இந்தியாவிலேயே அதிக, சந்தை மதிப்பு கொண்ட டாப் 10 கம்பெனிகள் பட்டியலில் இருக்கும் நான்கு நிறுவனங்கள், கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் சுமாரக 1.12 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பு அதிகரித்து இருக்கிறதாம்.
இந்த சந்தை மதிப்பு என்பதை ஆங்கிலத்தில், மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் என்போம். அப்படி என்றால் என்ன என்பதைப் பார்த்து விடுவோம்.
பங்குச் சந்தையில், பட்டியலிடப்பட்டு இருக்கும் நிறுவனங்கள் வர்த்தகமாவதைப் பார்த்து இருப்போம். அப்படி வர்த்தகம் ஆகும் பங்குகளுக்கு ஒரு விலை இருக்கும். மொத்த பங்குகள் * ஒரு பங்கின் விலை = மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்.
விளக்கம்
இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், ஒவ்வொரு நிறுவனத்தின் மொத்த பங்குகளின் மதிப்பு (Market Capitalization) என ஒன்றைக் குறிப்பிடுவார்கள். ஒரு நிறுவன பங்கின் இன்றைய விலைக்கு, அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் விற்றால் என்ன கிடைக்குமோ அதைத் தான் மொத்த சந்தை மதிப்பு என்கிறோம். இப்போது 1.12 லட்சம் கோடி கணக்குக்கு வருவோம்.
டிசிஎஸ் & ஐடிசி
இந்தியாவின் மிகப் பெரிய ஐடி கம்பெனியான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் கம்பெனியின் சந்தை மதிப்பு கடந்த ஒரு வார காலத்தில் 47,148 கோடி ரூபாய் அதிகரித்து இருக்கிறதாம். அதோடு ஐடிசி கம்பெனியின் சந்தை மதிப்பு 26,735 கோடி ரூபாய் அதிகரித்து இருக்கிறதாம்.
ஏர்டெல் & இன்ஃபோசிஸ்
இந்தியாவின் முக்கிய டெலிகாம் கம்பெனியில் ஒன்றான பார்தி ஏர்டெல், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இந்த கம்பெனி கடந்த ஒரு வார காலத்தில் 21,222 கோடி ரூபாய் சந்தை மதிப்பு அதிகரித்து இருக்கிறது. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு கடந்த ஒரு வாரத்தில் 17,014 கோடி ரூபாய் அதிகரித்து இருக்கிறது.
மற்ற கம்பெனிகள்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்,
ஹெச் டி எஃப் சி வங்கி,
ஹெச் டி எஃப் சி,
ஹிந்துஸ்தான் யுனிலிவர்,
கோட்டக் மஹிந்திரா பேங்க்,
ஐசிஐசிஐ பேங்க்... போன்ற பங்குகள் தன் சந்தை மதிப்பை கொஞ்சம் இழந்து இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இருப்பினும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கம்பெனி தான், இந்தியாவிலேயே அதிக சந்தை மதிப்பைக் கொண்ட கம்பெனியாக நம்பர் 1 இடத்தில் இருக்கிறது.
ரம்ஜான் விடுமுறை
இன்று, 25 மே 2020, திங்கட்கிழமை, ரம்ஜான் என்பதால், இந்திய பங்குச் சந்தைகள் வர்த்தகமாகவில்லை. நாளை முதல் வழக்கம் போல, வர்த்தகமாகத் தொடங்கும். இந்த வாரத்தில் டிசிஎஸ், ரிலையன்ஸை பின்னுக்குத் தள்ளுமா அல்லது ரிலையன்ஸ் தன் 10 லட்சம் கோடி என்கிற இமாலய உச்சத்தை மீண்டும் தொடுமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.