இந்தியாவில் ஆன்லைன் டெலிவரி சேவைகளும், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தொடர்ந்து வர்த்தகங்கள் விரிவாக்கம் அடைந்து வருகிறது.
ஏற்கனவே உணவு, மருந்து, மளிகை பொருட்கள், காய்கறிகள் ஆன்லைன் ஆர்டர் மூலம் பொருட்களை வீட்டுக்கு டெலிவரி செய்யும் சேவைகளைப் பல நிறுவனங்கள் அளித்து வருகிறது.
இந்நிலையில் புதிதாக மதுபானத்தை வீட்டில் டெலிவரி செய்யும் சேவை துவங்கப்பட்டு உள்ளது.
கொரோனா தொற்று
கொரோனா தொற்றுக் காலத்தில் மதுபான கடைகள் மூடப்பட்ட நிலையில் பல முன்னணி நிறுவனங்கள் உணவு, மருந்து, மளிகை பொருட்கள், காய்கறிகள் போலவே மதுபானத்தையும் ஹோம் டெலிவரி செய்ய முயற்சி செய்தது. ஆனால் பெரும்பாலான மாநிலங்கள் மறுப்பு தெரிவித்த நிலையில் தற்போது முதல் முறையாக கொல்கத்தா மாநிலம் மட்டும் மதுபானத்தை ஆன்லைன் டெலிவரி செய்ய அனுமதி அளித்துள்ளது.
கொல்கத்தா
கொல்கத்தா மாநிலத்தில் மதுபானம் ஆர்டர் செய்யப்பட்ட 10 நிமிடத்தில் ஹோம் டெலிவரி செய்யும் சேவையை ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் அளிக்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
மதுபான ஆன்லைன் டெலிவரி
ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் இன்னோவென்ட் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தனது Booozie என்ற சேவையைக் கொல்கத்தாவில் அரசின் அனுமதி பெற்று துவங்கியுள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக மதுபானத்தை 10 நிமிடத்தில் டெலிவரி செய்யும் சேவையை இன்னோவென்ட் டெக்னாலஜிஸ் அறிமுகம் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
10 நிமிட டெலிவரி
Booozie தளத்தில் ஆர்டர்கள் குவிந்த உடனே டெலிவரி ஏஜெண்ட்கள் அருகில் இருக்கும் மதுபான கடைகளுக்குச் சென்று குறித்த ஆர்டரில் இருக்கும் பொருட்களை வாங்கிக் கொண்டு அடுத்த 10 நிமிடத்தில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் சேவை அளிக்கிறது.
செயற்கை நுண்ணறிவு
இந்த டெலிவரி சேவையில் செயற்கை நுண்ணறிவு உட்படப் பல தொழில்நுட்பங்கள் இருக்கும் காரணத்தால் குறைந்த செலவில் மதுபானத்தை டெலிவரி செய்ய முடியும் என Booozie இணை நிறுவனர் மற்றும் CEO விவேகானந்த் பாலிஜேபள்ளி தெரிவித்துள்ளார்.
'குடி'மக்கள்
இந்தச் சேவையைக் 'குடி'மக்கள் பலர் விரும்பினாலும், பல கோடி பேர் எதிர்த்து வருகின்றனர். உங்க கருத்து என்ன தமிழ்நாட்டில் இதுபோன்ற சேவை கொண்டு வரலாமா..? வேண்டாமா..? மறக்காம கமெண்ட் பண்ணுங்க.