டெல்லி: இந்த 2019-ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே மத்திய ரிசர்வ் வங்கி தன்னால் முடிந்த வரை, ரெப்போ ரேட் வட்டி விகிதங்களைக் குறைத்துக் கொண்டே வந்திருக்கிறது. ஆனால் வங்கிகளால், மத்திய ரிசர்வ் வங்கி அளவுக்கு, கடனுக்கான வட்டி விகிதங்களைக் குறைக்க முடியவில்லை. இருப்பினும் வங்கிகளை அழைத்துப் பேசி, ரெப்போ ரேட் அடிப்படையிலான வட்டி விகிதங்களைக் கொண்ட கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
மத்திய ரிசர்வ் வங்கி நீங்களாக, நிதி அமைச்சகம் தொடர்ந்து கடன் கொடுக்கச் சொல்லி பொதுத் துறை வங்கிகளை வலியுறுத்திக் கொண்டே இருந்தது. இந்த தொடர் வலியுறுத்தல் மற்றும் பொதுத் துறை வங்கிகளின் உழைப்பு எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து ஒரு நல்ல பலனைக் கொடுத்து இருக்கிறது.
கடந்த அக்டோபர் 2019 ஒரே மாதத்தில் மட்டும் பொதுத் துறை வங்கிகள் 2.52 லட்சம் கோடி ரூபாய் கடன் கொடுத்து இருக்கிறார்களாம். பொதுவாக இந்தியாவில் அக்டோபர் மாதம் ஒரு பண்டிகை காலம் என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும்.
பொதுவாகவே பண்டிகை காலங்களில், இந்தியாவில் வீடு போன்ற பெரிய பெரிய சொத்துக்களை வாங்குவது தொடங்கி, ஒரு சின்ன தங்க நகை வாங்குவது வரை பண்டிகையில் வாங்குவது ஒரு வழக்கம் தானே. எனவே கடனும் கொஞ்சம் அதிகமாகவே கொடுக்கப்பட்டு இருப்பதில் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை.
கடந்த அக்டோபர் 2019-ல் 2,52,589 கோடி ரூபாய் கடன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதில் 1,05,599 கோடி ரூபாய் கடன் டேர்ம் கடன்களாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. 46,800 கோடி ரூபாய் வொர்க்கிங் கேப்பிட்டல் கடன்களாக கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான கடன், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு கொடுத்திருக்கும் கடன் தான். என் பி எஃப் சி நிறுவனங்களூக்கும் கடந்த அக்டோபர் 2019 ஒரே மாதத்தில் சுமாராக 19,625 கோடி ரூபாய் கடன் கொடுத்து இருக்கிறார்களாம்.
இது இந்தியப் பொருளாதாரத்தில் இது ஒரு பெரிய திருப்பம். வங்கிகளிடம் கடன் கொடுக்க போதுமான நிதி இருக்கிறது. இனி வரும் காலங்களில் வங்கிகளால் எவ்வளவு வேண்டுமானாலும் கடன் கொடுக்க முடியும் எனச் சொல்லி இருக்கிறார் நிதி அமைச்சக செயலர் ராஜிவ் குமார்.