சிறு குறு தொழில்முனைவோர்களுக்கு என்று தனியாக 3 லட்சம் கோடி ரூபாய்க்கு, மத்திய அரசு சிறப்புக் கடன் திட்டங்களை எல்லாம் அறிவித்து இருக்கிறார்கள்.
அறிவித்த கடன் ஒழுங்காக, சிறு குறு தொழில்முனைவோர்களுக்குச் சென்று சேர்ந்து கொண்டிருக்கிறதா? என்பது வரை அரசு பின் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
இதற்கே மத்திய அரசை நிச்சயம் பாராட்டலாம். ஆனால் மறு பக்கம், அரசு இந்த சிறப்புக் கடன் திட்டத்தை அறிவிக்காமலேயே சிறு குறு தொழில்முனைவோர்களுக்கு 3 லட்சம் கோடி ரூபாயை கிடைக்கச் செய்யலாம் என்பது போல ஒரு செய்தி வெளிகி இருக்கிறது.
3.3 லட்சம் கோடி ரூபாய்
ஆனால் மறு பக்கம், இந்தியாவின் மிகப் பெரிய கார்ப்பரேட் கம்பெனிகள், சிறு குறு தொழில்முனைவோர்களுக்கு கொடுக்க வேண்டிய 3.3 லட்சம் கோடி ரூபாயைக் கொடுக்காமல், பேமெண்ட் பாக்கித் தொகைகளை வைத்து இருப்பதாக பிரிக் வொர்க் ரேட்டிங் என்கிற கம்பெனியின் ஆராய்ச்சியில் தெரிய வந்து இருக்கிறது. அதுவும் பெரிய கார்ப்பரேட் கம்பெனிகள், பணத்த கொடுக்கும் அளவுக்கு அவர்களிடம் பணம் இருப்பதாகவும் குறிப்பிடுகிறது பிரிக் வொர்க்.
பெரிய கம்பெனிகள்
இந்தியாவின் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு இருக்கும் டாப் 1,000 கம்பெனிகளைத் தான் ஆராய்ச்சிக்கு எடுத்து இருக்கிறது பிரிக் வொர்க் ரேட்டிங் (Brick Work Rating) கம்பெனி. அதில் வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் எல்லாம் போக, மீதமுள்ள 760 பெரும் கார்ப்பரேட் கம்பெனிகளை ஆராய்ச்சி செய்து இந்த செய்தியை வெளியிட்டு இருக்கிறது.
வொர்க்கிங் கேப்பிட்டல் தேவை இல்லை
கடந்த 30 செப்டம்பர் 2019 வாக்கிலேயே, இந்த 760 கம்பெனிகளில், 14 சதவிகித கம்பெனிகளுக்கு, வொர்க்கிங் கேப்பிட்டல் தேவை இல்லை அல்லது மிகக் குறைவான அளவிலேயே வொர்க்கிங் கேப்பிட்டல் தேவை இருந்து இருக்கிறதாம். ஆக இந்த கம்பெனிகள், தன் சப்ளையர்களுக்கு காசு கொடுக்க அதிக நாட்கள் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், இவர்கள் யாருக்கு எல்லாம் சப்ளை செய்து இருக்கிறார்களோ அவர்களிடம் இருந்து விரைவாக பணத்தை வசூலித்து இருக்கிறார்கள் என்கிறது பிரிக் வொர்க்.
சிறு குறு தொழில்முனைவோர்
இந்த பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், சிறு குறு தொழில்முனைவோர்களிடம் இருந்து பொருட்களையோ அல்லது சேவையையோ பெற்றுக் கொண்டு, இதுவரை அவர்களுக்கான பேமெண்டை வழங்காமல் இருக்கிறார்கள். பெரிய கார்ப்பரேட் கம்பெனிகள், சிறு குறு தொழில்முனைவோர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தில் பாதி பணத்தைக் கொடுத்தால் கூட, MSME தரப்பினர்கள் கையில் 1.6 லட்சம் கோடி ரூபாயாவது புழங்கும் என்கிறது பிரிக் வொர்க். இதையும் அரசு கவனத்தில் கொண்டு, பெரிய கம்பெனிகளை சீக்கிரம் பேமெண்ட் கொடுக்கச் சொன்னால் MSME தப்பினர்களுக்கு வசதியாக இருக்கும்.