இந்தியாவிலேயே வரலாறு காணாத பொதுப் பங்கு வெளியீடாக இருக்கும் என்று மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்திய எல்ஐசி ஐபிஓ ஒரு வழியாக நடப்பு வாரத்தில் முடிவடைந்துள்ளது.
இது முன்னதாக எதிர்பார்க்கப்பட்ட ஐபிஓ மதிப்பினை விட குறைந்திருந்தாலும், இன்றளவிலும் இந்தியாவின் மிகப்பெரிய பங்கு வெளியீடாக உள்ளது.
இந்த நிலையில் வரவிருக்கும் செவ்வாய்கிழமையன்று இந்த நிறுவனத்தின் பங்கானது பங்கு சந்தையில் பட்டியலிடப்படவுள்ளது,. இந்த நிலையில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
முதலீட்டாளர் எதிர்பார்ப்பு
பங்கு வெளியீட்டுக்கு விண்ணப்பித்த அனைவரின் கவனமும் தற்போது பங்கு சந்தையின் மீது திரும்பியுள்ளது. இது என்ன விலைக்கு பட்டியலிடப்படலாம். ஐபிஓ முதலீட்டாளர்களுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும். தற்போது சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், பங்கு சந்தைகள் தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றன. இதன் காரணமாக பிரீமிய விலையில் பட்டியலிடப்படுமா? சரிவினைக் காணுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
செகண்டரி சந்தையில் நுழையும் எல்ஐசி
இதன் மூலம் எல்ஐசி இன்னும் சில தினங்களில் செகண்டரி சந்தையில் நுழையவுள்ளது. மே 9 அன்று முடிவடைந்த பங்கு வெளியீடானது, மே 12 அன்று முதலீட்டாளர்களுக்கு பங்குகள் பிரித்து அளிக்கப்பட்டது. மொத்த பங்கு வெளியீட்டில் இந்த பங்கு வெளியீட்டில் கிட்டதட்ட 3 மடங்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
யாருக்கு எவ்வளவு தள்ளுபடி?
இந்த வெளியீட்டில் அரசு தன் வசம் இருந்த பங்குகளில் 3.5 சதவீதம் அல்லது 22.13 கோடி பங்குகள் விற்பனை செய்யப்பட்டது. இதில் விலை 902 - 949 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வெளியீட்டில் சில்லறை முதலீட்டாளார்களுக்கும், ஊழியர்களுக்கும் ஒரு பங்குக்கு 45 ரூபாய் தள்ளுபடியும், இன்சூரன்ஸ் வாடிக்கையாளர்களுக்கு ஒரு பங்குக்கு 60 ரூபாயும் தள்ளுபடியும் வழங்கப்பட்டது. இதன் மூலம் பாலிசிதாரர்களுக்கு 889 ரூபாய்க்கும், சில்லறை முதலீட்டாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் 904 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
பட்டியல் விலை எப்படியிருக்கலாம்?
நிபுணர்களின் கணிப்பு படி, பங்கு விலையானது பட்டியலின்போது சற்று லாபகரமானதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் தள்ளுபடி விலையில் பட்டியலிடப்படவும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
இதற்கிடையில் வெளியீட்டு விலையின் அடிப்படையில் 5வது மிகப்பெரிய நிறுவனமாக எல்ஐசி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், ஹெச் டி எஃப் சி வங்கி, இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகளுக்கு அடுத்து எல்ஐசி இருக்கலாம்.