மும்பை: வாரத்தின் இறுதி நாளான இன்று காலை முதல் கொண்டே இறக்கத்தில் தொடங்கிய பங்கு சந்தை, மதிய வேளையிலும் படு வீழ்ச்சியிலேயே காணப்படுகிறது
அதிலும் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 1,300 புள்ளிகள் வரை வீழ்ச்சி கண்டு, தற்போது 1,100 புள்ளிகள் வீழ்ச்சியுடன் 38,645 ஆகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 329 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 11,303 ஆகவும் வர்த்தகமாகி வருகிறது.
இதுவே அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.73% வீழ்ச்சி கண்டு 72.13 ரூபாயாகவும் வீழ்ச்சி கண்டுள்ளது.
இந்த நிலையில் இன்று சந்தை தொடக்கத்தில் இருந்தே வீழ்ச்சி கண்டு வரும் பங்கு சந்தை குறியீடுகள், மற்றும் மொத்த இண்டெக்ஸ்களும் வீழ்ச்சி கண்டு வருகின்றன. இதனால் இந்த சந்தை தொடக்கத்தில் இருந்து முதலீட்டாளர்களின் 5 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் கண்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்கு சீனாவில் நிலை கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் ஒரு காரணம் எனில், இந்தியாவின் மூன்றாவது காலாண்டு ஜிடிபி விகிதம் இன்று வெளியாகவுள்ளது. அதிலும் ஆய்வாளர்கள் இந்த ஜிடிபி விகிதமானது 5% கீழாகத்தான் இருக்கும் என்றும் கணித்து வருகின்றனர்.
இதனை உறுதிபடுத்தும் விதமாக ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி டிசம்பர் காலாண்டில் ஜிடிபி விகிதம் 4.7% ஆக இருக்கும் என்றும் மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையிலேயே இந்திய பங்கு சந்தைகள் தாறுமாறாக இறக்கம் கண்டு வருகின்றன.
அதிலும் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பானது 72.13 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. சீனாவின் கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுக்க பரவி வரும் நிலையில், பிற நாட்டின் பங்கு சந்தைகளும் படு வீழ்ச்சி கண்டு வருகின்றன.
சொல்லப்போனால் ஜூலை மாதம் ஜப்பானில் தொடங்கவுள்ள ஓலிபிக் போட்டிகள் கூட கொரோனாவால் தள்ளி வைக்கப்படலாம் என்றால் பாருங்களேன். எந்தளவுக்கு இதன் தாக்கம் சர்வதேச அளவில் உள்ளது என்று.
ஒரு புறம் கொரோனா வைரஸ், மறுபுறம் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வரும் பொருளாதாரம், இவற்றால் மீண்டும் மீண்டும் வீழ்ச்சி காணும் ரூபாய். ஆக மொத்தத்தில் அத்தனையும் சேர்த்து வைத்தாற்போல் இன்று மொத்தமாக அதுவும் வாரத்தில் இறுதி நாள், ஏன் மாதத்தின் இறுதி சந்தை நாளான இன்று பெரும் வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.