மும்பை பங்குச்சந்தை கடந்த ஒரு வாரத்தில் மிகவும் மோசமான வர்த்தகப் பாதிப்பை எதிர்கொண்டது என்று தான் சொல்ல வேண்டும். இந்தியா முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்று மற்றும் அதன் மூலம் மத்திய மாநில அரசுகள் விதித்துள்ள லாக்டவுன் கட்டுப்பாடுகள் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் இருந்து கிடைக்கும் முதலீட்டைப் பெரிய அளவில் பாதித்துள்ளது.
இதனால் ஏப்ரல் 23 உடன் முடிந்த வாரத்தில் மட்டும் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 953.58 புள்ளிகள் சரிந்து 1.95 சதவீத சரிவை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 47,878.45 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்துள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 276.45 புள்ளிகள் சரிந்து 14,341.4 புள்ளிகளைத் தொட்டு 1.89 சதவீத சரிவை பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் அடுத்த வாரத்தின் வர்த்தகம் எப்படி இருக்கும் என்பது தான் அனைவரின் முக்கியக் கேள்வியாக உள்ளது.
பயமுறுத்தும் கொரோனா தொற்று
2020 கொரோனா தொற்றை விடவும் தற்போது மிகவும் மோசமாகவும், அதிகளவிலான இளம் தலைமுறையினரைப் பாதிக்கும் காரணத்தால் மாநில அரசுகள் கடுமையான கட்டுப்பாடுகள் உடன் லாக்டவுனை கடைப்பிடிக்கிறது. இதேவேளையில் தமிழ்நாடு உட்படப் பல மாநிலங்களில் மக்களும் மிகவும் கவனமுடன் இயங்குகின்றனர். ஆனாலும் இங்கொன்றும் அங்கொன்றுமாக சில தவறுகள் நடக்கிறது.
அதீத பாதிப்பில் உற்பத்தி
மேலும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ஏற்கனவே பல MSME நிறுவனங்கள் தங்களது உற்பத்தி பணிகளை அடுத்த சில நாட்களுக்குக் குறைத்துள்ள நிலையில், பெரிய ஆட்டோமொபைல் நிறுவனங்களான ஹீரோ மோட்டோகார்ப், டொயோட்டா ஆகிய நிறுவனங்களும் அடுத்த 3 வாரங்களுக்குத் தொழிற்சாலையைத் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது.
நம்பிக்கை உயர்ந்துள்ளது
இந்தச் சூழ்நிலையில் நாட்டின் உற்பத்தி மட்டும் அல்லாமல் வர்த்தகமும் பெரிய அளவில் பாதிக்கும் என எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து கொரோனா வேக்சின், மொபைல் ஆக்சிஜன் வண்டிகள் எனப் பலவற்றைக் கொரோனா பாதிப்பை குறைக்கும் பணிகளைச் செய்து வரும் நிலையில் முதலீட்டாளர்கள் மத்தியில் கணிசமான நம்பிக்கை உருவாகியுள்ளது.
மும்பை பங்குச்சந்தையில் சரிவு
இதனால் அடுத்த சில வாரங்களுக்கு மும்பை பங்குச்சந்தையில் முதலீடுகள் குறைந்தாலும், கணிசமான சரிவு தொடரும் எனக் கணிப்புகள் நிலவுகிறது. ஆனால் அடுத்த 3 வாரத்தில் மும்பை பங்குச்சந்தையில் தற்போது நிலவும் மந்த நிலை முழுமையாக மாறிச் சரிவில் இருந்து மீளும் எனவும் கணிக்கப்படுகிறது.
லார்ஜ் கேப் குறியீடு மோசமான சரிவு
இந்நிலையில் ஏப்ரல் 23 உடன் முடிந்த வாரத்தில் பிஎஸ்ஈ லார்ஜ் கேப் குறியீடு அதிகப்படியாக 2 சதவீதம் அளவிலான சரிவை அடைந்து முதலீட்டாளர்களுக்குப் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் மிட் கேப் குறியீடு 1 சதவீதமும், ஸ்மால் கேப் குறியீடு பிளாட்டான வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது.
முக்கிய துறைகள் சரிவு
மேலும் கடந்த ஒரு வாரத்தில் நிப்டி ரியாலிட்டி 3.6 சதவீதமும், நிப்டி பிஎஸ்யூ வங்கி 3.5 சதவீதமும், நிஃப்டி எப்எம்ஜிசி 3 சதவீதமும், நிஃப்டி மீடியா 2.6 சதவீதமும் சரிவை பதிவு செய்துள்ளது. இதோடு ஹிந்துஸ்தான் யூனிலீவர் சுமார் 34,914.58 கோடி ரூபாய் அளவிலான சந்தை மதிப்பீட்டை இழந்துள்ளது.
டாப் நிறுனங்களுக்கு பெரும் இழப்பு
இதைத் தொடர்ந்து டிசிஎஸ் 30,887.07 கோடி ரூபாய், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 19,077.49 கோடி ரூபாய், அல்ட்ராடெக் சிமெண்ட் 19,006.39 கோடி ரூபாய், பஜாஜ் பைனான்ஸ் 2,925.56 கோடி ரூபாய், டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் 2,888.65 கோடி ரூபாய், ஐசிஐசிஐ வங்கி 2,386.24 கோடி ரூபாயை இழந்துள்ளது.