கிங்பிஷர் நிறுவனத்திற்கு இதுவரை கொடுத்துள்ள கடனை வசூலிக்க களம் இறங்க வங்கிகள் முடிவு செய்து விட்டன. கடன் பாக்கிக்காக, விஜய் மல்லையாவின் சொத்துக்கள் சிலவற்றை ஏலத்திற்குக் கொண்டு வர அவர்கள் திட்டமிட்டுள்ளனராம்.
மும்பையில் உள்ள கிங்பிஷர் ஹவுஸ் மற்றும் கோவாவில் உள்ள விஜய் மல்லையாவின் பண்ணை வீடு அதில் சில.
ஸ்டேட் வங்கி தலைமையில் நடந்த கிங்பிஷருக்கு கடன் கொடுத்த வங்கிகளின் கூட்டுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சொத்து விற்பனை மூலம் ரூ. 135 கோடி கிடைக்கும் என வங்கிகள் தெரிவித்துள்ளன. மேலும் தனது செயல்பாடுகளை மேம்படுத்திக் கொள்வது குறித்த திட்டத்துடன் 15 நாட்களுக்குள் தங்களை அணுகுமாறும் மல்லையாவுக்கு வங்கிகள் அறிவுறுத்தியுள்ளன.
ஆனால் சொத்துக்கள் விற்பனை குறித்த செய்திகளை கிங்பிஷர் நிறுவனம் மறுத்துள்ளது.