12 வயதில் 3 ஆப் செய்து கின்னஸ் சாதனை செய்த சிறுவனுக்கு எதிர்காலத்தில் கோடிக்கணக்கில் வருமானம் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
சிறிய வயதில் பல சாதனைகள் செய்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் 12 வயது சிறுவன் மூன்று ஆப்களை தானே உருவாக்கி உலகின் மிக இளைய வயது ஆப் டெவலப்பர் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.
இந்த சிறுவனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் சரியான வழிகாட்டல் இருந்தால் இந்த சிறுவன் ஆப் டெவலப்பர் துறையில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம் என கூறப்படுகிறது.
12 வயது சிறுவன்
ஹரியானாவைச் சேர்ந்த 12 வயது கார்த்திகேயா ஜாகர் என்பவர் யூடியூப் வழிகாட்டுதல் மூலம் தானே மூன்று கல்வி செயலிகளை உருவாக்கி, உலகின் இளைய ஆப் டெவலப்பர் என்ற கின்னஸ் உலக சாதனையை படைத்து சாதனை செய்துள்ளார்.
மொபைல் போன்
ஹரியானா மாநிலத்தில் உள்ள ஜஜ்ஜரின் ஜவஹர் நவோதயா வித்யாலயாவின் 8 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர் கார்த்திகேயா ஜாகர். இவருக்கு தொற்றுநோய்களின் போது ஆன்லைன் வகுப்புகளுக்கு உதவுவதற்காக அவரது விவசாயி தந்தை அஜித் சிங் ரூ. 10,000 மதிப்புள்ள மொபைல் ஃபோனை தனது மகனுக்கு வாங்கி கொடுத்தார். இந்த மொபைல் போன் தான் அந்த சிறுவனை இன்று கின்னஸ் செய்ய வழிவகுத்துள்ளது.
யூடியூப் உதவி
தந்தை வாங்கி கொடுத்த மொபைல் ஃபோனில் உள்ள சில குறியீட்டு செயல்பாடுகள் திடீரென செயல் இழந்து போனதால், அதை சரி செய்வது எப்படி என்று மாணவர் ஜாகர், யூடியூப் மூலம் கற்றுள்ளார். பின்னர் அதை தானே சரி செய்து படிப்பை தொடர்ந்துள்ளார்.
செயலி டெவலப்பர்
இந்த நிலையில் யூடியூப் மூலம் மேலும் சில விஷயங்களை கற்று கொண்டு செயலி டெவலப்பர் ஆகலாம் என்ற யோசனை ஜாகருக்கு உதித்துள்ளது. இதுகுறித்து அவர் கூறியபோது, 'யூடியூபில் நானே சில விஷயங்களை கற்றுக்கொண்டு மூன்று செயலிகளை உருவாக்கினேன். முதலாவது லூசண்ட் ஜிகே ஆன்லைனில் பொது அறிவு தொடர்பானது. இரண்டாவது கோடிங் மற்றும் கிராஃபிக் டிசைனிங் கற்பிக்கும் ராம் கார்த்திக் கற்றல் மையம் குறித்த செயலி மற்றும் மூன்றாவது ஸ்ரீ ராம் கார்த்திக் டிஜிட்டல் கல்வி. இப்போது, இந்த செயலிகள் சுமார் 45 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கின்றன என்று ஜாகர் தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் இந்தியா
எங்கள் பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா பிரச்சாரத்தில் இருந்து நான் ஊக்கம் பெற்றேன் என்றும், நான் இன்னும் நிறைய கற்று தேசத்திற்கு சேவை செய்ய விரும்புகிறேன்' என்றும் ஜாகர் கூறியுள்ளார். மேலும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் பிஎஸ்சி நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற இந்த சிறுவன் உதவித்தொகையையும் பெற்று வருகிறான் என்பது குறிப்பிடத்தக்கது.
தந்தை பெருமிதம்
தனது மகனின் திறமை குறித்து அவரது தந்தை அஜித் ஜாகர் பெருமையுடன் கூறியபோது, எனது மகனுக்கு தேவையான வசதிகளை உருவாக்கி உதவுமாறு அரசாங்கத்தை நான் கேட்டுக்கொள்கிறேன். அவர் ஒரு சிறந்த திறமைசாலி, அவர் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்' என்று கூறினார்.
ஹரியானா முதல்வர்
இந்த நிலையில் சிறுவனின் சாதனைகளை அறிந்த ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் ட்விட்டரில் பாராட்டினார். "ஜஜ்ஜாரைச் சேர்ந்த பன்னிரெண்டு வயதான கார்த்திகேயா, இளைய ஆப் டெவலப்பராக கின்னஸ் சாதனை படைத்துள்ளார். விளையாட்டு, கலாச்சாரம் மற்றும் கலைகள் மட்டுமின்றி, ஹரியானா இளைஞர்கள் உலக அளவில் தொழில்நுட்பத்தில் பாராட்டத்தக்க பணியை செய்து வருகின்றனர்" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
கோடிக்கணக்கில் சம்பாதிக்க வாய்ப்பு
12 வயது சிறுவர் கார்த்திகேயா ஜாகருக்கு சரியான வழிகாட்டுதல் இருந்தால் இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள பல நிறுவனங்களுக்கு செயலிகள் உருவாக்கி தரும் பணி செய்து லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்று அவரது பள்ளி ஆசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.