சர்வதேச சந்தையில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் பொருளாதாரம் சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் சர்வதேச நிறுவனங்கள், செலவினை குறைக்கும் பொருட்டு ஏற்கனவே பல்வேறு மறுசீரமைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இதன் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது ஐடி துறை தான். ஏனெனில் செலவினைக் குறைக்கும் நிறுவனங்கள் முதல் கட்டமாக டிஜிட்டல் வளர்ச்சிக்கு செலவிடும் தொகையினை குறைக்க தொடங்கியுள்ளன. இதன் காரணமாக இந்திய ஐடி நிறுவனங்களுக்கான ஒப்பந்தங்கள் குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முந்தைய காலாண்டுகளுடன் ஒப்பிடும்போது, செப்டம்பர் காலாண்டிலேயே பல நிறுவனங்களும் சரிவினைக் கண்டுள்ளன.
அன்னிய முதலீடுகள் வெளியேற்றம்
குறிப்பாக இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல் டெக், டெக் மகேந்திரா நிறுவனங்கள் அதன் தாக்கத்தினை எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளன. இதற்கிடையில் அன்னிய முதலீடுகளானது மேற்கண்ட ஐடி பங்குகளில் இருந்து பெரியளவில் வெளியேறியுள்ளது.
விப்ரோ
மேற்கண்ட ஐந்து நிறுவனங்கள் மட்டும் அல்ல, இந்திய ஐடி நிறுவனங்கள் பலவற்றில் இருந்தும் முதலீடுகள் வெளியேறி வருகின்றன.
கடந்த ஜூன் 2021 காலண்டின் இறுதியில் விப்ரோ நிறுவனத்தின் 9.83% அன்னிய முதலீடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் இது தற்போது 6.58% ஆக குறைந்துள்ளது.
ஹெச் சி எல் & டெக் மகேந்திரா
இதே ஹெச் சி எல் டெக் நிறுவனத்தில் கடந்த ஆண்டு ஜூன் காலாண்டில் 28.2% ஆக இருந்த அன்னிய முதலீடுகள், செப்டம்பர் காலாண்டில் 17.7% ஆக குறைந்துள்ளது.
டெக் மகேந்திரா நிறுவனத்தில் கடந்த ஜூன் காலாண்டில் 36.15% ஆக இருந்த அன்னிய முதலீடுகள், செப்டம்பர் காலாண்டில் 28.2% ஆக குறைந்துள்ளது.
டிசிஎஸ்
இந்தியாவின் இரண்டாவது பெரிய நிறுவனமாக இருக்கும் டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தில் இருந்தும் 15.43%ல் இருந்து, 13.05% ஆக அன்னிய முதலீடுகள் சரிவினைக் கண்டுள்ளது.
இது தான் விருப்பமான பங்கு
அனைத்து லார்ஜ் கேப் ஐடி பங்குகளிலும் இன்ஃபோசிஸ் எஃப்ஐஐ-களின் விருப்பமான பங்குகளில் ஒன்றாக உள்ளது. ஏனெனில் இந்த நிறுவனத்தில் 31.29% பங்குகளை வைத்துள்ளனர். முக்கிய பங்கு சகாக்கள் இடையே மிக அதிக ஹோல்டிங்கினை இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் வைத்துள்ளனர். மற்ற நிறுவனங்களில் 20% கீழாக பங்குகளை வைத்துள்ள அன்னிய முதலீட்டாளர்கள், இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் மட்டும் 30% மேலாக வைத்துள்ளனர்.
விப்ரோ மோசமான சரிவு
இந்திய பங்கு சந்தையில் நடப்பு ஆண்டில் ஆழமான சரிவினைக் கண்டுள்ள நிலையில், அன்னிய முதலீடுகளும் பெரியளவில் வெளியேறியுள்ளது. இந்த ஆண்டில் நிஃப்டி ஐடி இன்டெக்ஸ் 26% சரிவினைக் கண்டுள்ளது. இதில் மோசமான சரிவுடன் விப்ரோ முதலிடத்தில் உள்ளது. பெங்களூருரை தலைமையிடமாக கொண்ட நிறுவனம், அதன் 52 வார உச்சத்தில் இருந்து 47% சரிவினைக் கண்டுள்ளது.
ஐடி பங்குகள் சரிவு
டெக் மகேந்திரா பங்கானது 41% மேலாக சரிவில் காணப்படுகிறது. இதே ஹெச்சிஎல் டெக் நிறுவனம் 24% சரிவினைக் கண்டும், இன்ஃபோசிஸ் மற்றும் டிசிஎஸ் நிறுவனங்கள் உச்சத்தில் இருந்து, 22% சரிவில் காணப்படுகின்றது.
சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் இந்த அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது.
ஐடி பங்குகள் அதிகரிக்கலாம்
பொதுவாக இந்தியாவில் ஐடி துறையானது முதலீடு செய்வதற்கு உகந்த துறையாக பார்க்கப்படும். ஆனால் ஆனால் தற்போது சந்தையில் சாதகமற்ற சூழலில் ஐடி பங்குகள் பலத்த சரிவினைக் கண்டு வருகின்றன. எனினும் இதன் மதிப்பு எதிர்காலத்தில் நன்றாக இருக்கலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.