இந்திய பங்குச்சந்தையில் பன்னாட்டு முதலீடுகள் அதிகமாக இருக்கும் காரணத்தால் சர்வதேசச் சந்தையில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றங்களும் இந்திய சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதை நாம் பல முறை பார்த்து இருக்கிறோம், இந்நிலையில் உலகமே கவனித்துக்கொண்டு இருக்கும் அமெரிக்காவின் அதிபர் தேர்தல் நவம்பர் 2ஆம் தேதி நடக்க உள்ளது.
இந்தத் தேர்தலில் பராக் ஒபாமா போல் மீண்டும் டொனால்டு டிரம்ப் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிப்பாரா..? இல்லை பலரும் எதிர்பார்க்கும் வகையில் ஜோ பிட்டென் வெற்றிபெறுவாரா..? என்ற கேள்வி அனைவருக்கும் இருக்கும் நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் நேரத்தில் இந்திய பங்குச்சந்தை எப்படி இருக்கும்..?
இதற்கு முன் நடந்த 2016, 2012, 2008 அமெரிக்க அதிபர் தேர்தலின்போது இந்திய சந்தையின் நிலை என்ன, இதனால் தற்போது எப்படி இருக்கும் என்பதைத் தான் இப்போது பார்க்கப்போகிறோம். பங்குச்சந்தை முதலீட்டாளர்களே உஷாரா இருங்க..!
அமெரிக்க முதலீட்டாளர்கள்
2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் கொரோனா காரணமாக அதிகளவிலான வாக்குகள் ஈமெயில் மூலம் அனுப்பப்படும் காரணத்தால் முழுமையாகக் கணிக்கமுடியாத சூழ்நிலை நிலவுகிறது. மேலும் அமெரிக்கச் சந்தை தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருப்பதால் முதலீட்டாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
தேர்தலுக்குப் பின்பே அனைத்து விதமான மாற்றங்களையும் கணிக்க முடியும் என ஆய்வுகள் கூறுகிறது.
தேர்தல் முடிவுகள்
பொதுவாக அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் நவம்பர் 3ஆம் தேதி மாலை தெரிந்துவிடும், ஆனால் இந்த முறை ஆன்லைன் வாக்குகள் அதிகமாக இருக்கும் காரணத்தால் அனைத்து தரவுகளும் சரிபார்த்து இணைத்து முடிவுகளை வெளியிட 2 வாரங்கள் அதிகப்படியாக ஒரு மாதம் கூட ஆகலாம்.
நீதிமன்றம்
மேலும் மோசமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டால் தோல்வி அடைந்த வேட்பாளர் எதிர்க்கட்சி மற்றும் அதிபர் வேட்பாளர் மீது வழக்குப் போட்டு நீதிமன்றத்தின் முடிவுகள் படி அதிபரை தேர்வும் செய்யும் மோசமான நிலை கூட ஏற்படலாம் என Ashmore Investment நிறுவனத்தின் அஸ்வினி அகர்வால் தெரிவித்துள்ளார்.
இந்தியா - அமெரிக்கா
பொதுவாக இந்தியா அமெரிக்கா இடையில் பல வழிகளில் பிணைந்து இருந்தாலும், அமெரிக்க அதிபர் தேர்தல் காலத்திலும், அதைத் தொடர்ந்த வரும் மாதத்திலும் இரு நாட்டு பங்குச்சந்தையும் பெரிய அளவில் பின்பற்றுவது இல்லை. ஆனால் சில சமயங்களில் இந்தியாவைப் பாதிக்கும் திட்டங்கள் புதிய அதிபரால் பாதிக்கப்படும் பட்சத்திலோ, அல்லது புதிய அதிபரால் இந்தியாவிற்கும், இந்தியர்களுக்கும் நன்மை என்றால் இருநாட்டுச் சந்தையில் மாற்றங்கள் ஒத்துப்போகிறது.
2016 தேர்தல்
Republic கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப் 2016 அதிபர் தேர்தலில் மிகவும் குறைந்த வாக்கு எண்ணிக்கை வித்தியாசத்தில் Democratic கட்சியின் அதிபர் வேட்பாளரும் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் அவர்களின் மனைவியுமான ஹிலாரி கிளிண்டன்-ஐ தோற்கடித்து வெற்றிபெற்றார்.
டொனால்டு டிரம்ப் வெற்றிபெற்ற நவம்பர் மாதத்தில் அமெரிக்கப் பங்குச்சந்தை குறியீடான S&P500 1.11 சதவீதம் சரிந்தது. அதற்கு அடுத்த டிசம்பர் மாதம் 5 சதவீதம் வளர்ச்சி அடைந்தது.
இதேகாலகட்டத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு நவம்பர் மாதத்தில் 1.75 சதவீதமும், டிசம்பர் மாதம் 3,25 சதவீதமும் வீழ்ச்சி அடைந்தது.
2012 தேர்தல்
அனைவரும் எதிர்பார்க்கப்பட்டதைப் போலேவே 2012 தேர்தலில் மீண்டும் அதிபராகப் பராக் ஒபாமா பதவியேற்றார். அப்போது தேர்தல் நடந்த மாதத்தில் 1.89 சதவீதமும், அடுத்த மாதம் 1.01 சதவீதமும் S&P500 குறியீடு வீழ்ச்சி அடைந்தது.
இதேகாலக்கட்டத்தில் சென்செக்ஸ் தேர்தல் நடந்த மாதத்தில் 0.58 சதவீதமும், அடுத்த மாதம் 3.56 சதவீதமும் வளர்ச்சி அடைந்தது.
2008 தேர்தல்
சர்வதேச நிதி நெருக்கடிக் காலத்தில் முதல் முறை அதிபராகப் பராக் ஒபாமா தேர்வான மாதத்தில் S&P500 4.84 சதவீதமும், டிசம்பர் மாதத்தில் 15.96 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது.
இதேகாலகட்டத்தில் மும்பை பங்குச்சந்தையில் மாபெரும் நிதி நெருக்கடியைச் சமாளித்துப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி நவம்பர் மாதத்தில் அமெரிக்கச் சந்தையைவிடவும் அதிகப்படியாக 9.92 சதவீதமும், டிசம்பர் மாதம் 13.18 சதவீதமும் சரிவடைந்தது.
2004 தேர்தல்
2004 தேர்தலில் அமெரிக்கச் சந்தைக்கு நேருக்கு நேரான வர்த்தகத்தை இந்தியச் சந்தை பதிவு செய்துள்ளது.
2004 தேர்தல் நடந்த மாதத்தில் சென்செக்ஸ் மற்றும் S&P500 குறியீடு சரிவைச் சந்தித்தாலும், டிசம்பர் மாதத்தில் சென்செக்ஸ் 9.97 சதவீத வளர்ச்சியும், S&P500 5.29 சதவீத வளர்ச்சியும் பதிவு செய்தது.
2000 தேர்தல்
இதேபோல் 2000 தேர்தல் நடந்த மாதத்தில் சென்செக்ஸ் 2.5 சதவீத வீழ்ச்சியும், டிசம்பர் மாதத்தில் 4.3 சதவீத உயர்வையும் பதிவு செய்தது. இதேகாலகட்டத்தில் S&P500 குறியீடு தேர்தல் நடந்த நவம்பர் மாதத்தில் 2.13 சதவீத வளர்ச்சியும், டிசம்பர் மாதத்தில் 6.17 சதவீத வீழ்ச்சியும் பதிவு செய்தது.
கணிப்பு
அமெரிக்க தேர்தல் முடிவுகள் பொதுவாக இந்திய சந்தையை நேரடியாக பாதிப்பது இல்லை, ஆனால் டிரம்ப் இந்தியாவிற்கு எதிராக பல்வேறு முடிவுகளை எடுத்துள்ள நிலையில், குறிப்பாக ஹெச்1பி விசா, சிறப்பு வர்த்தக அந்தஸ்து கொடுப்பதில் இரு நாடுகளுக்கும் மத்தியில் இருந்த பிரச்சனை போன்ற இந்தியாவையும், இந்திய சந்தையை பெரிய அளவில் பாதித்தது. இதனால் டிரம்ப் தோல்வி அடைந்தால் இந்திய சந்தையில் அதிகளவிலான முதலீடுகள் குவிய வாய்ப்பு உள்ளது.
இதேபோல் டிரம்ப் தோல்வி அடைந்தால் சீனா வலிமை அடையவும் வாய்ப்பு இருக்கிறது, ஏற்கனவே இந்தியா - சீனா இடையில் பிரச்சனை இருப்பதால் இந்தியாவின் வாய்ப்புகள் பாதிப்படைய வாய்ப்புகள் உண்டு.