கடந்த ஏப்ரல் 4 முதல் மே 27ம் தேதி வரை ஐபிஎல் 5 தொடர் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அணிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் ஒன்று. இந்த அணியில் தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, மேற்கிந்திய தீவுகள் மற்றும் உள்நாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடிய சில வீரர்களுக்கு, ஒப்பந்தப்படி முதல் தவணை சம்பளம் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அணியின் ஒப்பந்தத்தில், ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்களின் சம்பளத்தில் 15 சதவீதம் ஏப்ரல் 1ம் தேதி வழங்கப்படும். அதன்பிறகு மே 1ம் தேதி 50 சதவீதம் சம்பளம் வழங்கப்படும். 20 சதவீதம் சம்பளம் சாம்பியன்ஸ் லீக் டுவென்டி20 தொடருக்கு பிறகும், மீதமுள்ள 15 சதவீதம் சம்பளம் டிசம்பர் 1ம் தேதியும் வழங்கப்பட வேண்டும்.
ஆனால் இதில் முதல் தவணை சம்பளமே சிலருக்கு இன்னும் கிடைக்கவில்லையாம். இதில் அணியின் கேப்டனாக செயல்பட்ட டேனியல் வெட்டோரி, ஆஸ்திரேலியா ஆல் ரவுண்டர் மெக்டோலாண்டு போன்ற வெளிநாட்டு வீரர்களும், சில இந்திய இளம்வீரர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அணி பணியாளர்களில் சிலருக்கும் அணி நிர்வாகம் சம்பளம் கொடுக்கவில்லையாம்.
இது குறித்து அணி நிர்வாகம் தரப்பில் எந்த பதிலும் இல்லாதது வேதனை அளிக்கிறது என்று சம்பளம் கிடைக்காமல் தவிக்கும் ஒரு வீரர் தெரிவித்துள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்வாகம் வீரர்களுக்கு சம்பள பாக்கி வைத்துள்ளது இதுவே முதல் முறை என்று தெரிகிறது.