டெல்லி: பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ளாததால் மத்திய அரசுக்கு இனி வரும் 6 மாதங்கள் சிக்கலாகத்தான் இருக்கும் என்று நிதி அமைச்சகத்தின் மூத்த பொருளாதார ஆலோசகர் கெளசிக் பாசு எச்சரித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொருளாதார சீர்திருத்தங்களை அடுத்த 6 மாதத்தில் சிறிதளவு மேற்கொண்டாலும், வளர்ச்சி என்பதும் பணவீக்க விகிதமும் இதே நிலைமையில்தான் நீடிக்கும். அடுத்த ஆண்டும் இது எதிரொலிக்கும் என்றார்.
மேலும் நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி, சில்லறை வர்த்தகம், ஓய்வூதிய சீர்திருத்தம், ரயில் கட்டண உயர்வு போன்ற சீர்திருத்த நடவடிக்கைகளை கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றியாக வேண்டிய நிலையில்தான் மத்திய அரசு நிலையில் உள்ளது என்பதும் கெளசிக் பாசுவின் கருத்து.
அண்மையில் 10 அம்ச பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தை மத்திய அரசுக்கு கெளசிக் பாசு அளித்திருந்தார். அடுத்த 10 மாதங்களுக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மேற்கொள்ள வேண்டிய அந்தத் திட்டத்தில், ஏர் இந்தியாவை தனியார் மயமாக்குவது, அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றிருந்தது.