மேற்கு வங்க அரசானது தமது நிதிநிலைமையைக் கருத்தில் கொண்டு பல்வேறு சிறப்பு நிதி உதவியை மத்திய அரசிடம் எதிர்பார்த்து காத்திருக்கிறது. மத்திய அரசு கொடுத்த ரூ22 ஆயிரம் கோடிக்கான வட்டியை திருப்பி செலுத்துவதற்கான காலத்தை நீட்டிக்க வலியுறுத்திக் கொண்டிருக்கிறது. சிறப்பு நிதி வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறது. இந்நிலையில் நிதி அமைச்சராக பிரணாப் நீடிப்பார் எனில் தத்தளித்தாக வேண்டிய நிலைமைக்கே மேற்கு வங்கம் சென்றாகும்.
அண்மையில் மேற்கு வங்க ஆளுநர் எம்.கே. நாராயணன் கூட நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு இது தொடர்பாக கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். பொருளாதார ரீதியான நெருக்கடி நிலைமையை மேற்கு வங்க அரசு எதிர்கொண்டு வருவதாகவும் மமதா பானர்ஜி மேற்கொண்டு வரும் மீட்பு நடவடிக்கைக்கு மத்திய அரசு நிச்சயம் உதவ வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது. இதுதான் மேற்குவங்கத்தின் நிலைமை.
குடியரசுத் தலைவர் தேர்தல் ஆலோசனைகள் நடைபெற்ற போதுகூட பிரணாப் முகர்ஜியை மேற்கு வங்க நிதி அமைச்சர் அமித் மித்ரா சந்தித்துப் பேசியிருந்தார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் மேற்கு வங்க நிதி நிலைமை குறித்து எழுப்பபட்ட கேள்விக்கு பதிலளித்திருந்த பிரணாப், மத்திய அரசு உதவும் என்றிருந்தார்.
ஆனால் குவளையில் அடைக்கப்பட்ட நண்டுகளைப் போல் ஒன்றின் காலை மற்றொன்று வாரிவிடும் கதைதான் மேற்கு வங்க அரசியலில் நடந்தேறியிருக்கிறது. நாட்டின் உயரிய பதவிக்கு பிரணாப் சென்றுவிடக் கூடாது என்பதில் விடாப்பிடியாக இருக்கிறார் மமதா பானர்ஜி. இரண்டு மேற்கு வங்கத்தாரிடமும் சிக்கிக் கொண்டிருக்கிறது மேற்குவங்கத்தின் நிதிநிலைமைதான்!