மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டு இருக்கிறார்.
எல்லா முறையும் நம் அடிவயிற்றில் புளியைக் கரைக்கும் அறிவிப்புகள் தான் வரும். ஆனால் முதல் முறையாக ஒட்டு மொத்த இந்திய தொழில் துறையையும் ஆச்சர்யப்படுத்தும் விதத்தில் சந்தோஷப்படும் விதத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
அது தான் இந்திய கார்ப்பரேட் துறைகள் செலுத்த வேண்டிய கார்ப்பரேஷன் வரியை 25 சதவிகிதமாக குறைத்தது. இந்த செய்தி காலையில் இருந்து சென்செக்ஸில் தீ வைத்தது போல கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருக்கிறது.
முதல் சாதனை
இந்த அறிவிப்பால் ஒட்டு மொத்த பங்குச் சந்தையின் ரத்தமே புதிதாகப் பாய்ச்சியது போல வெறி கொண்டு ஏற்றம் கண்டு வருகிறது. ஒரே நாளில் 2,000 புள்ளிகள் ஏற்றம் என்றால் சும்மாவா..? பல மாதங்களில் மெல்ல ஆற அமர நடக்க வேண்டிய ஏற்றம் ஒரே நாளில், அதுவும் ஒரு சில மணி நேரங்களில் அதிரடியாக நடந்தால் எப்படி இருக்கும். அப்படித் தான் இப்போது நடந்து கொண்டு இருக்கிறது. தற்போது மதியம் 2.30 மணி அளவில் சென்செக்ஸ் சுமார் 2,285 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது. இது தான் முதல் சாதனை.
சாதனை 1 விளக்கம்
சென்செக்ஸ் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து இன்று வரை ஒரே நாளில் 2,285 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருப்பது இதுவே முதல் முறை. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 18 மே 2009 அன்று காங்கிரஸ் அரசின் கொள்கைகள் மீதான நம்பிக்கையில், அவர்கள் மக்களவை தேர்தல் வெற்றி பெற்ற போது சென்செக்ஸ் ஒரே நாளில் 2,110 புள்ளிகள் ஏற்றம் கண்டது தான் சென்செக்ஸ் வரலாற்றில், ஒரே வர்த்தக நாளில் தொட்ட உச்ச கட்ட இண்ட்ரா டே ஹை புள்ளியாக இருக்கிறது. இப்போது ஒரே வர்த்தக நாளில் 2,285 புள்ளிகளைத் தொட்டு சென்செக்ஸின் இண்ட்ரா டே ஹை வரலாற்றுச் சாதனை படைத்து இருக்கிறது பாஜக.
சாதனை 2 வைப்பார்களா..?
சென்செக்ஸ் வரலாற்றில் ஒரே வர்த்தக நாளில் முந்தைய குளோசிங் புள்ளியை விட அதிக புள்ளிகள் ஏற்றம் கண்டு முடிந்ததும் அதே 18 மே 2009 நாளில் தான். 15 மே 2009 அன்று மாலை 12,174 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருந்தது. 18 மே 2009 அன்று மாலை சென்செக்ஸ் 14,284 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவு அடைந்து, 2,110 புள்ளிகள் ஏற்றத்துடன் சாதனை படைத்தது சென்செக்ஸ். அந்த சாதனையை இப்போது பாஜக அரசின் வரி சார்ந்த அறிவிப்புகள் செய்யுமா..?
வாய்ப்புகள் என்ன..?
காங்கிரஸின் சாதனையை முறியடிக்க, சென்செக்ஸ் 38,204 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகம் நிறைவு அடைய வேண்டும். அப்போது தான் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 2,110 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவு செய்த சாதனையை முறி அடிக்க முடியும். ஆனால் தற்போது சென்செக்ஸில் 38,000 புள்ளிகள் உடைப்பது டெக்னிக்கலாக சாத்தியம் இல்லாதது போல் தான் தெரிகிறது. காரணம் 17 மே 2019, 29 ஜூலை 2019 ஆகிய தேதிகளில் 38,000 புள்ளிகள் டெக்னிக்கலாக சென்செக்ஸுக்கு முக்கிய பங்காற்றுகின்றன.
விளக்கம்
அதாவது 38,000 புள்ளிகள் என்பது சென்செக்ஸின் ஒரு வலுவான ரெசிஸ்டென்ஸ் புள்ளி. அதை உடைக்க இன்னும் வேறு ஏதாவது ஒரு நல்ல செய்தி வந்தால் கூட உடைத்து விடலாம். இன்னும் 45 நிமிடத்துக்குள் அப்படி ஒரு நல்ல செய்தி வந்து சென்செக்ஸ் மேலே போகுமா எனக் கேட்டால் நம்மிடம் பதில் இல்லை. அதோடு 38,000 புள்ளிகளை உடைத்தாலும் 38,204 புள்ளிகள் வரை ஏற்றம் காணுமா..? எனவும் ஒரு சந்தேகம் எழுகிறது எனச் சொல்லி இருந்தோம். கணித்தது போலவே பாஜகவால் இந்த இரண்டாவது சாதனையைச் செய்ய முடியவில்லை.
முறி அடிக்க முடியாத சாதனை
நாம் ஏற்கனவே சொன்னது போல, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 18 மே 2009-ல் 2,110 புள்ளிகள் உயர்ந்ததாகச் சொன்னோம். அது எவ்வளவு சதவிகிதம் தெரியுமா..? அன்று ஒரே நாளில் சந்தை 17.34 சதவிகிதம் உயர்ந்தது. ஆனால் இப்போது 2,285 புள்ளிகளைத் தொட்டாலும் சென்செக்ஸ் 5.5 சதவிகிதத்தை தாண்ட முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறது. எனவே எப்படியும் காங்கிரஸ் வைத்த இந்த 17.34 % ஏற்றச் சாதனையை பாஜகவால் முறி அடிக்கவே முடியாது. அவ்வளவு ஏன்..? இனி காங்கிரஸால் கூட ஒரே நாளில் 17.34 % சென்செக்ஸை உயர்த்தி ஒரு புதிய சாதனையை படைக்க முடியாது எனத் தோன்றுகிறது.