மும்பை : இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான ஐஆர்சிடிசி, பொதுவெளியீடு முதல் கொண்டே நல்ல வரவேற்பை பெற்றது என்றே கூறலாம்.
அந்தளவுக்கு நல்ல ஏற்றம் கண்டு வருகிறது. இந்த பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட நான்கு மாதத்தில் 500% லாபத்தினை கொடுத்துள்ளது.
இந்த நிறுவனம் வியாழக்கிழமையன்று, இதன் 52 வார உச்சமான 1976 ரூபாயை எட்டியுள்ளது.
500% வருமானம்
குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இந்த பங்கு முதலீட்டாளர்களுக்கு பொதுபங்கு வெளியீட்டுக்கு பின்னர் 500% வருமானத்தினைக் வாரி வழங்கியுள்ளது. இதில் கவனிக்க தக்க விஷயம் என்னவெனில் அவ்வப்போது சிறிது இறக்கம் கண்டாலும், இந்த நிறுவனத்தின் பொது பங்கு வெளியீடு தொடங்கி, இன்று வரையில் இந்த பங்கு விலையானது தொடர்ச்சியான ஏற்றம் கண்டு வருகிறது. இது பெரும் அசுர வளர்ச்சியாகும்
பங்கு விலை எவ்வளவு?
மேலும் முந்தைய பங்கு சந்தையின் முடிவு விலையில் இருந்து இன்று இந்த பங்கின் விலையானது 5.30% ஏற்றம் கண்டு, 1927.75 ரூபாயாக முடிவடைந்துள்ளது. எனினும் சென்செக்ஸ் 0.37% வீழ்ச்சி கண்டு 41,170.12 ஆக முடிவடைந்துள்ளது கவனிக்கதக்கது. இதே போல் நிஃப்டியும் 0.37% வீழ்ச்சி கண்டு12,080 ஆக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது.
பங்கு சந்தையில் பட்டியலிடல்
ஐஆர்சிடிசி லிமிடெட் நிறுவனம் பங்கு சந்தைகளில், அக்டோபர் 14, 2019 அன்று பட்டியலிடப்பட்டது. பட்டியலிடப்பட்டதிலிருந்தே இந்த பங்கின் விலையானது நேர்மறையாகத்தான் உள்ளது. சொல்லப்போனால் சிறு சிறு சில்லறை முதலீட்டாளர்கள் முதல் கொண்டு, பெரிய பெரிய நிறுவனங்கள் வரை சகட்டுமேனிக்கு இந்த பங்கினை அந்த சமயத்தில் வாங்கி போட்டார்கள்.
முதல் நாளே 101%
இதனால் 2.01 பங்குகளுக்கு 225.09 கோடி விண்ணப்பங்கள் அந்த சமயத்தி வந்தது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் இது உண்மை தான். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் ஐபிஒவில் இந்த பங்கானது 320 என்ற விலைக்கு விற்கப்பட்ட நிலையில், பங்கு சந்தையில் 644 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டது. அப்போதே இந்த நிறுவனம் 101.25% பிரிமியத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
எகிறிய லாபம்
இந்த நிலையில் தான் ஐஆர்சிடிசியின் மூன்றாவது காலாண்டு லாபம் 179.6% அதிகரித்து, 205.80 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் வெறும் 73.60 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் - டிசம்பர் காலத்தில் நிகர விற்பனையானது 64.6% அதிகரித்து 715.98 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் வெறும் 435.01 கோடி ரூபாயாக இருந்தது.
வருவாய் அதிகரிப்பு
குறிப்பாக இணையம் மூலமாக பதிவு செய்யப்படும் டிக்கெட் மூலம் 310.16% வருவாய் அதிகரித்து, 226.90 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது. இதே கேட்டரிங் மூலம் வருவாய் 8.23% அதிகரித்து 269.20 கோடி ரூபாயாகவும், இதே மாநில தீர்த்த வணிகம் (state Teertha business) மூலம் 863.32% அதிகரித்து 66.40 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே சுற்றுலா துறை மூலம் 14.63% வருவாய் அதிகரித்து 94.86 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும், இதே ரயில் நீர் மூலம் வருவாய் 41.89% அதிகரித்து 58.60 கோடி ரூபாய் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மூன்றாவது தனியார் ரயில் இயக்கம்
இந்த நிலையில் ஐஆர்சிடிசி தனது மூன்றாவது காசி மஹாகல் எக்ஸ்பிரஸின் வணிக நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. இது இந்தூர் - வாராணாசி வரை செல்லும் சென்றும் கூறப்படுகிறது. இந்த மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயில், மத்தியப் பிரதேசம் இந்தூர் அருகே இருக்கும் ஓம்கரேஸ்வர், உஜ்ஜைனில் உள்ள மகாகாலேஸ்வர், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆகிய 3 ஜோதிர் லிங்க தரிசனங்களை இணைக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது உத்தரப் பிரதேசம் வாரணாசியில் புறப்படும் இந்த ரயில் லக்னோ வழியாக இந்தூர் வரை 1,102 கி.மீ.க்கு 19 மணிநேரம் பயணிக்கிறது.