வாஷிங்டன்: பொருளாதார பிரச்சனையால் அமெரிக்காவில் படித்து பட்டம் பெற்றவர்கள் வெயிட்டர்களாகவும், பார் ஊழியர்களாகவும் வேலை பார்த்து வருகின்றனர்.
அமெரி்க்காவில் பொருளாதார நிலை சரியில்லாததால் அங்கு படித்து பட்டம் பெற்றவர்களுக்கு படிப்புக்குரிய வேலை கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் ஹோட்டல்களி்ல் வெயிட்டர்களாகவும், பார்களில் ஊழியர்களாகவும் வேலை பார்த்து பிழைப்பு நடத்துகின்றனர்.
இது குறித்து பட்டதாரியான மிஷிகனைச் சேர்ந்த மைக்கேல் பாம்(25) கூறுகையில்,
நான் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பட்டப்படிப்பை முடித்தேன். அன்றில் இருந்து இதுவரை நூற்றுக்கணக்கான நிறுவனங்களுக்கு விண்ணப்பித்துவிட்டேன். ஆனால் முழு நேர வேலை எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து சிகாகோவில் உள்ள பீட்சா கடையில் வெயிட்டராக வேலை பார்க்கிறேன். ஆசிரியராக பணியாற்றும் தகுதி இருந்தும் வேலை கிடைக்கவில்லை என்றார்.
மைக்கேல் போன்று ஏராளமான இளைஞர்கள் படித்துவிட்டு வேலையில்லாமல் கிடைக்கும் பகுதிநேர வேலைகளை செய்து காலத்தை ஓட்டுகின்றனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் தற்போதைய அதிபர் பாரக் ஒபாமாவும், குடியரசுக் கட்சி வேட்பாளர் ரோம்னியும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாக போட்டி போட்டு உறுதியளித்து வருகின்றனர்.
கடந்த ஜூன் மாதம் எடுத்த கணக்கெடுப்பின்படி அம்மாதத்தில் 8.2 மில்லியன் மக்கள் பகுதிநேர வேலை பார்ப்பது தெரிய வந்தது. ஒரு பக்கம் நிலைமை இப்படி சோகமாக இருக்க மறுபக்கம் அண்மையில் கம்ப்யூட்டர் சயன்ஸ், என்ஜினியரிங் மற்றும் அகௌண்ட்ஸ் பட்டம் பெற்றவர்களுக்கு பயங்கர கிராக்கியாக உள்ளது.