டெல்லி: 2ஜி ஸ்பெக்டரம் ஏலத்துக்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் பரிந்துரைத்ததை விட குறைந்த விலையை மத்திய அமைச்சர்கள் குழு நிர்ணயம் செய்து, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்கில், ஆ.ராசா மத்திய அமைச்சராக இருந்தபோது கடந்த 2008-ம் ஆண்டில் ஒதுக்கீடு செய்த 122 ஸ்பெக்ட்ரம் லைசென்சுகளை உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் ரத்து செய்து உத்தரவிட்டது.
ரத்து செய்யப்பட்ட இந்த ஸ்பெக்ட்ரத்தை ஆகஸ்டு மாதம் 31ம் தேதிக்குள் வெளிப்படையான ஏல முறையில் ஒதுக்கீடு செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந் நிலையில், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், இந்த ஏலத்துக்கான அடிப்படை விலையை பற்றி பரிந்துரை செய்திருந்தது.
அதாவது கடந்த 2008ம் ஆண்டில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின்போது நிர்ணயம் செய்யப்பட்ட விலையைவிட 10 மடங்கு விலையை டிராய் பரிந்துரைத்தது. ஒரு மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரத்தின் அடிப்படை விலை ரூ. 3,622 கோடி என்று நிர்ணயித்தது.
இதற்கு தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் குறித்து முடிவெடுக்க அதிகாரம் அளிக்கப்பட்ட மத்திய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவின் தலைவராக இருந்த மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக அந்தப் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இந்தக் குழுவின் தலைவராக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நியமிக்கப்பட்டார்.
சிதம்பரம் தலைமையிலான இந்தக் குழுவின் கூட்டம், கடந்த ஒரு வாரத்தில் 2-வது நாளாக நேற்றும் நடந்தது.
அதில் ஸ்பெக்ட்ரம் ஏலத்துக்காக டிராய் நிர்ணயித்த அடிப்படை விலையை விட குறைவான விலையை நிர்ணயம் செய்யுமாறு மத்திய அரசுக்கு சிபாரிசு செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதாவது ஸ்பெக்ட்ரத்தின் தற்போதைய தற்போதைய மதிப்பில் 55 முதல் 65 சதவீதம் வரை அடிப்படை விலையை நிர்ணயம் செய்யலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது டிராய் பரிந்துரைத்ததைவிட 20 சதவீதம் விலை குறைவாகும்.
அதே நேரத்தில் ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டை வைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அடையும் லாபத்தில் 3 சதவீதத்தை மத்திய அரசுக்குத் தர வேண்டும் என டிராய் கூறியிருந்தது. ஆனால், இதை 5 சதவீதமாக உயர்த்துவது என்றும் சிதம்பரம் தலைமையிலான குழு முடிவு செய்துள்ளது.
இதன்மூலம் ஸ்பெக்ட்ரத்தின் விலையை குறைத்தாலும் அதனால் நிறுவனங்களுக்குக் கிடைக்கும் லாபத்தில் மத்திய அரசுக்குக் கிடைக்க வேண்டிய கட்டணத்தை உயர்த்துவது என இந்தக் குழு 'பேலன்ஸான' முடிவை எடுத்துள்ளது.