பணம், ஒரு அச்சடித்த ஆயுதம் என்பார்கள். பணம் ஒரு மனிதனைப் பார்க்கும் விதத்தையே மாற்றி விடும். அவன் உண்ணும் உணவு தொடங்கி, நடை உடை பாவனை எல்லாமே, பணம் தீர்மானித்து விடும்.
அப்படிப்பட்ட பணத்தை அல்லது பணத்தின் மதிப்பைத் தான் இன்று இந்திய சந்தையில் முதலீடு செய்து இருப்பவர்கள் இழந்து இருக்கிறார்கள்.
எவ்வளவு இழந்து இருக்கிறார்கள் தெரியுமா 39 லட்சம் கோடி ரூபாய். இதை வைத்துக் கொண்டு ஒரு வருடத்துக்கு இந்திய அரசு பட்ஜெட்டே போடலாம். அந்த அளவுக்கு இழந்து இருக்கிறார்கள்.
எப்படி இழந்தார்கள்
இந்த மார்ச் 03, 2020 அன்று ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு இருக்கும் பங்குகளின் சந்தை மதிப்பு 148.19 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் இதுவே மார்ச் 19, 2020 அன்று பார்த்தால் அது வெறும் 109.76 லட்சம் கோடி ரூபாயாக சரிந்து இருக்கிறது.
39 லட்சம் கோடி
ஒட்டு மொத்தமாக எல்லா பங்குகளின் விலையும் சரிந்து இருப்பதால் சுமாராக 3 வார காலத்துக்குள் மும்பை பங்குச் சந்தையில் 39 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பு (Market Capitalization) காணாமல் போய் இருக்கிறது. அதாவது மார்ச் 03 அன்று பி எஸ் இ-ல் இருந்த மொத்த பங்குகளின் மதிப்பு 148.19 லட்சம் கோடியாக இருந்தது, மார்ச் 19, 2020 அன்று 39 லட்சம் கோடி சரிந்து 109.76 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது.
வரலாறு காணா சரிவுகள்
சென்செக்ஸ், கடந்த 24-08-2015 அன்று, ஒரே நாளில், 1,624 புள்ளிகள் சரிந்தது தான் சென்செக்ஸ் வாழ்நாளில் வரலாறு காணாத ஒரு நாள் சரிவாகச் சொல்லப்பட்டது. ஆனால் கடந்த மார்ச் 09, 2020 அன்று ஒரே நாளில் 1,941 புள்ளிகள் சரிந்தது. இந்த சரிவுக்குப் பின் இது தான் சென்செக்ஸ் ஒரு நாளில் கண்ட மிகப் பெரிய வீழ்ச்சியாகச் சொல்லப்பட்டது.
அலற விட்ட சென்செக்ஸ்
மீண்டும், அடுத்த சில நாட்களில், மார்ச் 12, 2020 அன்று ஒரே நாளில் 2,919 புள்ளிகள் சரிந்து எல்லோரையும் அலற விட்டது சென்செக்ஸ். ஆனால் இன்று மீண்டும் 3,934 புள்ளிகள் சரிந்து, முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களை, பங்குச் சந்தையை விட்டே தெறித்து ஓட வைத்திருக்கிறது சென்செக்ஸின் ஒரு நாள் வீழ்ச்சி. இப்படி தொடர்ந்து வீழ்ச்சி கண்டால் சந்தை சந்தை கடுமையாக சரியத் தானே செய்யும். அது தான் 39 லட்சம் கோடி மதிப்பு சரிந்து இருக்கிறது.
காரணங்கள் என்ன
உலகில், வர்த்தகமும் வியாபாரமும் நிலையாக இருந்தால் தான் பங்குச் சந்தைகளும் நிலைத்து இருக்கும். ஆனால் கொரோனா வைரஸால் எல்லாமே பாதிக்கப்பட்டு இருக்கிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த விமான போக்குவரத்துக்கள் தடை, ஏற்றுமதி இறக்குமதி சிக்கல், தடைபடும் உற்பத்தி, கடுமையான கட்டுப்பாடுகளால் வியாபார சரிவு... என எந்த பக்கம் போனாலும் கேட் போடுகிறது கொரோனா. குறிப்பாக கொரோனா பயம் உலக அளவில் பங்குச் சந்தைகளை பிடித்து ஆட்டிக் கொண்டு இருக்கிறது.
மற்ற காரணிகள்
இது போக, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 76 ரூபாயைக் கடந்து எங்கோ பாதாளத்துக்குச் சென்று கொண்டு இருப்பது, சவுதி அரேபியா மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான கச்சா எண்ணெய் உற்பத்திச் சண்டை, சீராக இயங்க முடியாத அலுவலகங்கள் போன்ற காரணங்களைச் சொல்லலாம்.
பாதிப்பு
இந்த காரணங்களால், உள்ளூர் பொருளாதாரம் தொடங்கி உலக பொருளாதாரம் வரை, பரவலாக ஏற்படும் பேரிழப்பு எல்லாம் இந்திய பங்குச் சந்தைகளை புரட்டி எடுத்துக் கொண்டு இருக்கின்றன. இன்னும் எத்தனை லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பு காணாமல் போக இருக்கிறதோ தெரிய வில்லை. இந்த கொரோனாவை கட்டுப்படுத்தினால் தான் உண்டு. என்னத்தையாவது பண்ணி இந்த கொரோனாவ கொல்லுங்கையா..? முடியல.