பொதுவாக இந்தியாவில் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் டிஜிட்டல் பயன்பாடு என்பது குறைவாகவே உள்ளது தெரிந்த ஒரு விஷயமே.
சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான டிஜிட்டல் மாற்றம் என்பது, பாரம்பரியமாகவே எதிர்பார்க்கப்படும் வளர்ச்சியில் மிக பின் தங்கியே இருக்கின்றன.
ஆனால் தற்போது இந்த கொரோனா காலத்தில் தங்களது வணிகத்தினை மேம்படுத்த டிஜிட்டல் பயன்பாட்டினை அதிகரிக்க தொடங்கியுள்ளதாக ஒரு ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளது. அதனை பற்றித் தான் இந்தக் கட்டுரையில் பார்க்க போகிறோம்.
வணிக இணையதளம்
ஆய்வு நிறுவனமான ஜின்னோவ் கன்சல்டிங்கின் கூற்றுப்படி, இந்தியாவில் 75 மில்லியன் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் 16 - 18 மில்லியன் எம்எஸ்எம்இ-க்கள் மட்டுமே சமூக ஊடகங்களுடன் இணைப்பில் உள்ளன. அவர்கள் மட்டுமே அவர்களுக்கான வலைதளத்தினை கொண்டுள்ளனர். இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட 5 மில்லியன் டொமைன் பெயர்களில், பாதிக்கு மட்டுமே வலைதளங்கள் உள்ளது என்றும் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளது.
டிஜிட்டல் தேவை
இந்த நிலையில் சர்வதேச MSME 2020 தினத்திற்கு முன்னதாக, வலைதள ஹோஸ்டிங்கில் நிபுணத்துவம் வாய்ந்த தொழில் நுட்ப சேவை நிறுவனமான எண்டூரன்ஸ் இண்டர் நேஷனல் குரூப், கொரோனா வைரஸின் போது சவால்களுக்கு மத்தியில் டிஜிட்டல் சேவையின் தேவையை MSME-க்கள் உணர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
லாக்டவுன் காலத்தில் வளர்ச்சி
இந்த ஆய்வின் படி, சுமாராக 30% எம்எஸ்எம்இ-க்கள் தங்கள் வர்த்தகம் பற்றிய இணையதளங்கள் அல்லது ஈ-காமர்ஸ் தளங்களை உருவாக்கியுள்ளனராம். இது கொரோனா லாக்டவுன் எப்போது ஆரம்பமானதோ அப்போதிலிருந்தே இப்படியொரு வளர்ச்சியினைக் கண்டுள்ளதாக இந்த ஆய்வறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.
வாட்ஸ் ஆப் மற்றும் வீடியோ கான்ப்ரன்சிங்
இதே 50 சதவீதத்திற்கும் அதிகமான எம்எஸ்எம்இ-க்கள், இந்த லாக்டவுன் காலத்தில், தங்களது வணிகத்தினை தொடர்வதற்காகவும், மேம்படுத்துவதற்காகவும் வீடியோ கான்ப்ரன்சிங் மற்றும் வாட்ஸ் ஆப்பினை பயன்படுத்தியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
டிஜிட்டல் வளர்ச்சி அதிகரிப்பு
ஆக மொத்ததில் இந்த லாக்டவுன் காலத்தில் டிஜிட்டல் சேவையானது வளர்ச்சி கண்டுள்ளது. டிஜிட்டல் பயன்பாட்டினை பயன்படுத்துவதற்கான விருப்பம் இப்போது பாரம்பரிய தொடர்புகளை விட சுமார் 1.9 மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அதிலும் கல்வித்துறையில் உள்ள எம்எஸ்எம்இ-க்கள் டிஜிட்டல் பயன்பாட்டின் முக்கியத்துவத்தினை உணர்ந்து மிக நல்ல வளர்ச்சி கண்டுள்ளனவாம்.
ஈ காமர்ஸ் மூலம் வருவாயும் அதிகரிப்பு
இந்த லாக்டவுன் காலத்தில் எப்படியேனும் வர்த்தகத்தினை தொடர்ந்து ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில், ஈ காமர்ஸ் துறைக்குள் புகுந்தவர்களுக்கு, மொத்த வருவாயில் 50 சதவீதம் டிஜிட்டல் பயன்பாட்டின் மூலம் கிடைத்துள்ளதாக இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இது சில்லறை மற்றும் கல்வி சேவைகளில் வருவாய் முறையே 53 சதவீதம் மற்றும் 65 சதவீதமாக அதிகரித்துள்ளது.
வணிகத்தினை விட முடிவு
ஆனால் இதில் ஒரு கவலையளிக்கும் பதில் என்னவெனில், எம்எஸ்எம்இ-க்கள் பலர் தங்களது வணிகத்தினை இடை நிறுத்தவோ அல்லது முற்றிலுமாக நிறுத்தவும் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர். எனினும் இதில் ஒரு நல்ல விஷயம் என்னவெனில் இப்படி பதில் அளித்தவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை தங்களது வணிகத்தினை தற்காலிகமாக இடை நிறுத்துவதாக உறுதிப்படுத்தியுள்ளார்களாம்.
இயல்பு நிலை எப்போது?
குறிப்பாக பெரு நகரங்களில் உள்ள சில்லறை மற்றும் உற்பத்தி துறைகளிலும் அதிகம் காணப்படுகிறது. மேலும் பெரும்பாலும் பதிலளித்தவர்களில் கிட்டதட்ட 60 சதவீதம் பேர் தங்களது வணிகம் இயல்பு நிலைக்கு திரும்ப 6 மாதங்கள் வரை ஆகும் என்றும் நம்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.
என்ன எதிர்பார்ப்பு?
ஆக இப்படி நெருக்கடி நிலையை எதிர்கொள்ள எம்எஸ்எம்இ-க்கள் அரசின் உதவியை எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக 50 சதவீத எம்எஸ்எம்இ-க்கள் வரி விலக்கு மற்றும் வரி தள்ளுபடிகளை வழங்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர். இதே 36 சதவீத எம்எஸ்எம்இ-க்கள் மலிவான அல்லது 0% வட்டியில் கடன் அளிக்க கோரிக்கை வைக்கின்றனராம்.