மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது போலவே எல்பிஐ சிலிண்டர் விலை குறைக்கப்படுமா என மக்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் வர்த்தகச் சிலிண்டருக்கான விலையை மட்டுமே குறைத்தது, சாமானிய மக்களுக்குப் பெரும் ஏமாற்றமாக இருந்தது.
ஆனால் இதேவேளையில் மே மாதம் வீட்டில் பயன்படுத்தும் சிலிண்டர் விலை குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் அறிவித்த எல்பிஜி சிலிண்டருக்கான ரூ.200 மானியம் அனைவருக்கும் கிடையாது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
200 ரூபாய் மானியம்
உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச இணைப்புகளைப் பெற்றவர்களுக்கும், 9 கோடி ஏழைப் பெண்கள் பெற்ற இணைப்புகளுக்கு மட்டுமே எல்பிஜி சிலிண்டருக்கான 200 ரூபாய் மானியம் வழங்கப்படும். மற்ற அனைவரும் சந்தை விற்பனை விலைக்குத் தான் பெற முடியும்.
பங்கஜ் ஜெயின்
மத்திய எண்ணெய் துறை செயலாளர் பங்கஜ் ஜெயின் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில் ஜூன் 2020 முதல் சமையல் எரிவாயுக்கு மானியம் வழங்கப்படவில்லை என்றும், மார்ச் 21 அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த மானியம் மட்டுமே வழங்கப்படும் என்றும் கூறினார்.
கோவிட் தொற்று
கோவிட் தொற்றின் ஆரம்ப நாட்களில் இருந்து எல்பிஜி பயனர்களுக்கு மானியம் இல்லை. அதன்பின்னர் உஜ்வாலா பயனாளிகளுக்கு இப்போது அறிமுகப்படுத்தப்பட்ட மானியம் மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது என்றும் மத்திய எண்ணெய் துறை செயலாளர் பங்கஜ் ஜெயின் தெரிவித்தார்.
நிர்மலா சீதாராமன்
பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீது 6 ரூபாயும் குறைப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த போது, உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கு ஓராண்டில் 12 எல்பிஜி சிலிண்டருக்கு தலா 200 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
6100 கோடி ரூபாய் இழப்பு
சமையல் எரிவாயு விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருவதால் ஏற்படும் சுமையை 200 ரூபாய் மானியம் மூலம் ஏழை மக்கள் பயன்படுவார்கள் எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்த 200 ரூபாய் மானியம் மூலம் ஒன்றிய அரசுக்கு 6100 கோடி ரூபாய் வருமானத்தை இழக்கிறது.