் கொள்ள இருப்பதாகவும் ஆண்டுப் பொதுக் கூட்டத்திலேயே சொன்னார்கள். அதுவும் அனில் அம்பானியின் கம்பெனி பங்குகள் விலை அதிகரிக்க ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.
உஷார் மக்களே
இந்த செய்திகளின் வீரியம் குறையும் போது, தானாகவே பங்குகளின் விலையும் சரியும். அப்போது இந்த கம்பெனி பங்குகள் யார் வாங்குவார்கள், எத்தனை பேர் நஷ்டமடையப் போகிறார்கள் என்பது எல்லாம் கடவுளுக்குத் தான் வெளிச்சம். நீங்கள் அவசரப்பட்டு இந்த பங்குகளை வாங்கி பணத்தை இழக்க வேண்டாம். உஷாராக டிரேட் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.