கொரோனாவால் பல்வேறு துறைகள் பல விதமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நுகர்வோர் சந்தையில் முக்கிய பிரிவாக இருக்கும் பலசரக்கு கடைகள் தற்போது மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.
இந்த லாக்டவுன் காலத்தில் குறைவான பணபுழக்கத்தால் வர்த்தகம் இல்லாமலும், பாதுகாப்பிற்காக ஊருக்கு சென்ற வியாபாரிகள் திரும்பி வர முடியாத காரணத்தினாலும் சுமார் 6 லட்சம் சிறு கடைகள் திறக்கப்படாது என தெரிகிறது. இதேகாலக்கட்டத்தில் நாடு முழுவதும் இருக்கும் பெரும் கடைகள் ஹோம் டெலிவரி, ஆன்லைன் ஆர்டர் என வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துள்ளதால் சிறு வியாபாரிகள் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என தெரிகிறது.
இதேபோல் மொபைல் விற்பனை கடைகளும் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.
நுகர்வோர் சந்தை
இந்திய சில்லறை விற்பனை சந்தையில் பெரும் பகுதி நுகர்வோர் சந்தை தான், கொரோனா-வால் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் காலத்தில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்ய அனுமதி செய்த காரணத்தனால் இத்துறை அதிகளவிலான பாதிப்பில் இருந்து தப்பினாலும், குறிப்பிட்டத்தக்க அளவிலான பாதிப்பு எதிர்கொண்டு உள்ளது.
மொபைல் விற்பனை
மளிகை கடைகள் போலவே இந்தியாவில் இருக்கும் 1,50,000 மொபைல் விற்பனை கடைகளில் 60 சதவீத கடைகள் விற்பனை தளர்வு அறிவிக்கப்பட்டும் திறக்கவில்லை என்பது மிகவும் மோசமான நிலை என கருதப்படுகிறது.
கடன் வசதி
அனைத்து துறைகளிலும் தற்போது பாதிக்கப்பட்டுள்ளது சிறு வியாபாரிகள் தான். இதற்கு முக்கிய காரணம் மக்கள் கையில் பணம் இல்லாத காரணத்தால் வர்த்தகம் என்பது முற்றிலும் குறைந்துள்ளது. மேலும் சிறு வியாபாரிகளுக்கு கொரோனா-க்கு முன் கிடைப்பது போல் 7 முதல் 21 நாள் கடன் அடிப்படையில் விற்பனைக்காக பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது, ஆனால் தற்போது அது இல்லை.
கையில் பணம் இருந்தால் மட்டுமே வர்த்தகம் செய்ய முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர் சிறு வியாபாரிகள்.
பார்லே
நாடு முழுவதும் வீடு மற்றும் தெருக்களில் விற்பனை செய்யப்படும் 58 லட்சம் டீ, பான் கடைகளில் 10 சதவீத கடைகள் ஏப்ரல் முதல் மே மாதத்தில் மூடப்பட்டுள்ளது என பார்லே இந்தியா நிறுவநனத்தின் தலைவர் பி கிருஷ்ணா ராவ் தெரிவித்துள்ளார்.
மேலும் 42 லட்ச பெரிய மளிகை கடைகளில் 1 முதல் 2 சதவீத கடைகளும் இந்த லாக்டவுன் காலத்தில் மூடப்படும் நிலை உள்ளது ராவ் தெரிவித்துள்ளார்.
தாமதம்
இந்த கடைகள் அனைத்தும் லாக்டவுன் காலம் முடிந்தாலும் மீண்டும் இயங்குவதற்கு நீண்டம் காலம் தேவைப்படும். மக்கள் மத்தியில் பணபுழக்கம் இயல்பான நிலைக்கு திரும்பிய பின்பு தான் சிறு வியாபாரிகளின் நிலை மேம்படும்.