பொதுவாகவே பல நேரங்களில், அரசு வங்கிகளை விட, தனியார் வங்கிகள் மிகப் பிரமாதமாக செயல்படும். லாப நஷ்டங்களை எல்லாம் சீரியஸாகப் பார்க்கும்.
ஆனால் சில நேரங்களில் அரசு வங்கிகளும் பெரிய லாபங்களை எல்லாம் ஈட்டி தனியார் வங்கிகளையே மிஞ்சிவிடும். அப்படி ஒரு தருணம் தான் இது.
இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் ஜூன் 2020 காலாண்டு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. தனியார் வங்கிகள் கூட ஆச்சர்யப்படும் விதத்தில் செமயாக லாபம் சம்பாதித்து இருக்கிறது எஸ்பிஐ.
எஸ்பிஐ நிகர லாபம்
இந்த ஜூன் 2020-ல் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் நிகர லாபம் 4,189 கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. கடந்த ஜூன் 2019 காலாண்டில், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் காலாண்டு முடிவுகளில் அறிவித்த 2,312 கோடி ரூபாய் நிகர லாபத்தை விட இது 81 சதவிகிதம் அதிகம்.
எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ்
என்னய்யா இது, ஏகப்பட்ட கடன்கள் ஆர்பிஐ அறிவித்த கடன் தவணை ஒத்திவைப்பின் கீழ் இருக்கிறது. பெரிதாக யாருக்கும் கடன் கொடுக்க முடியவில்லை என்று எல்லாம் சொன்னார்களே, பிறகு எப்படி இவ்வளவு அதிக லாபம்? என்றால் எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் முதலீடுகளை, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா விற்று 1,540 கோடி ரூபாய் திரட்டி இருப்பதை சுட்டிக் காட்டுகிறார்கள்.
முக்கிய காரணம் ப்ரொவிசன் தான்
மோசமான கடன்களுக்கான ப்ரொவிசன் (Provision for Bad and Dountful debts) கடந்த மார்ச் 2020 காலாண்டில் 11,894 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் இந்த ஜூன் 2020 காலாண்டில், மோசமான கடன்களுக்கான ப்ரொவிசன்கள் 19 சதவிகிதம் குறைந்து 9,420 கோடி ரூபாயாக குறைந்து இருக்கிறதாம்.
தோராய செயல்படாத கடன்
அதே போல எஸ்பிஐயின் தோராய செயல்படாத கடன் (Gross Non Performing Asset - GNPA) இந்த ஜூன் 2020 காலாண்டில் 5.44 சதவிகிதமாக குறைந்து இருக்கிறது. கடந்த மார்ச் 2020 காலாண்டில் தோராய செயல்படாத கடன் 6.15 சதவிகிதமாக இருந்ததாம். இதுவே ஜூன் 2019-ல் 7.53 %-மாக இருந்தது.
பங்கு விலை
நேற்றே (30 ஜூலை 2020) எஸ்பிஐ காலாண்டு முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பில், எஸ்பிஐ பங்குகள் விலை அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. 30 ஜூலை மாலை 186.55 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று (31 ஜூலை 2020) 2.4 சதவிகிதம் எஸ்பிஐ, விலை ஏற்றம் கண்டு, 191.05 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.