டெல்லி: 2014-ம் ஆண்டு நரேந்திர மோடி, இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்ற பின் தொடர்ந்து பல வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு வருகிறார். உலகின் பல நாடுகளுடன் நட்பு ரீதியிலான சந்திப்பு, அதிகாரபூர்வ உச்சி மாநாடுகள், உலக வர்த்தக மாநாடுகள் என பல காரணங்களுக்காக பயணித்துக் கொண்டே இருக்கிறார்.
இந்த பயணங்களின் போது, பல நாட்டு அரசாங்கம் மற்றும் வியாபார சாம்ராஜ்ய தலைவர்களிடம் பேசி, தொடர்ந்து முதலீடுகளை வாங்க முயற்சி எடுத்து வருகிறார்.
பிரதமரின் இந்த முயற்சிக்கு, ஒரளவுக்கு பலனும் கிடைத்துக் கொண்டு இருக்கிறது. இப்படி வெளிநாடுகளில் பயணம் மேற்கொள்ள, அரசு பிரதமருக்கு என்று தனி விமானத்தை ஏற்பாடு செய்து கொடுக்கிறது.
அப்படி அந்த தனி விமானத்து என்ன செலவு செய்திருக்கிறார்கள்..? என்று கேட்டால் 255 கோடி ரூபாய் என்கிறார்கள். அதுவும் கடந்த 3 வருடங்களுக்கு மட்டும் தானாம். அதற்கு முந்தைய ஆண்டுகளைச் சேர்க்க வில்லையாம்.
பாராளுமன்றத்தின் மேலவையான ராஜ்ய சபாவில், பிரதமர் பயணத்துக்கான செலவுகள் குறித்து கேள்வி எழுப்பியதற்கு, மத்திய வெளி விவகாரத் துறை இணை அமைச்சர் வி முரளிதரன் எழுத்து பூர்வமாக பதில் கொடுத்து இருக்கிறார்.
பிரதமரின் வெளிநாட்டு சுற்றுப் பயணங்களுக்கு, ஏற்பாடு செய்த தனி விமானத்துக்கு, கடந்த 2016 - 17 ஆண்டில் 76.27 கோடி ரூபாய் செலவு செய்து இருக்கிறார்களாம். 2017 - 18-ம் ஆண்டுகளில் 99.32 கோடி ரூபாய் செலவு செய்து இருக்கிறார்களாம். 2018 - 19-ம் ஆண்டுகளில் 79.91 கோடி ரூபாய் செலவு செய்து இருக்கிறார்களாம்.
இதை எல்லாம் விட முக்கியமான விஷயம், பிரதமரின் ஹாட் லைன் செலவுகள். அதாவது இரண்டு தேசங்களுக்கு இடையிலான தலைவர்கள் பேசுவதை யாரும் ஒட்டு கேட்காமல் இருக்க, தலைவர்களுக்கு பிரத்யேகமாக இருக்கும் தொலைத் தொடர்பு வசதி.
இந்த ஹாட் லைன் வசதிக்கு, கடந்த 2016 - 17-ம் ஆண்டுகளில் பிரதமரின் ஹாட்லைனுக்கு மட்டும் 2.24 கோடி ரூபாய் செலவு செய்து இருக்கிறார்களாம். 2017 - 18-ம் ஆண்டுகளில் 0.58 கோடி செலவழித்து இருக்கிறார்களாம். ஆக இந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் 2.82 கோடி ரூபாய் செலவழித்து இருக்கிறார்கள்.