லண்டன்: உலகின் 15 மாபெரும் வங்கிகளின் தரவரிசையைக் குறைத்துள்ள சர்வதேச நிதி ஆலோசக அமைப்பான மூடிஸ் (Moody's).
சர்வதேச அளவில் பங்குச் சந்தைகளில் நிலவும் உறுதியற்ற நிலை காரணமாக இந்தச் சந்தைகளில் இந்த வங்கிகள் செய்துள்ள முதலீடுகள் திரும்ப வருமா என்பது சந்தேகத்திற்கிடமாக உள்ளதால், அவற்றின் தரவரிசையைக் குறைத்ததாக மூடிஸ் தெரிவித்துள்ளது.
இதையடுத்து இந்த வங்கிகளின் பங்குகள் மதிப்பு மடமடவென சரிந்துள்ளன.
மோர்கன் ஸ்டாண்லி, கிரெடிட் சூஸே, யுபிஎஸ், எச்எஸ்பிசி, பார்க்லேஸ், பிஎன்பி பரிபாஸ், ராயல் பேங்க் ஆப் கனடா, சிட்டி பேங்க், கோல்ட்மேன் சேக்ஸ், ஜே.பி.மோர்கன் சேஸ், கிரெடிட் அக்ரிகோல், டாயிஸ் பேங்க், பேங்க் ஆப் அமெரிக்கா, ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாண்ட், சோசைட்டி ஜெனரல் ஆகியவையே இந்த 15 வங்கிகள்.
சர்வதேச பங்குச் சந்தைகளில் பல நிறுவனங்களில் இந்த வங்கிகள் ஏராளமான முதலீடுகளைச் செய்துள்ளன.
ஆனால், இப்போது நிலவி வரும் பொருளாதாரத் தேக்கம் காரணமாக இந்த முதலீடுகள் எந்த அளவுக்கு பலனுடையதாக இருக்கும், இதனால் எவ்வளவு தூரம் லாபம் கிடைக்கும் என்பது சந்தேகமே என்பதால் இவற்றின் தரவரிசையை குறைத்துள்ளதாக மூடிஸ் அறிவித்துள்ளது.