சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வங்கி கடன் களை வழங்குவதற்கு நடைமுறைகளை எளிதாக்குவதற்கும், எளிமைப்படுத்துவதற்கும் தமிழக அரசு விரைவில் ஒரு போர்டலை உருவாக்க உள்ளதாக தமிழகத்தின் நிர்வாக அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார்.
மூத்த வங்கி அதிகாரிகள் மற்றும் தொழில் அதிபர்களுடன் ஒரு கூட்டத்தில் பேசிய அமைச்சர் வேலுமணி, இந்த போர்டலானது வங்கிகளுக்கும், தொழில் அதிபர்களுக்கும் மிகவும் உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதிலும் தற்போது நாட்டில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொழிலதிபர்கள் வங்கிகளை அணுகி கடன் கேட்க தேவையில்லை. ஏனெனில் அவர்கள் தேவையான ஆவணங்களை உருவாக்கப்படும் இந்த போர்டல் மூலம் பதிவு செய்தால் போதும் என்றும் கூறியுள்ளார்.
அதுமட்டும் அல்ல, இக்கூட்டத்தில் கூறப்பட்ட, தொழிலாளர்களின் பரிந்துரைகள், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
அதோடு கடன் களை விரைவாக பெறுவதில் உள்ள சிக்கல்களை வங்கிகள் தீர்க்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 1.5 லட்சம் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், 15 லட்சம் ஊழியர்களைக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் 8,284 சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 554 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆக கொரோனா பரவலுக்கு மத்தியில், நாட்டின் ஜிடிபியில் முக்கிய பங்கு வகிக்கும் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பல சலுகைகளை அரசு தொடர்ந்து பரிந்துரைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
அதிலும் கொரோனாவினால் பெரும் நெருக்கடியினை சந்தித்துள்ள சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக, மத்திய அரசு பிணை இல்லாமல் 3 லட்சம் கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
அவசரகால கடன் உதவி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்த கடனுக்கு வட்டி விகிதம் 9.25 சதவீதம் என்றும் மத்திய அரசு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த ஜூன் 12 வரையில், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 32,049.86 கோடி ரூபாய் கடனுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இதே 16,031.39 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.