சென்னை: தட்கல் டிக்கெட் வழங்கும் நேரம் மாற்றியமைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இந்த நேர மாற்றம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.
முறைகேடுகளைத் தடுக்க தட்கல் டிக்கெட் வழங்கும் நேரம் மாற்றப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இனி காலை 8 மணிக்குப் பதில் காலை 10 மணிக்கு தட்கல் முன்பதிவு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது. இந்த நேரத்தில் ரயில்வே நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் காலை 10 மணிக்கு முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள். பகல் 12 மணிக்குத் தான் முகவர்கள் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர்.
மேலும் தட்கல் டிக்கெட் வாங்க தனி வரிசைகள் அமைக்கப்படுகிறது. இது தவிர சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர் போன்ற இடங்களில் தட்கல் டிக்கெட்டுக்கு என்று தனி கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு டிக்கெட் கொடுப்பது கேமரா மூலம் கண்காணிக்கப்படும்.
ஒரு கவுண்ட்டர் உள்ள இடங்களில் காலை 10 மணி முதல் 11 மணி வரை தட்கல் டிக்கெட்டுகள் வழங்கப்படும். இது போன்ற இடங்களில் காலை 11 மணிக்கு மேல் தட்கல் டிக்கெட் வாங்க விரும்பினால் சாதாரண வரிசையில் நின்று வாங்கலாம் என்று ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.