ஐடி துறையானது எப்போதுமே இந்திய மாணவர்களின் கனவாக இருந்தாலும், கொரோனாவுக்கு பிறகு இதன் மீதான ஆர்வம் என்பது இன்னும் கணிசமாக அதிகரித்துள்ளது.
குறிப்பாக கொரோனா காலத்தில் பலதுறையினரும் வேலையிழந்து வீடுகளுக்குள் முடங்கிய சமயத்தில், ஐடி துறையினர் மட்டும் வழக்கத்திற்கு மாறாக பரபரப்பாக காணப்பட்டனர்.
ஒன்றுக்கு மேற்பட்ட முறை சம்பள அதிகரிப்பு, போனஸ் என சந்தோஷத்தில் குதூகலித்தனர். ஆனால் தற்போது பற்பல நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன. இது ஒரு சுழற்சி தான் அடுத்த ஆண்டில் இருந்து மீண்டும் பணியமர்த்தல் தொடரும் என்றும் நிபுணர்கள் கூறிவருகின்றனர்.
பிரெஷ்ஷர்களுக்கு சம்பளம்
கடந்த 10 ஆண்டுகளில் ஐடி துறையில் சம்பள அதிகரிப்பானது மாபெரும் அளவில் விஸ்வரூப வளர்ச்சி கண்டுள்ளது எனலாம். குறிப்பாக தலைமை செயல் அதிகாரிகளின் சம்பளம் என்பது பல தரப்பினரையும் வியக்க வைத்துள்ளது எனலாம். பிசினஸ் டுடே தரவுகள் பிரெஷ்ஷர்களுக்காக சம்பளம் 45% மேலாக அதிகரித்துள்ளது.
CEO-க்களுக்கு சம்பளம் எவ்வளவு அதிகரிப்பு?
அதேசமயம் தலைமை செயல் அதிகாரிகளின் (CEO) சம்பளம் ஆனது 1500% அதிகரித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பிரெஷ்ஷர்களின் சம்பளம் 46.94% மட்டுமே அதிகரித்துள்ளது. ஆனால் தலைமை செயல் அதிகாரிகளின் சம்பளம் 1492.27% அதிகரித்துள்ளது.
CEO-க்களின் சம்பளம் எவ்வளவு?
டிசிஎஸ் நிறுவனத்தில் CEOவின் சம்பளம் கடந்த 2012ல் 8 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் இது 2022ல் 26 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதே இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 2012ல் 0.8 கோடி ரூபாயாக இருந்த சம்பளம், 2022ல் 79 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
விப்ரோ நிறுவனத்தில் 2012ல் 5.1 கோடி ரூபாயாக இருந்த சம்பளம், 2022ல் 79 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஹெச் சி எல் டெக்னாலஜி நிறுவனத்தில் 2012ல் 8.4 கோடி ரூபாயாக இருந்த சம்பளம், 2022ல் 124 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
டெக் மஹிந்திரா நிறுவனத்தில் 2012ல் 1 கோடி ரூபாயாக இருந்த சம்பளம், 2022ல் 63 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மொத்தத்தில் சராசரி சம்பளம் 2012ல் 4.66 கோடி ரூபாயாக இருந்த சம்பளம், 2022ல் 74.2 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் 1492.27% அதிகரித்துள்ளது.
பிரெஷ்ஷர்களின் சம்பளம்?
டிசிஎஸ் நிறுவனத்தில் பிரெஷ்ஷர்களின் சம்பளம் கடந்த 2012ல் 1.6 லட்சம் ரூபாயாக இருந்தது. ஆனால் இது 2022ல் 4 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதே இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 2012ல் 2.75 லட்சம் ரூபாயாக இருந்த சம்பளம், 2022ல் 3.6 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது.
விப்ரோ நிறுவனத்தில் 2012ல் 2.4 லட்சம் ரூபாயாக இருந்த சம்பளம், 2022ல் 3.5 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஹெச்சிஎல் டெக்னாலஜி நிறுவனத்தில் 2012ல் 3 லட்சம் ரூபாயாக இருந்த சம்பளம், 2022ல் 3.5 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது.
டெக் மஹிந்திரா நிறுவனத்தில் 2012ல் 2.75 லட்சம் ரூபாயாக இருந்த சம்பளம், 2022ல் 3.4 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது.
மொத்தத்தில் சராசரி சம்பளம் 2012ல் 2.45 லட்சம் ரூபாயாக இருந்தது. இது 2022ல் 3.6 லட்சம் ரூபாயாக உள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் சராசரியான 46.94% மட்டுமே ஏற்றம் கண்டுள்ளது.
நாஸ்காமின் கருத்து?
இது குறித்து நாஸ்காமின் முன்னாள் தலைவர் கிரண் கார்னிக் தற்போதைய பட்டதாரிகள், பிரெஷ்ஷர்கள் என பல தரப்பினரும், நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறமை கொண்டிருப்பதில்லை. இதன் காரணமாக இந்த ஏற்றத் தாழ்வு என்பது இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் அப்படி தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு பயிற்சி தேவைப்படுகின்றது என கூறியுள்ளார். இதுபோன்ற சம்பள அதிகரிப்பு இனி இருக்குமா? பிரெஷ்ஷர்களுக்கு அதிகரிக்கப்படுமா? என்ற பெரும் எதிர்பார்ப்பு இருக்குமா? பொறுத்திருந்து தான் பார்ப்போமே.