3ல் 2 இந்தியர்கள் பட்ஜெட் 2022 ஆனது பொருளாதாரத்தில் சாதகமான தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என நம்புகின்றனராம்.
இது குறித்தான லோக்கல் சர்க்கிள்ஸ் ஆய்வில், இந்தியர்கள் பலரும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் நம்பிக்கை கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது.
மேலும் தற்போது கொரோனா தொற்று நோயின் காரணமாக தொடர்ந்து மக்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும், மக்கள் வருமான வரி சலுகையில் பல மாற்றங்களை செய்யலாம் என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால் எதிர்பார்க்கப்பட்டதை போல அப்படி ஏதும் அறிவிப்புகள் வெளியாகவில்லை.
அசைக்க முடியாத நம்பிக்கை
குறிப்பாக தனி நபர் வருமான வரி திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதன் மூலம் மக்களுக்கு நேரடியாக எந்த பெரிய நிவாரணமும் அளிக்கப்படவில்லை. இதற்கிடையில் இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் 24% மக்கள் பட்ஜெட் அறிவிப்பினால் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
எதுவும் நடக்காது
இதே பதிலளித்தவர்களில் 42% பேர் ஒரு துறையாவது பட்ஜெட்டால் பலனடையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதேசமயம் 29% மக்கள் எந்த தாக்கத்தினையும் ஏற்படுத்தாது என கூறியுள்ளனர்.
இந்த சர்வேயானது இந்தியாவின் 342 மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் 40,000 பேர் பதிலளித்துள்ளனர்.
எதிர்பார்த்தது இல்லை
இந்த ஆய்வில் 56 சதவீதம் பேர் பட்ஜெட்டில் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்று கூறியுள்ளனர். இதே 42% பேர் எதிர்பார்த்ததை விட அதிகமாக பட்ஜெட் பூர்த்தி செய்துள்ளதாகவும் பதிலளித்துள்ளனர். மொத்தத்தில் சாமானியர்களின் எதிர்பார்ப்புகள் இந்த பட்ஜெட் அறிவிப்புகளில் வராவிட்டாலும், கார்ப்பரேட் கூடுதல் கட்டணங்களில் விலக்கு, உள்கட்டமைப்பு துறைக்கு அதிக ஒதுக்கீடு, என பலவும் பெரும் கார்ப்பரேட்களுக்கு உதவிகரமாக இருக்கும் என நம்பப்படுகிறது.
சாமானியர்களுக்கு ஒன்றும் இல்லை
ஒரு புறம் இதன் முலம் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க முடியும் என அரசு நம்பினாலும், மறுபுறம் நேரிடையாக சாமானிய மக்களுக்கு எந்த அறிவிப்பும் பெரிதாக வெளியாகவில்லை என்பது மறுக்க முடியாத உண்மையே. எனினும் நீண்டகால நோக்கில் உள்கட்டமைப்பு துறை வசதி, வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவிகரமாக இருக்கும் என்பதும் மறுக்க முடியாததே. இதனைத் தான் இந்த ஆய்வும் சுட்டிக் காட்டுகின்றது.