கடந்த சனிக்கிழமை மதியம் 2.30 மணி அளவுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன், மீண்டும் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அந்த கூட்டத்தில் இந்தியா செய்யும் ஏற்றுமதியை அதிகரிக்கவும், இந்தியாவில் தேங்கி நிற்கும் ரியல் எஸ்டேட் துறையை மீண்டும் சீராக்கவும் சில பல திட்டங்களைக் கொண்டு வந்தார். அவை எல்லாமே திங்கட்கிழமை சந்தையில் எதிரொலிக்கும் என ஆவலாக எதிர்பார்த்தார்கள் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள். ஆனால் எதிர்பார்த்தது போல எதுவும் நடக்கவில்லை.
இன்று காலை சென்செக்ஸ் 37,204 புள்ளிகள் வர்த்தகமாகத் தொடங்கியது. அதாவது கடந்த வெள்ளிக்கிழமை குளோசிங் புள்ளியான 37,384 புள்ளிகளில் இருந்து 180 புள்ளிகள் இறக்கம் கண்டு கேப் டவுனில் தான் வர்த்தகமாகத் தொடங்கியது. இந்த 180 புள்ளிகள் சரிவையே முதலீட்டாளர்களால் இன்னும் ஜீரணிக்க முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
அதன் பிறகு சுமார் காலை 10.30 மணிக்கு, 37,250 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது சென்செக்ஸ். அதன் பிறகு காலை 10.45 மணி அளவில் மீண்டும் சரிந்து தன் இன்றைய நாளுக்கான குறைந்தபட்ச புள்ளியான 37,111 புள்ளிகளைத் தொட்டது. தற்போது காலை 11.15 மணி அளவில் கொஞ்சம் ஏற்றம் கண்டு சுமாராக 37,300 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகி வருகிறது.
இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று தான். சென்செக்ஸ் தன் வலுவான 37,000 என்கிற சப்போர்ட்டை எடுத்து வர்த்தகம் ஆகி வருகிறது. அதே போல நல்ல வலுவான பாசிட்டிவ் செய்திகள் இல்லாததால் தன் 37,410 என்கிற வலுவான ரெசிஸ்டென்ஸ் புள்ளிகளையும் கடக்க முடியாமல் வர்த்தக மாகி வருகிறது.
நாம் ஏற்கனவே சொன்னது போல 37,410 புள்ளிகளுக்கு மேல் தொடர்ந்து ஏழு வர்த்தக நாட்களாவது வர்த்தகம் நிறைவு அடைந்தால் தான், சென்செக்ஸ் முழுமையாக 37,410-ஐ கடந்து விட்டதாக எடுத்துக் கொள்ள முடியும். கடந்த செப்டம்பர் 09, 2019 முதல், நான்கு வர்த்தக நாட்களாக சென்செக்ஸ் 37,000 புள்ளிகளுக்கு மேலே வர்த்தகம் நிறைவு அடைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே இன்றைய வர்த்தகம் 37,000 புள்ளிகளை உடைக்காமல் நிறைவு அடைந்தாலே பெரிய விஷயம் போலத் தான் தெரிகிறது.
ஆனால் இதற்கு மேல் ஏதாவது நல்ல செய்தி வந்து இந்திய சந்தைகளை ஏற்றினாலும் ஏற்றலாம் என்கிற நம்பிக்கையும் முதலீட்டாளர்கள் மத்தியில் இருக்கிறது. அதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, சென்செக்ஸ் இனி கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றம் காணத் தொடங்கும் என எதிர்பார்க்கலாம் என்கிறார்கள் அனலிஸ்டுகள். அனலிஸ்டுகள் கணிப்புப் படி சென்செக்ஸ் மேலே வரத் தொடங்கினால் சந்தோஷம் தானே..!