இந்தியாவின் அன்லைன் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் நைகா நிறுவனம் கடந்த சில மாதங்களாகத் தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது.
ஒருபக்கம் வர்த்தகத்தை வெளிநாடுகளுக்கு விரிவாக்கம் செய்தாலும், முக்கிய அதிகாரிகளின் மாற்றம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் எதிரொலியாக நைகா பங்குகள் தொடர்ந்து சரிந்து வருவது மட்டும் அல்லாமல் ஐபிஓ விலையைக் காட்டிலும் குறைவாகச் சரிந்து வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் புதிய வரலாற்று சரிவை பதிவு செய்துள்ளது.
நைகா
இந்தியாவின் முன்னணி ஆன்லைன் பியூட்டி மற்றும் அழகு சாதன பொருட்கள் விற்பனை தளமான நைகா வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 7 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இதன் மூலம் என்எஸ்ஈ சந்தையில் நைகா பங்குகள் 975 ரூபாய் அளவில் சரிந்து தனது ஐபிஓ விலையை விடவும் குறைவான அளவீட்டை தொட்டு உள்ளது.
ஒரு மாதத்தில் 21% சரிவு
மேலும் நைகா பங்குகள் கடந்த ஒரு மாதத்தில் 21 சதவீதமும் சரிந்த இதே காலகட்டத்தில் என்எஸ்ஈ 5 சதவீதம் மட்டுமே சரிந்துள்ளது. நைகா பங்குகள் நவம்பர் 2021 26 ஆம் தேதி அதிகப்படியாக 2,574 ரூபாய் வரையில் உயர்ந்தது, உச்ச அளவில் இருந்து தற்போது சுமார் 62 சதவீதம் சரிந்துள்ளது.
நைகா முதலீட்டாளர்கள்
இந்த மாபெரும் சரிவின் காரணமாக நைகா முதலீட்டாளர்கள் சோகத்தின் உச்சத்தில் உள்ளனர். இந்தச் சரிவுக்கு மிக முக்கியமான காரணம் நைகா நிறுவனத்தின் ஐபிஓ வெளியிட்ட பின்பு ஒரு வருட லாக்இன் காலம் அடுத்த மாதம் முடிய உள்ளது.
ஐபிஓ
நைகா அக்டோபர் 2021ல் ஐபிஓ துவங்கி நவம்பர் 10ஆம் தேதி ஒரு பங்கு 1125 ரூபாய் விலையில் பட்டியலிட்டது. இந்த நிலையில் லாக்இன் காலம் முடிந்தால் ஐபிஓ-வில் நைகா பங்குகளை வாங்கிய வெளிநாட்டு முதலீட்டாளர்களும், நிறுவன முதலீட்டாளர்களும் விற்பனை செய்ய முடியும்.
ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்
இந்தியாவில் ஐபிஓ வெளியிட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அனைத்தும் தோல்வி அடைந்து வரும் நிலையிலும், பொருளாதார மந்தநிலை மோசமான நிலையை உலக நாடுகளில் எட்டி வரும் நிலையில் கட்டாயம் ஆங்கர் முதலீட்டாளர்கள் லாக் இன் காலம் முடிந்த பின்பு நைகா பங்குகளை விற்பனை செய்வார்கள்.
47,787 கோடி ரூபாய்
கடந்த சில வாரத்தில் நைகா பங்குகளில் ஏற்பட்ட சரிவின் மூலம் இந்தியாவின் அதிகச் சந்தை மதிப்பு கொண்ட நிறுவனங்கள் பட்டியலில் இருந்து நைகா வெளியேறியுள்ளது, தற்போது நைகா நிறுவனத்தின் சந்தை மதிப்பு 50000 கோடி ரூபாய் என்ற பென்ச்மார்க் அளவீட்டை இழந்து 47,787 கோடி ரூபாயாக உள்ளது.
முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியது என்ன..?
இந்த நிலையில் நைகா நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளவர்கள் தனது கீ சப்போர்ட் அளவான 1220 ரூபாய் நிலையில் இருந்து புதிய வரலாற்று சரிவை பதிவு செய்த நிலையில், நஷ்டத்தை ஏற்றுக்கொண்டு நைகாவில் இருந்து வெளியேறுவது தான் சரியாக இருக்கும் என ஸ்வஸ்திகா இன்வெஸ்ட்மார்ட் லிமிடெட் நிறுவனத்தின் மூத்த தொழில்நுட்ப ஆய்வாளர் பிரவேஷ் கௌர் தெரிவித்துள்ளார்.
புதிய CTO
அக்டோபர் 27ஆம் தேதி Nykaa வெளியிட்ட அறிவிப்பில் அதன் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக (CTO) ராஜேஷ் உப்பலபதி-யை நியமிப்பதாக அறிவித்தது, இவருடைய பணி நவம்பர் 1 முதல் துவங்க உள்ளது. நைகாவின் தற்போதைய CTO சஞ்சய் சூரிக்கு பதிலாக உப்பலபதி நியமிக்கப்பட உள்ளார்.