கொரோனா-வின் பாதிப்பு எந்த அளவிற்கு மக்களைப் பாதித்துள்ளதோ, அதே அளவிற்கு இந்திய பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கும் திரும்பும் வரையில் இந்திய வர்த்தகச் சந்தை மீண்டு வராது என்பது தெளிவாகத் தெரிகிறது.
தென்னிந்தியாவில் சென்னை, பெங்களுரூ, ஹைதராபாத் ஆகிய 3 முக்கிய பெரு நகரங்களிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், லாக்டவுன் உடன் அதிகளவிலான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் தென்னிந்திய வர்த்தகச் சந்தை மோசமான நிலையில் உள்ளது என்றால் மிகையில்ல.
இந்நிலையில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கடந்த வாரம் சில முக்கியமான விஷயங்களை மறைமுகமாகக் கூறினார். இது என்ன..??
சக்திகாந்த தாஸ்
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கடந்த வாரம் பேசுகையில், கொரோனா தாக்கம் இந்திய பொருளாதாரத்தைப் பெரிய அளவில் பாதித்துள்ளது. இந்தப் பாதிப்பின் விளைவாக இந்திய வங்கிகளின் வராக்கடனை உயர்த்தி, வங்கி மூலதனத்தையும் அழிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
மேலும் பொருளாதாரம் மந்த நிலையில் இருப்பதால் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் வர்த்தகத்தில் மீண்டு வர recapitalization அதாவது மறுமூலதன திட்டம் கட்டாயம் தேவைப்படும் நிலை உள்ளது எனக் கூறினார்.
வராக்கடன்
சக்திகாந்த தாஸ் சொல்வதைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்பு இந்திய வங்கிகளில் வராக் கடன் அளவை மிகப்பெரிய உயர்த்தும் என்பது தான்.
கடன் சலுகை
வங்கிகள் தற்போது ஆகஸ்ட் 31ஆம் தேதி வரையில் கடன் சலுகை கொடுத்துள்ளது, இந்தியாவில் தற்போது மொத்தம் 12 லட்சம் கோடி ரூபாய் அளவிலான கடன் இருக்கும் நிலையில், சலுகை முடிந்த பின்பு 5ல் ஒரு 1 பங்கு கடனை செலுத்த முடியாமல் போனாலும் இந்திய வங்கிகளின் வராக் கடன் 20 லட்சம் கோடி ரூபாய் அளவில் உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இது தற்போதைய அளவை விடவும் கிட்டதட்ட 2 மடங்கு அதிகமாகும்.
மறு முதலீடு
இந்த வராக்கடன் பிரச்சனையைச் சமாளிக்க வங்கிகள் கையில் இருக்கும் ஓரே வழி, ஏற்கனவே கடன் கொடுத்தவர்களுக்கு மறு கடன் கொடுத்து அவர்களின் வர்த்தகத்தை மீட்டு எடுப்பதே ஆகும்.
ஆனால் இதுவும் கணிசமான அளவு வராக்கடனைக் குறைக்க மட்டுமே பயன்படும் என்பது வங்கித்துறை வல்லுனர்களின் கணிப்பு.
NBFC
ICRA அமைப்பின் தகவல்கள் படி தற்போது NBFC பிரிவில் இருக்கும் வங்கிக் கடன்களில் 52 சதவீதம் கடன்களுக்கு moratorium சலுகை பெறப்பட்டுள்ளது. இந்தச் சலுகை முடிந்த பின்பு 10 சதவீத கடன் திருப்பிச் செலுத்த முடியாமல் போனாலும் தற்போது இருக்கும் 4.6 சதவீத வராக் கடன் மார்ச் 2021க்குள் 9.6 சதவீதமாக உயர்ந்துவிடும்.
டைம்பாம்
பொதுத்துறை, தனியார் வங்கிகளிலும் இதை நிலை தான். இதனால் மொத்த வங்கித்துறையும் தற்போது ஆகஸ்ட் மாத moratorium சலுகை முடிவிற்காகக் காத்திருக்கிறது. ஆகஸ்ட் மாதத்திற்குப் பின்பு தான் வரக்கடன் எந்த அளவிற்கு உயரும், நாட்டின் பொருளாதாரம் எந்த அளவிற்கு வளர்ச்சி அடையும் என்பது தெரியும்.
இதைச் சமாளிக்க மத்திய அரசிடம் சரியான திட்டம் இருக்கிறதா..?