இந்தியாவில் இருந்து வெளியேறுவதாக ஃபோர்டு கார் உற்பத்தி நிறுவனம் கடந்த ஆண்டே அறிவித்தது. இதனால் சென்னை அருகே உள்ள மறைமலை நகரில் உள்ள ஃபோர்டு ஆலை ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
தங்களுக்கு சலுகைகளுடன் இழப்பீடும் வழங்க வேண்டும் என போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
ஆனால் ஃபோர்டு ஆலையில் கடந்த வாரம் மீண்டும் உற்பத்தியினை தொடங்கியது அந்நிறுவனம். அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிக்கு திரும்ப ஒப்புக் கொண்டதாகவும் நிறுவனம் அறிவித்தது.
எச்சரிக்கை
எனினும் ஃபோர்டு சென்னையின் ஒட்டுமொத்த ஊழியர்களில் சிறு பகுதியினர் மட்டுமே பணிக்கு திரும்பினர். இந்த நிலையில் ஜூன் 14 முதல் சட்டவிரோத வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருப்போரின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும். உற்பத்திக்கு ஒத்துழைப்பு அளிக்கும் ஊழியர்களுக்கு மட்டும் இழப்பீடு வழங்கப்படும் எனவும் ஃபோர்டு தெரிவித்தது.
1100 பணி தொடக்கம்
மேலும் ஏற்றுமதி செய்யப்படும் கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படவுள்ளது. ஆக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு எச்சரித்து இருந்தது. இந்த நிலையில் தற்போது 1100 ஊழியர்கள் தங்களது பணியினை மீண்டும் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
போராட்டம்
ஃபோர்டு நிறுவனத்தில் மொத்தம் 2600 பேர் பணியாற்றி வந்த நிலையில், தற்போது 1100 பேர் மட்டுமே பணிக்கு திரும்பியுள்ளனர். இதில் 400 ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இதற்கிடையில் போர்டு நிர்வாகம் ஊழியர் சங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும், ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும், அதற்கான பேச்சு வார்த்தைக்கு தயார் எனவும் கூறப்படுகிறது.
எத்தனை நாட்களுக்கு இழப்பீடு
ஒரு ஆண்டு சேவைக்கு 87 நாட்கள் சம்பளத்தினை வழங்குவதில் இருந்து, தற்போது 110 நாட்களாக அதிகரித்துள்ளது என தொழில்சங்க அதிகாரிகள் கூறியுள்ளனர். ஒரு ஊழியரின் பணி அனுபவத்தை பொறுத்து வருடத்திற்கு எத்தனை நாட்களுக்கு இழப்பீடு என்பது 102 நாட்களுக்கு மேல் மாறுபடும். ஊழியர்கள் சேவை முடிந்த ஒவ்வொரு ஆண்டுக்கும் சுமார் 135 நாட்கள் சம்பளம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர்.