ஒரு வழியாக, இந்தியாவின் மிகப் பெரிய லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனமான எல் ஐ சி நிறுவனத்தை, இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடும் வேலையைத் தொடங்கி இருக்கிறது மத்திய அரசு. இந்த ஐபிஓ இந்தியாவிலேயே மிகப் பெரிய ஐபிஓவாக இருக்கலாம் எனவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
மத்திய அரசு, எல் ஐ சியின் 5 முதல் 10 சதவிகித பங்குகளை மட்டும் ஐபிஓ வழியாக, பங்குச் சந்தைகளில் விற்க இருக்கிறார்கள் என்றால் கூட, இந்தியாவிலேயே இது மிகப் பெரிய ஐபிஓ-வாக இருக்கும் என்கின்றன செய்திகள்.
கடந்த 2018 - 19 நிதி ஆண்டில், எல் ஐ சி நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு 31.11 லட்சம் கோடி ரூபாயைத் தொட்டு இருக்கிறது. அதே 2018 - 19 நிதி ஆண்டில் எல் ஐ சி நிறுவனம் தன்னுடைய ஈக்விட்டி முதலீடுகளில் இருந்து மட்டுமே சுமாராக 23,621 கோடி ரூபாயை லாபமாகப் பார்த்து இருக்கிறது. அதர்கு முந்தைய ஆண்டு 25,646 கோடி ரூபாயை ஈக்விட்டி முதலீடுகளில் இருந்து லாபமாகப் பார்த்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் லைஃப் இன்சூரன்ஸ் சந்தையில், முதலாமாண்டு பிரீமியத்தில் 66.24 % சந்தையையும், புதிய பாலிசிகளில் 74.7 % சந்தையையும் கைவசம் வைத்திருக்கிறது எல் ஐ சி கம்பெனி.
2020 - 21 நிதி ஆண்டில் மொத்தம் 2.1 லட்சம் கோடி ரூபாயை Disinvestment வழியாகத் திரட்ட இருப்பதாகச் சொல்லி இருக்கிறது மத்திய அரசு. அதிலும் 90,000 கோடி ரூபாயை எல் ஐ சி மற்றும் ஐடிபிஐ பங்குகளை விற்று திரட்ட இருப்பதாகச் சொன்னதும் நினைவு கூறத்தகக்து.
இதற்கு முன்பு, ஜெனரல் இன்சூரன்ஸ் கார்பப்ரேஷன் மற்றும் நியூ இந்தியா அஸ்ஸூரன்ஸ் கம்பெனிகளை மத்திய அரசு சில ஆண்டுகளுக்கு முன், இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த ஐபிஓ கொண்டு வந்தால், எல் ஐ சியின் நடவடிக்கைகள் மேலும் வெளிப்படைத்தன்மை கொண்டதாகும். அவ்வப் போது பங்குச் சந்தைகளுக்கும், எல் ஐ சி நிறுவனம் தன் நிதி சார் விவரங்களைச் சொல்ல வேண்டி இருக்கும் என்பதும் கவனிக்கத்தக்கது.