மும்பை பங்குச் சந்தையின் பெஞ்ச்மார்க் இண்டெக்ஸான சென்செக்ஸ் இன்று காலை முதலே ஏற்றத்தில் தான் வர்த்தகமானது. நேற்று 33,228 புள்ளிகளில் நிறைவடைந்தது சென்செக்ஸ்.
ஆனால் இன்று காலை 33,853 புள்ளிகளில் நல்ல கேப் அப்பில் தான் வர்த்தகமானது. 34,022 புள்ளிகளைக் கூட தொட்டது. அதன் பின் சின்ன சின்ன ஏற்ற இறக்கத்துடன் காலை 11.30 மணி வரை அப்படியே நிலைத்தது. 33,750 புள்ளிகளுக்குக் கீழ் வரவில்லை சென்செக்ஸ்.
மதியம் இந்தியா சீனா எல்லைப் பிரச்சனை குறித்த செய்திகள் வெளியாகத் தொடங்கின. அது சென்செக்ஸையும் நேரடியாக பாதித்தது.
12 மணிக்கு மேல்
மதியம் 12 மணி வாக்கில் இந்தியா சீனாவுக்கு இடையிலான பிரச்சனையில், இந்தியா தரப்பில் மூன்று வீரர்கள், வீர மரணம் அடைந்து இருப்பதாக வெளியான செய்தியால், ஏற்றத்தில் வர்த்தகமாக முயற்சித்துக் கொண்டிருந்த சென்செக்ஸை, இறக்கத்தில் வர்த்தகமாக வைத்தது. இதை, சென்செக்ஸின் நிமிட சார்ட்டில் தெளிவாகப் பார்க்க முடிகிறது.
ஒரு பெரிய சரிவு
மதியம் 12.05 மணி வாக்கில் சென்செக்ஸ் தன் வலுவான ஏற்றப் புள்ளியான 33,750 புள்ளிகளை விட்டு இறக்கம் காணத் தொடங்கியது. மதியம் சுமாராக 01.15 மணி வாக்கில் சென்செக்ஸ் தன் இன்றைய நாளுக்கான குறைந்தபட்சப் புள்ளியாக 32,953 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது. அதாவது சென்செக்ஸின் முந்தைய நாள் குளோசிங் புள்ளியான 33,228 புள்ளிகளை விட 275 புள்ளிகள் சரிந்துவிட்டது.
மீண்டும் எழுதல்
32,953 புள்ளிகளைத் தொட்ட பின், மீண்டும் சென்செக்ஸ் மெல்ல ஏற்றம் காணத் தொடங்கியது. மதியம் 2.25 மணி வாக்கில் சென்செக்ஸ் 33,500 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமாகத் தொடங்கியது. அப்படியே ஏற்றத்தில் தொடர்ந்த சென்செக்ஸ் வர்த்தக நேர முடிவில் 33,605 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
ரீபவுண்ட்
ஒட்டு மொத்தத்தில், சென்செக்ஸ் இன்று ஒரே நாளில், தன் குறைந்தபட்ச புள்ளியான 32,953 புள்ளிகளில் இருந்து, 652 புள்ளிகள் ரீபவுண்ட் ஆகி, முதலீட்டாளர்களும், வர்த்தகர்களும் பாசிடிவ் செண்டிமெண்ட் உடன் இருப்பதை உறுதி செய்து இருக்கிறது. ஆனால் இன்றைய நாளின் உச்சப் புள்ளியான 34,022 புள்ளிகளுக்கு நெருக்கமாக சந்தை வர்த்தகம் நிறைவடையவில்லை, என முதலீட்டாளர்களும், வர்த்தகர்களுக்கும் சின்ன வருத்தம் இருக்கலாம்.